Friday, December 30, 2011

வாழ்த்து..

மணி மணியாய் சிந்தனை என்ற எனது வலைச் சரத்தைப் படிப்பவர்க்கும் விமரிசனம் செய்பவர்களுக்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி..

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, December 16, 2011

13 - ஓர் இனிய நினைவு

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் அப்போதுதான் நான் ஆசிரியப் பணியில் சேர்ந்திருந்தேன்.முதலில் மூன்று வகுப்புவரைதான் நான் கவனித்துவந்தேன்.அதன்பின் ஒவ்வொரு ஆண்டாக உயர்வு கிடைத்து ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியராக உயர்ந்தேன்.அப்போதெல்லாம் வாரம் ஒரு முறை மாணவர் இலக்கியக் கூட்டம் என்று ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும். அதை அந்தந்த வகுப்பாசிரியர் நடத்தவேண்டும்.   

கூட்டத்துக்குத் தலைவர் பேச்சாளர் கலைநிகழ்ச்சி என்றுஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி  தயாரிக்கவேண்டும். மாணவர்களின் துணையுடன் அந்த வாரக் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின் அதைப் பற்றிய அறிக்கையைத் தலைமை ஆசிரியை அவர்களுக்கு அனுப்பி அவரின் கையொப்பம் பெறவேண்டும்.இந்த நடைமுறை எட்டாம் வகுப்பு வரை இருந்தது.

அந்த வாரம் என் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் படி கூட்டத்துக்கு மாணவர் அனைவரையும் அமரவைத்தேன். கூட்டம் தொடங்கியபோது பார்த்தால் தலைமை தாங்கவேண்டிய மாணவனைக் காணோம். 
 
அவனைப் பற்றி விசாரித்தபோது மதியம் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.கடைசி நேரத்தில் அந்த மாணவன் தலைமை தாங்க அஞ்சி பள்ளிக்கே வராமல் நின்று விட்ட செய்தி தெரிந்தது. என்ன செய்வது கடைசிநேரத்தில் கூட்டத்தை நடத்தி ஆகவேண்டுமே. எனவே வகுப்பு ஆசிரியையான நானே தலைமை தாங்கினேன்.

. அந்தக் கூட்டம் பாரதியார் தினமாகக் கொண்டாடப் பட இருந்ததால் மாணவர்கள் பாரதியார் பாடல்கள் அவரைப் பற்றிய பேச்சுக்கள் என்று அழகாக நிகழ்த்தினர்.கடைசியாக  தலைவர்  சிறப்புரை ஆற்றவேண்டிய நேரம்.நான் எழுந்து நின்றேன்.மாணவர்கள் ஆவலோடு பார்த்தபடி இருக்க நான் "காணி நிலம்  வேண்டும்" என்று பாரதியாரின் பாடலை  எடுத்து பேசத் தொடங்கினேன்.

ராகமாகப் பாடலைப் பாடியவுடன் சற்றே சலசலத்த மாணவர்கள் கூட அமைதியானார்கள்.அதன்பின் நான் பேசத் தொடங்கினேன்.
"பாரதியின் ரசனை உள்ளம் எத்தகையது என்று பாருங்கள்.ஒரு காணி நிலம் வேண்டும்.அதில் ஒரு மாளிகை வேண்டும். அருகே கேணி இருக்கவேண்டும்.அருகே தென்னைமரங்களின் எண்ணிக்கை பத்து பனிரெண்டு இருக்கவேண்டும்.கேணி அருகில் நாம் அமர்ந்திருக்க, முத்துப்போல நிலாவொளி வீசவேண்டும். குயிலோசை நமது காதுகளில் இனிமையாக விழவேண்டும்.நமது மனத்தைக் குளிர்விக்கும் இளம் தென்றல் வீசி உள்ளத்தைக் கவரவேண்டும்.
அத்துடன் இந்த இனிமையான சூழலில் நல்ல கவிதையை நான் இசைக்கவேண்டும். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க ஒரு பத்தினிப் பெண் துணையாக வீற்றிருக்க வேண்டும்.
அந்தப் பாட்டுத் திறத்தால் இந்த உலகையே நான் காக்குமாறு அருள் செய் தேவி என்று கூறும் பாரதியின் கனவு எத்தகையது."என்று சொன்னவள் "இந்த அழகிய சூழலில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.உங்கள் உள்ளம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைகிறது.என்று சொன்ன போது அமைதியாக இருந்த அந்த அறையின் மூலையில் இருந்து ஒரு சின்னக் குரல் "ஆஹா,, த்சு" என்ற அனுபவித்த உணர்வுடன் கூடிய குரல் எழுந்தது.அதுவரை எந்தப் பெண்ணைப் பாடத்தில் மக்கு. புரிந்து கொள்வதில் மந்தம் என நான் நினைத்திருந்தேனோ அந்த மாணவியின் வாயிலிருந்து இந்த அனுபவித்த குரல் எழும்பியவுடன் நான் அசந்து போனேன். அவள் எத்தகைய ரசிகை எனப் புரிந்து கொண்டேன்.

அன்று முதல் கவிதையை ரசிக்கும் உணர்வு வேறு படிப்பறிவு வேறு எனப் புரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணை மரியாதையுடன் பார்க்குமாறு  கவிதை உள்ளம் எனக்குக் கட்டளையிட்டது. இன்றும் இந்த நினைவு எனக்குள் ஒரு நீங்கா இனிய நினைவாக நிறைந்துள்ளது.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, November 25, 2011

12--தேவை ஒரு திறமை.

தேவை ஒரு திறமை.
நாம்  எல்லோருமே  நம்  வாழ்க்கையில்  வெற்றி  பெறவே  விழைகிறோம்.விரும்பத்தக்க பண்புதான் என்றாலும் அதற்க்கும் சிலமுயற்சிகளை  நாம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது அல்லவா? வெற்றிக்கு மூல காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலில் புன்னகை. இந்தப் புன்னகை எத்தகைய மாற்றங்களை எதிர்ப்படுபவரிடம் காட்டுகிறது தெரியுமா?
நம்மை வேண்டியவராகக் காட்டும், நம்மை அறிந்தவராகக் காட்டும், ஏன் சில சமயங்களில் நம்மை உறவினறாகக் கூடக் காட்டும் அளவுக்கு இந்தப் புன்னகைக்கு பலம் உண்டு.அதனால்தான் புன்னகையே கோடிப் பொன் பெறும் என்றும் பொன்னகை எதற்கு புன்னகை போதுமே என்றும் கூறினர் நம் முன்னோர். பத்திரிகையாளர் திரு லேனா அவர்கள் தனது ஒரு பக்கக் கட்டுரையில் "உலகம் உங்களை விரும்ப வேண்டுமெனில் ஒருவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புன்னகையை உதிர்க்கத் தவறாதீர்கள்." என்று குறிப்பிடுகிறார்.முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தால் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அவரே உங்களை அறிந்தவர் போலப் பேசவும் தேவையான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் தயங்க மாட்டார்.இந்த வெற்றியின் ரகசியத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பர்?இனியேனும் புன்னகையை வெற்றிப் போருக்குரிய சிறந்த ஆயுதமாகக் கொள்வோம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, November 20, 2011

11-சொல்லாற்றல்.

      சொல்லாற்றல் என்பது பெரும் வரப்ரசாதம்.ஒருவருக்கு சொல்லாற்றல் இருந்தால் அவர் எந்த இடத்திலும் எந்த சொற்போரிலும் வெற்றி பெறலாம்.
நம் நாட்டில் பிறந்த பெரும் ஞானியர் பலரும் இந்த சொல்லினால் பல தத்துவங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.அப்படிப்பட்ட ஞானியருள் ஒருவர் கனகதாசர் என்ற கிருஷ்ண பக்தர்.இவரைப் பற்றி 'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற என் தளத்தில் எழுதியுள்ளேன்.
இந்த கனகதாசர் வியாசராயர் என்ற குருவிடம் சீடராக இருந்தார்.இவருடன் புரந்தரதாசர் போன்ற சில கிருஷ்ண பக்தர்களும் வியாசராயரிடம்  சீடராக இருந்தனர்.குரு கனதாசரின் ஞானத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினார்.தாழ்ந்த இனத்தில் பிறந்தவர் என்ற எண்ணம் தனது மற்ற சீடர்களிடம் இருப்பதை உணர்ந்த வியாசராயர் அவர்களின் எண்ணத்தை மாற்றி கனகதாசர் ஒரு மகான் என்பதை உலகுக்கு உணர்த்த எண்ணினார்
          ஒருநாள் வித்வான்களின் சபை கூடியிருந்தது. குருவான வியாசராயர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் திடீரென ஒரு கேள்வி எழுப்பினார்."சீடர்களே, நான் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்."என்றார். சீடர்கள் மெளனமாக இருந்தனர்.
"இந்த இடத்தில் இருப்பவர்களில் சுவர்க்கத்திற்குச் செல்பவர் யார் எனத் தெரியுமா?" அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஒவ்வொருவரையும்  குரு  கேட்டுக்  கொண்டே  வந்தார .
கனகனின் முறை வந்தபோது கனகதாசர் புன்னகையுடன் எழுந்து நின்றார்."சுவாமி, நான் போனால்... போவேன்." என்றபோது சபையே திடுக்கிட்டது.
புன்னகை புரிந்த வியாசராயர் "இந்த சபையில் இருப்பவரில் நீமட்டும்தான் சுவர்க்கம் செல்வாயா?"என்ற போதும், கனகதாசர் மீண்டும் அதே பதிலைக் கூறினார்.
சீடர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.கீழ் ஜாதியில் பிறந்த ஒருவன் சுவர்க்கம் செல்வானாம் என்ன துணிச்சல்?என்று தமக்குள் முணுமுணுத்தனர்.
அப்போது குருவானவர், "கனகா,நீ இவ்வாறு கூறுவதன் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்."என்றார்.
கனகதாசர் பணிவுடன் "குருதேவா, யார் ஒருவர் நான் என்ற அகந்தையை விட்டு விட்டு வாழ்கிறார்களோ அவரே சுவர்க்கம் செல்வார் எனக் கூறினேனே அல்லாது இந்தக் கனகன் போவேன் எனச் சொல்லவில்லை குருதேவா.என் உள்ளத்திலும் நான் எனும் அகந்தை விலகிவிட்டால் நானும் போவேன் என்று கூறினேன் சுவாமி." என்று கூறி வணங்கி நின்றான்.
அப்போது வியாசராயர் தமது சீடர்களைப் பார்த்து "இப்போது தெரிந்து கொண்டீர்களா கனகனின் பெருமையை.சிறந்த ஞானம் உள்ளவன் கனகன்.அந்த கிருஷ்ணனுக்கு தாசன். 
இவனது குல பேதம் பார்க்காமல் இனியேனும் இவனது ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.பக்திக்கும் ஞானத்திற்கும் குலம் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."
என்று உரைத்து கனகனை அழைத்து தனது முக்கிய சீடர்களுள் ஒருவராக அமர்த்திக் கொண்டார்.
இப்படி ஒரு சொல்லிலே பொருள் கூறி அதன் மூலம் தனது ஞானத்தை உணர்த்திய கனகதாசரின் சொல்லாற்றல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆற்றல் அல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 22, 2011

10- குழந்தைத் தனம்.

என் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு அவன் அப்பா ஒரு சின்ன சைக்கிள் வாங்கித் தந்தார்.அந்த சைக்கிளில் அவன் ஏறிக்கொண்டு என் நான்கு வயது மகளைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட்டுக் காட்டுவான். ஆனால் அவளைத் தன் சைக்கிளைத் தொட விடமாட்டான்.
ஒவ்வொரு முறையும் விளையாடச் சென்று விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் வருவாள என்மகள்.அன்றிலிருந்து தனக்கும் அதேபோல் சைக்கிள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினாள். நாங்கள் இருவரும் அலுவல் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா, சைக்கிள் எங்கே? என்று அழ ஆரம்பிப்பாள்.எங்களின் நிதி வசதி அப்போது உடனே சைக்கிள் வாங்கித் தரும் நிலையில் இல்லாததால் அவளைச் சமாதானம் செய்தும் வேறு விளையாட்டுக் காட்டியும் ஏமாற்றி வந்தோம்.
ஒருநாள் என் மாணவர்கள் பரீட்சைக்காகக் கட்டவேண்டிய பணத்தையெல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா மாணவர்களும் கொடுத்தார்களா, அத்தனை பேரின் பணமும் வந்துவிட்டதா,என சரி பார்த்துக் கொண்டிருந்தேன் மறுநாள் அப்பணத்தைக் கட்டவேண்டும்.என் மகளும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மளிகைக் கடைக்காரர் அவசரமாகப் பணம் வேண்டும் எனக் கேட்டு வந்து நின்றார்.
அவரிடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் அன்று மாலையே கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மகள் குறுக்கிட்டு" இல்லே அங்கிள், அம்மா பொய்சொல்றாங்க. நிறைய ரூபா வச்சிருக்காங்க. எனக்குக் கூட சைக்கிள் வாங்கித் தரமாட்டேங்கிறாங்க,"என்று விம்மும் குரலில் கூறினாள். 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கடைக்காரர் என்ன நினைத்துக் கொள்வார் என்னைப் பற்றி என நினைத்துப் பதைத்துப் போனேன்.
அவரிடம் பரீட்சைக்கான மாணவர்களின் பணம் என்ற உண்மையைச் சொல்ல  அவரும் அதைப் புரிந்து கொண்டு,
"அதாம்மா,குழந்தைகளை வச்சிக்கிட்டு எந்தமாதிரியான காரியங்களைஎல்லாம் செய்யக் கூடாதுன்னு இப்பப் புரியுதுங்களா" என்று  எனக்கு அறிவுரை கூறிச் சென்றார்.அதன் பின்னரே நான் அப்பாடா என மூச்சு விட்டேன்.
குழந்தைகளுக்கு எந்த சமயம் எதைச் சொல்லக் கூடாது என்பதோ உண்மையைப் புரிந்து கொள்ளும் நிலையோ இல்லை.அதனால் அவர்கள் குழந்தைத் தனமாக எதையாவது பேசி நம்மை சிக்கலில் மாட்டி விடுவார்கள்.
அந்தக் குழந்தைத் தனத்தை எதிர்பார்த்து நாமும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 15, 2011

9-அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பு.
அப்பா என்றாலே பிள்ளைகளுக்குச் சற்று பயம்தான்.அப்பா எவ்வளவு அன்பு காட்டினாலும் சில சமயங்களில் அவர் காட்டும் கடுமையும் கோபமும் நமது மனதில் பயத்தை உண்டாக்கி விடுகிறது.அதனால் அப்பா என்றாலே சற்று பயம்தான் எல்லோருக்கும்.
என் அப்பாவும் அப்படித்தான்.அவர் எப்போது கோபத்தைக் காட்டுவார் எப்போது சிரிப்பார் என்றே தெரியாது.அதனால் அவர் ரொம்ப கோபக்காரர் என்றே நாங்கள் முடிவு செய்து சற்று ஒதுங்கியே இருப்போம்.
தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியது. பள்ளி ஆசிரியராக இருந்த எங்கள் சித்தப்பா வந்திருந்தார் அவர் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவார். அதனால் சிறுவர்களான நாங்கள் அவரது பேச்சை ரசிப்போம். அவர் இருக்கும் இடத்திலேயே நாங்களும் இருப்போம். அப்படித்தான் ஒருநாள் இரவு.சாப்பாடு முடிந்து சித்தப்பா அப்பாவுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.சித்தப்பா ஒரு நாற்காலியிலும் அப்பா சாய்வு நாற்காலியிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.நாங்களும் சித்தப்பாவின் பேச்சை ரசிப்பதற்காக போய் அமர்ந்தோம்.
அந்த இடம் சற்று சிறியதாக இருந்ததால் அவரவருக்குக் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நானுமப்பாவின் தலைப் பக்கம் திண்ணையில் இருந்த சிறிய இடத்தில் ஒண்டியபடி அமர்ந்து கொண்டேன்.
அப்பது அம்மா என்னிடம் பால் குவளையைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.நானும் அதைக் கையில் வாங்கிக் கொண்டேன்.அந்த சமயம் பார்த்து சித்தப்பா ஏதோ ஜோக்கடித்தார்.அனைவரும் குபீரென்று சிரிக்க நான் வாய் நிறைய ஊற்றிக்கொண்ட பாலை புர்ரென நீர்வீழ்ச்சிபோல வெளியேற்றினேன்.அந்த நீர்வீழ்ச்சி சரியாக என் முன்னால் தலைவைத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த என் அப்பாவின் வழுக்கைத் தலயில் விழுந்து உடலெங்கும் வழிந்தது.நான் உமிழ்ந்து முடிக்கும் வரை அப்படியே அமர்ந்திருந்த அப்பா மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தார்.
எங்கள் அனைவருக்கும் அதுவும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அப்பா புன்னகையுடன் பார்த்து, "முடிந்ததாம்மா? இன்னுமிருக்கா?"என்று கேட்டுச் சிரித்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்திலும்  மிக்க ஆனந்தமேற்பட்டது.
அப்பாவின் அன்பு எத்தகையது, அவர் கண்டிப்பெல்லாம் அன்பின் அடிப்படையில்தான் என்பதை அறிந்தபோது அவரது அன்பை எண்ணிக் கண்களில் நீர் நிறைந்தது.இப்போதும் தான்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, August 29, 2011

8. இவர்கள் மனிதர்கள்

இவர்கள் மனிதர்கள்.
ஒரு  ஞாயிற்றுக்கிழமையன்று அம்பத்தூரிலிருக்கும் என் உறவினரைப் பார்த்து வரலாம் எனப் புறப்பட்டோம்.நாங்கள் செல்லும் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அத்துடன் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.அதனால் கொஞ்சம் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு போனோம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நாங்களும் கொண்டுவந்த பழங்களைப் பெரியவரிடமும் பிஸ்கட்டுகளைக் குழந்தைகளிடமும் கொடுத்தோம்.
அந்தப் பெரியவரின் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வீட்டு இல்லத்தரசி எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தவே சம்மதித்துவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது வாயிலில் "சாமீ..".என்ற குரல் கேட்டது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் "யாரது வள்ளியா? வா..வா..நல்லாருக்கியா?" என்று வரவேற்றார்.
சுமார் எழுபத்தைந்து வயதுகொண்ட முதிய பெண் உள்ளே வந்து மூலையில் அமர்ந்தாள்.உழைத்து ஓடான ஒல்லியான உடல்.கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன.
அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் கவனிப்பதைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
அந்தப் பெண்ணும் தன் உடன் பிறந்தவரிடம் கூறுவது போல்  தன்னைப் பற்றிய விவரங்களைஎல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.அவளுக்குக் காப்பி கொடுக்குமாறு கூறியவர் நாங்கள் கொண்டுபோய்க் கொடுத்த பழங்களிலிருந்து சில பழங்களை அவளுக்குக் கொடுத்தார். மிக்க சங்கோஜப் பட்டவளாய் "இதெல்லாம் எனக்கெதுக்கு சாமீ.நீங்க சாப்புடுங்க."
என்று மறுத்தபோதும் வற்புறுத்தி அவளை சாப்பிடச் சொன்னார்.
சற்று நேரத்தில் அவரது மருமகள் அவரிடம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தாள்.அதை எண்ணிப் பார்த்த அவர்,"ஏம்மா, ஒரு அம்பது ரூபாய் கூடக் கொண்டு வா."
என்று கூறியவர் அந்தப் பணத்தை அந்த முதியவளிடம் கொடுத்தார்."வள்ளி, இந்த மாசத்திலிருந்து அம்பது ரூபாய் கூடக் கொடுத்திருக்கேன்.இனிமேல் இருநூறு ரூபாய் உனக்கு பென்ஷன்." என்றவர் சிரித்தபடியே அவளுக்கு விடை கொடுத்தார்.காலில் விழாத குறையாக அவரை வணங்கி விடை பெற்றாள் அந்த முதியவள்.
இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர் "இந்தக் கிழவி சிறுவயதிலிருந்து எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தவள். இப்போது முடியவில்லை. அதனால் அவளை நிறுத்திவிட்டேன்.ஆனால் நாமெல்லாம் பென்ஷன் வாங்கும் போது இருபது வருடமாக வேலை பார்த்த வேலைக் காரிக்கும் நாம் பென்ஷன் கொடுப்பதுதானே முறை."
என்று சொல்லிச் சிரித்தார்.
நான் திகைத்தேன். மனிதநேயம் என்பது இதுதானோ. தன்னைப்போல் பிறரை நினைப்பதை விட சிறந்த மனித நேயம் வேறு உண்டோ. 
என் மனதுக்குள்ளும் ஒரு புரட்சி தோன்றியது. வள்ளலாரும் வள்ளுவனாரும் மற்ற மகான்களும் இதைத்தானே கூறினார்கள்!
மறுநாள் என் வீட்டு வேலைக்காரியை ஒரு சகோதரியைப் போலப் பார்த்தேன்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, August 7, 2011

அப்பாவின் பரிசு

அப்பாவின் பரிசு.

பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவை நினைவில் இல்லை.ஆனால் யாரை மிகக் கண்டிப்பானவர் என்று நினைத்து அருகில் நெருங்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தேனோ அவர் எதிர்பாரா விதமாக எதிபாரா சமயத்தில் பரிசளித்தார் என்றால் அதை மறக்க முடியுமா? ஆம். என் தந்தையார்தான் எனக்கு எதிர்பாரா பரிசளித்தவர். எப்பேர்ப்பட்ட பரிசு அது!.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளும் வார மாதப் புத்தகங்களும் அதிகமாக இல்லை. கல்கி விகடன் குமுதம் போன்ற ஒரு சில பத்திரிகைகளே உண்டு.அவற்றுள் கல்கண்டு என்ற சிறுவர் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது.அப்போது அது சிறுவர் பத்திரிகையாக இருந்தது.
தமிழ்வாணனின் தொடர்கதையைப் படிக்க நாங்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருப்போம்.மர்ம மனிதன் ,பயங்கர நகரம் போன்ற துப்பறியும் நாவல்கள் எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்த காலம்.
அப்போதுதான் கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலர் பற்றிய விளம்பரம் வந்தது.சாதாரண பத்திரிகைமீதே நாங்கள் அளவு கடந்த ஆவல் கொண்டிருக்கும்போது மலர் வெளிவருகிறது என்றால் கேட்கவேண்டுமா? தீபாவளியை நாங்கள் எதிர்பார்த்ததை விட கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலரைத்தான் அதிகமாக ஆவலுடன் எதிர்பார்த்தோம்.நண்பர்களுள் யார் வாங்கப் போகிறார்களோ என எதிர்பார்ப்பு வேறு.கதைப் புத்தகம் படிக்கும் நேரத்தில் பாடத்தைப் படித்தால் மதிப்பெண் அதிகம் வாங்கலாமே என்ற தந்தையாரின் கண்டிப்பினால் கிடைக்கும் கல்கண்டு பத்திரிகையை மறைத்து மறைத்து வைத்துப்  படிப்போம்.
தீபாவளிமலர் விலை ஒரு ரூபாய்.எங்களுக்கு அது அதிகம்தான்.பத்திரிக்கையின் விலை இரண்டணா.அதை வாங்குவதே மிகுந்த சிரமம்.
ஒரு ரூபாய்க்கு எங்கே போவது. அம்மாவிடம் சொல்லிப் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.பத்திரிக்கை படிப்பதையே தவறென்று சொல்லும் அப்பாவா மலர் வாங்கித்தருவார்?அவரே எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு.அவரே ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியரும் கூட.வீட்டில் இருக்கும்போது கூட ஏதேனும் பாடம் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.நாட்கள் நகர்ந்து தீபாவளி நாளும் வந்தது.
அதிகாலை கங்கா ஸ்நானம் முடித்து அப்பா எல்லோருக்கும் புதுத் துணி கொடுத்து ஆசி கூறுவார்.அந்த நிகழ்ச்சியின் போது வீட்டு அங்கத்தினர் அனைவரும் நடுக்கூடத்தில் ஆஜரானோம். அப்பா அனைவருக்கும் புதுத் துணியைக் கையில் கொடுத்தார்.எப்போதும் போல நானும் கையை நீட்டி வாங்கிக் கொண்டேன். உனக்கு ஸ்பெஷல் பரிசுடீ பிரித்துப் பார்  என்றார் அம்மா. அப்பா புன்னகைத்தார்.நான் என்புதுத்துணியைப் பிரித்துப் பார்த்தேன்.
ஆடையின் நடுவே புத்தம்புதிய கல்கண்டு தீபாவளி மலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னால் மகிழ்ச்சியையும் திகைப்பையும் அடக்கமுடியவில்லை.அப்பா!.....என்று மகிழ்ச்சியில் கூவிவிட்டேன்.அந்த நிமிடம் என் மனநிலை எப்படி இருந்தது என்பதைக கூறவே இயலாது.அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் மனம் தந்தையாரின்  அன்பை எண்ணி பெருமிதம் கொள்கிறது.
எதிர்பாராமல் கிடைத்த அப்பாவின்  அந்தப் பரிசுக்கு இணையாக என்னால் வேறு எந்தப் பரிசையும் எண்ண முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, July 25, 2011

அம்பது பைசா மகத்துவம்

அம்பது  பைசா  மகத்துவம் 

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சிறியஸ்டேஷனில்  வண்டி நின்றது.ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தஎன்  முன் ஒரு பிஞ்சுக்  கை நீண்டது. "அம்மா ஏதானும் குடுங்கம்மா".என்ற குரலுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன இரண்டு கண்கள். நானும்என்  பையைத் துழாவிப் பார்த்தேன்.ஒரு ஐம்பது பைசாதான் இருந்தது. மீதி எல்லாம் நோட்டுக்களாக இருந்தன.அந்தச சிறுவனிடம்,
"இந்தாப்பா சில்லறை இல்லே. இதுதான் இருக்கு." என்றபடி அந்த நாணயத்தைக் கொடுத்தேன். அதைக் கையில் எடுத்துப்  பார்த்த அந்தப் பிச்சைக்காரன் பின்னர்  என்னைக் கூர்மையாகப் பார்த்தான். 
"இந்தாம்மா, இதை நீயே வச்சுக்க." எட்டணா நாணயம் இப்போது என் முன்னே சிரித்தது. எட்டணா நாணயத்தை விசிறியடித்த சிறுவன் அடுத்த பெட்டிக்குப் போய் விட்டான்.
அப்போது அந்த எட்டணாவின் மதிப்பு ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பது என் நினைவுக்கு வந்தது.சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னே நான் பயணித்தேன்.எனக்கு அப்போது பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்.எங்கள் ஊர் தேனியில் வாரச் சந்தை நடக்கும்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடும்.அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து வியாபாரிகள் தங்களின் விளைந்த பொருளைக் கொண்டு வந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பார்கள்.ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் இந்தச் சந்தையில்இருந்துதான்  பொருள் வாங்கி வருவார்கள். மளிகைசாமானில் இருந்து காய்கறி துணி வகைகளும் ஆடு மாடு வியாபாரம் வரை கூட இங்கு நடக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்லும் நபர் நானும் எனக்குத் துணையாக என் தம்பியும்தான்.
அப்பா எட்டணாவை சில்லரையாக மாற்றித் தருவார். அம்மா இரண்டு பைகளைத் தருவார். ஒரு பையில் கிழங்கு வகை. மற்றதில் பச்சைக் காய்கள் என்று பிரித்துப் போட்டுக் கொண்டு வரச் சொல்லுவார்.நானும் தம்பியின் கைப்பற்றிக் கொண்டு சந்தைக்குச் செல்வேன்.அங்கு நான் வாங்கும் பொருள்களின் அளவும் விலையையும் கேட்டால் அது கனவுக் காலமோ என்று தோன்றுகிறது.
அந்த விலைப் பட்டியலை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
வெங்காயம் சின்னது...ஒரு வீசை அதாவது இப்போதைய ஒன்றரை கிலோ ஒன்றேகால் அணா (எட்டு பைசா)
உருளைக்கிழங்கு ஒன்றரை அணா. சேனை  பெரியது இரண்டு அணா.  சேப்பங்கிழங்கு முக்கால் அணா.(ஐந்து பைசா.)
இந்த அளவுகளில் பாதிதான் வாங்குவேன்.அதாவது இத்தனையும்  மூன்று அணாவில் முடிந்து விடும்.

அடுத்து பச்சைக் காய்கறி விற்கும் இடம் வருவோம்.எந்தக் காய் எடுத்தாலும் வீசை ஒன்றேகாலணா. வெண்டை, கத்தரி,  கோஸ்,பீன்ஸ் என்ற காய்களை ஒவ்வொன்றும் அரையணாவுக்கு வாங்குவேன்.மலையாகக் குவிந்திருக்கும் காய்களில் அளவு பார்க்காமல் தட்டு நிறைய அளந்து போடுவார் கடைக்காரர். அது ஒரு கிலோவாகவோ ஒன்றரைக் கிலோவாகவோ இருக்கலாம்.
நாட்டுக் காய்கள் விலை குறைவாக இருக்கும் ஆனால் கோஸ் பீன்ஸ் சற்றுக் கூடுதலாக  இருக்கும்.அவரை பீர்க்கு 
புடல் பாகல் காய்களெல்லாம் வீட்டு வாசலிலேயே காய்க்கும் அதனால் அவற்றை வாங்கவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது.

இந்தக் காய்கள் முழுவதும் ஆறு அணாவில் முடிந்திருக்கும். கையில் இன்னும் இரண்டணா இருக்கும்.பழங்கள் விற்கும் பகுதிக்குப் போய் ஒரு சீப்பு வாழை ஒரு அணாவுக்கும் 
ஒரு மடி இலை அதாவது ஐந்துவாழை  இலைகள் அரை அணாவுக்கு வாங்குவேன். இன்னும் இருக்கும் அரை அணாவுக்கு வரும் வழியில் அணாவுக்கு பதினாறு நுங்கு கிடைக்கும் எட்டு நுங்குகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவோம்.

தூக்க முடியாத கனத்துடன் வீட்டுக்கு வந்து அவற்றைத் தரையில் கொட்டுவோம்.ஒவ்வொரு காய்கறியைத் தனியாகப் பிரிக்கவே ஒரு மணி நேரம் ஆகும்.
 இப்படிப்பட்ட எட்டணாவை அந்தப் பிச்சைக்காரச் சிறுவன் எவ்வளவு அலட்சியப் படுத்திவிட்டான்.ஒருகாலத்தில் அந்த எட்டணா எவ்வளவு மதிப்புடன் இருந்தது.காலத்தின் கோலத்தால் அது மதிப்பிழந்து போய்விட்டாலும் என்னைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் அதை மறப்பார்களா? மறக்கத்தான் முடியுமா?









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, July 15, 2011

என் முதல் புகைப்படம்

.
என் பேத்தி தன் குழந்தையை விதம் விதமாய்ப் புகைப் படம் எடுப்பதைப் பார்த்து நான் இப்போது மலைத்துப் போகிறேன்.எங்களது இளமைக் காலத்தில் 
புகைப் படம் எடுப்பது என்பது மிகவும் அபூர்வம். அத்துடன் புகைப் படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்ற மூட நம்பிக்கையும் இருந்தது.
மிகவும் தேவை ஏற்பட்டால் ஒழிய  படம் எடுப்பது என்பது மிகவும் ஆடம்பரமான ஒன்றாகவே கருதப்பட்ட காலம் அது.
அந்தமாதிரி நேரத்தில் இளம் வயதுடைய நான் ஒரு புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டதில் தவறில்லையல்லவா?

        ஆனால் ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டும்.அந்த ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ஒருநாளைய செலவுப் பணம்.அந்த ஒரு ரூபாயில் நான்கு  அணாவுக்கு துவரம்பருப்பு ஒரு அணாவுக்குப் புளிஇரண்டு  அணாவுக்கு மிளகாய் தனியா அரையணாவுக்கு கடுகு உளுத்தம்பருப்பு நான்கு அணாவுக்கு எண்ணெய் மீதி காசுக்கு இரண்டு வகை காய்களை வாங்கி வந்து விடுவார் என் பாட்டி. அத்துடன் உடன் அழைத்துச் செல்பவருக்கு கொசுறாக கொஞ்சம் வெல்லமும் சுவைக்கக் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு வாங்கிவந்த பொருளிலேயே எங்கள் அனைவருக்கும் இரண்டு வேளைக்குமான சாம்பார் பொரியல்முடிந்துவிடும். 

         இந்த நிலையில் புகைப் படத்திற்காக ஒரு ரூபாய் செலவழிப்பது ஆடம்பரமில்லாமல் வேறென்ன? ஆனால் என்னுடைய புகைப்படக் கனவு மட்டும் தீரவேயில்லை. எப்படியும் புகைப் படம் எடுத்து என்முகத்தை அதில் பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டேன். அந்த அருமையான நாளும் வந்தது.ஒரு மதிய நேரம் பள்ளி விடுமுறைநாள். வாசலில் நெல் காயப் போட்டிருந்தார்கள். அதைக் காவல் காத்தபடி ஒரு புத்தகத்தை வைத்துப்  படித்துக் கொண்டிருந்தேன்.

"போட்டோ எடுக்கறீங்களா... போட்டோ. ஒரு  நிமிடத்திலே உங்கள் அழகு முகத்தை நீங்களே பார்க்கலாம்."

ஒரு பெரிய புகைப்படக் கருவியைத் தூக்கியபடி வந்துகொண்டிருந்தார் புகைப்படம் எடுப்பவர்.அவரைச் சுற்றி ஒரு பட்டாளமாகவே சிறுவர் சிறுமியர் 
சூழ்ந்து கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் என் கண்களில் தெரிந்த ஆவல் மின்னலைப் பார்த்திருக்கக் கூடும்.என் முன்னால் தன் புகைப் படக்கருவியை  நிறுத்தினார். அது தன் மூன்று கால்களைப் பரப்பிக் கொண்டு நின்றது.நான் உள்ளே ஓடினேன். உடன் என் பாட்டியை அழைத்து வந்தேன்.என் பாட்டி பேரம் பேச ஆரம்பித்தார்.
"இந்தாப்பா. எட்டணாவுக்கு எடுக்கிறதா இருந்தா  எடு. இல்லே நடையைக் கட்டு."கறாராகப் பேசிய பாட்டியின் பேரத்துக்கு ஒப்புக் கொண்டவர் என்னை வந்து ஒரு நாற்காலியின் மேல் அமரச் சொன்னார்.என் பாட்டி "கொஞ்சம் இருப்பா," என்றவர் உள்ளே சென்று ஆறு மாதமே ஆகியிருந்த 
என் தம்பியைத் தூக்கிவந்து என்மடியில் அமரவைத்தார்.
"வயசுப்  பொண்ணைத் தனியாப் படம் எடுக்கக் கூடாது. தம்பியை மடியிலே வச்சுப் படம் எடுத்துக்கோ." தம்பியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தேன்.
என்னைச் சுற்றி ஒரு கூட்டமே சூழ்ந்திருக்க நான் அதன் நடுவே ஒரு நாயகியாகவே ஆகியிருந்தேன்.
புகைப்படம் எடுப்பவரோ விரைவாக எடுப்பதாகக் காணோம்.என்னைப் பார்த்த அந்தத் தெருவாசிகளில் சில பேருக்கும் என்னைப் போலவே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆசை வந்து விட்டது."என் பையனையும் படம் எடப்பா. அதன் பிறகு எங்களையும் எடு."என்று வரிசை வரவே புகைப் படக்காரருக்கு குஷி.நல்ல வசூலாகும் என்று மகிழ்ச்சியுடன் என்னைப் படம் எடுத்து சற்று நேரத்தில் ஒரு தபால் கார்டு அளவுக்கு புகைப்படம் ஒன்று தந்தார்."பாப்பா, படத்திலே ஈரம் இன்னும் காயலே. கை படாமே பாத்துக்கோ" என்றபடியே கொடுத்தார்.அந்தப் படத்தில் உண்மையாகவே நான் மிகவும் அழகாக இருப்பதாகவே தோன்றியது. எனது முதல் புகைப்படம் அல்லவா? அடிக்கடி அதை யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பிறகு காலம் ஓடினாலும் எத்தனையோ புகைப் படங்கள் எடுத்துக் கொண்டாலும் அந்த ஒரு படத்துக்காக ஏங்கியதும் அதை எடுத்துக் கொண்ட சூழ்நிலையும் என் மனதைவிட்டு நீங்காத பசுமையோடு இருக்கிறது.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, June 27, 2011

4 . பொன்னுலகாகும் பூவுலகம்.

மனித உயிர் - அது மகத்துவம் வாய்ந்தது.மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். குறையில்லா  மனிதராய்ப் பிறக்க 
மாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அதைத்தான் அவ்வையாரும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அதனினும் அரிது தானமும் தவமும் செய்தல் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய உயர்ந்த மனிதப் பிறவி பெற்றிருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது நாம் பெற்ற பெரும் பேறு என்றுதான் கொள்ள வேண்டும்.இப்படி உலகில் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்தவரை வாழ்ந்தார் என இயம்பிவிட  இயலாது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்தாரையே உண்மையில் வாழ்ந்தவராக உலகச் சான்றோர் குறிப்பிடுவர். அப்படி வாழ்பவர் மிகச் சிலரே.

"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் 
 தமியர் உண்டலும் இலரே."எனப் புறநானூறு புகல்வதப் போல வாழ்ந்தவர்களும் பிறர்க்கென வாழ்ந்து தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தவர்களுமே உலகில் வாழ்ந்தவர்களாவர் எனப் புலவர் குறிப்பிடுவர். என்றும் வாழ்பவர்களும் இவர்களே.

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய பாரதியும் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழக்கமிடுகிறார்.
வள்ளுவரும்"
                       "இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக 
                         இவ்வுல கியற்றி யான்."  எனக் கூறுகிறார்.
இவ்வரிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன? உலகில் பசித்துன்பம் இல்லாதிருக்க வேண்டும் என்பதையும் இருப்பவன் இல்லாதவனுக்களித்து அவன் பசியைப் போக்கவேண்டும் என்ற கருத்தையும் தெளிவாக்குகிறதன்றோ?

"எல்லோரும் வாழவேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.நல்லோர்கள் எண்ணம் இது. இதுவே நல்லற வாழ்வு  " என்ற கவிஞனின் கூற்று நனவாக வழி வகுத்தலே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை." என்றான் வள்ளுவன்.
பகுத்துண்ணும் பண்பும் எல்லா உயிர்களையும் காக்கின்ற கருணையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலவுமானால் அந்த நாடு விண்ணவர் நாட்டுக்கு இணையாக விளங்கு 
மென்பது சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. ஞானத்திலே பரமோனத்திலே அன்னதானத்திலே உயர் மானத்திலே உயர்ந்த நாடு நமது பாரதம் . இங்கே பஞ்சமும் நோயும் பசியும் தீமையும் களையப்பட வேண்டுமெனில் நமது உள்ளங்களில் எல்லாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளல் பெருமான் பயிர் வாடிய போது தன் உயிர் வாடியதாகக் கசிந்து உருகினார்.பயிர் நீரின்றி வாடுவதாக இருந்தாலும் அந்த வாட்டம் தன் உயிரையே வாட்டுவதாக எண்ணி வேதனைப் பட்டவர் அப்பெருமான்.

"தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே உண்டால் அம்மா இவ்வுலகம்." என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன்.
தமக்கென வாழாது பிறருக்காக வாழுகின்றவர் இருப்பதினாலேயே இவ்வுலகம் இன்னும் நிலை பெற்றுள்ளது என்கிறான். எனவே பிறர்க்கென  வாழும் உயர்ந்த பண்பு இவ்வுலகம் வாழ வழி வகுக்கின்றது.'வாழு வாழவிடு' என்ற தத்துவத்தின்படி வாழப் பழக வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்." என்றார் சங்கக் கவி கணியன் பூங்குன்றனார். உலகம் முழுமையும் ஒன்று.சாதி, இனம், மதம், என்ற வேறுபாடுகள் அற்றது.என்ற கருத்தை 
அனைவரும் நம் உறவினர் என்ற ஒரு சொல்லிலே அடக்கிக் கூறினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

மேல்நாட்டிலே இந்துமதக் கருத்துக்களைக் கூறச் சென்ற நம் நாட்டுத் தங்கம் விவேகானந்தரும் சகோதரர்களே, சகோதரிகளே! என அழைத்ததன்மூலம் இந்தஉண்மையையே  உறுதியாக்கிச் சென்றுள்ளார்.

உயர்ந்த மலையும் ஓங்கிய வானும் வீசும் தென்றலும், பரந்த கடலும் எப்படி ஒருவனுக்கே உரிமையுடையன அல்லவோ அதே போல் வாழும் உரிமையும் ஒருவனுக்கே சொந்தமல்ல. அனைவருக்கும் இந்த  உரிமை உண்டு என உணரவேண்டும்.

நாமும் வாழ்ந்து பிறரும்  வாழ வழி வகுப்பதே சீரான பாதை சிறந்த பாதை. இந்த உண்மையை உலகத்தார் அனைவரும் பற்றினால் இப்பூவுலகம் பொன்னுலகாய் மாறிவிடாதா?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Wednesday, June 22, 2011

விட்டுக் கொடுப்பதே விவேகம்

நாங்கள் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தோம்.பக்கத்துப் போர்ஷனில் ஒருகுடும்பம்  குடியிருந்தது. அந்த குடும்பத் தலைவி மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகி வந்தாள்.நல்ல பண்புள்ள பெண்ணாகத் தெரிந்தாள். நானும் மிகவும் அன்புடன் பழகி வந்தேன். அந்தப் பெண் அடிக்கடி என்னுடன் என்வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பாள்..
சில நாட்கள் சென்றன. இப்போதெல்லாம் அந்தப் பெண் என்னைப் பார்க்கவே வருவதில்லையே என்று சிந்தித்தேன்.
.வீட்டு வேலைக்காரி மூலமாக விஷயம் தெரிந்தது.

அவர்களுக்கு  இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது பெண்ணின் திருமணத்தில் தான் பிரச்சினை.தன் அண்ணன் மகனுக்குத் தன் இரண்டாவது மகளைத் தரவேண்டும் என்பது தாயின் ஆசை. தன் தங்கையின் மகனுக்குத்தான் தரவேண்டும் என்பது தந்தையின் ஆசை.இரண்டு பேரின் பிடிவாதத்தாலும் வீட்டில் பேச்சு வார்த்தையில் கசப்பு தெரிந்தது. பெற்றோரின் இந்தப் போராட்டத்தால் திருமணம் ஆகவேண்டிய  பெண்ணும் எப்போதும் சோகமாக இருந்தாள்.

வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது.  ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் ஒரு நாள் அந்த அம்மாள் என்னைத் தேடி வ்ந்தார்.
" நான் என் உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். மாலையில்தான் வருவேன் என் கணவர் வந்து கேட்டால்   சொல்லுங்கள்" என்றவளை உட்காரவைத்தேன்.

அவளது மகிழ்ச்சியற்ற முகம் என் மனதை வாட்டியது. இந்த நிலைக்கு யார் காரணம்? அவளேதான். என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
"கொஞ்சநேரம் உட்கார். உன்னிடம் பேசவேண்டும். " என்றேன். அமர்ந்தாள். 
"உன் மனதில் என்ன குறை இருக்கிறது? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றபோது  அவள் கண்கள் கலங்கிவிட்டன.
சற்று நேரம் தயங்கியவள் தன் கணவனின் பிடிவாதத்தைப் பற்றிக் கூறி மூக்கைச் சிந்தினாள்.
நான் புன்னகைத்தேன்."அடி பயித்தியமே, உன் மூத்த மகளை உன் தாய் வீட்டு உறவுக்குக் கொடுத்திருக்கும் போது இரண்டாவது பெண்ணை கணவர் வீட்டு  உறவுக்குக் கொடுப்பதுதான் முறை. குடும்பத்தில் உறவுகளின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். நீ விட்டுக் கொடுப்பதால் உன் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தடை என்ன? எப்போதும் விட்டுக் கொடுப்பதை விட பெரிய வெற்றி வேறு இல்லை.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கணவன் மனைவிக்குள் வெற்றியா தோல்வியா எனப் பார்க்காதே விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர் என்பதை மறவாதே. உன் குடும்ப மகிழ்ச்சியை உன் பிடிவாதத்தால் இழந்து விடாதே. என்றேன்.அவளுக்கு மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. 

மறுநாள் அவள் வீடு மீண்டும் கலகலப்பானதை அறிந்தேன். அந்தக் குடும்பத்தை விட நான் மிகவும் மகிழ்ந்தேன்.
பிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில்  உண்மையான வெற்றி என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 10, 2011

சிறுவன் காட்டிய சிந்தனை..

எனது இருபதாவது வயதில் பட்டம் பெறவேண்டும் என்று முயன்றேன். அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்த நான் தனியாக பி.யு.சி. எழுதினேன்.


தேர்வில் வெற்றியும் பெற்றேன். பின்னர் பி.ஏ. தேர்வுக்குப் படித்தேன். பள்ளியில் பணி புரியும் நான் பள்ளி வேலை வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மாலை நேரக் கல்லூரிக்கும் போய்ப் படித்தேன். அந்த முறை தேர்வில் வெற்றி பெறாததால் அதோடு என் படிப்பையும் பட்டம் பெறவேண்டும் என்ற என் ஆசையையும் கட்டித் தூர வைத்து விட்டேன்.
இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்குப் போக நேர்ந்தது.நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.மாலை நேரம். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. 


அப்போது ஒரு சிறுவன் அவனுக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும்.கையில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கள் பெட்டியில் ஏறினான்.ஒவ்வொருவரிடமும் சென்று புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.சிலர் வாங்கிக் கொண்டனர்.நான் கால் நீட்டி அமர்ந்திருந்தேன்.என்னைத் தாண்டி அவன் செல்லும்போது அவன் காலை என் கால் தடுக்கி விட்டது. 

கீழே விழுந்தவன் புத்தகங்களை சரியாக அடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து சாரிம்மா. என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். காலை நீட்டி அமர்ந்தது என் தவறு. நான் தான் அந்தச் சிறுவனுக்கு சாரி சொல்லவேண்டும் ஆனால் அந்தச் சிறுவன் என் தவறைத் தன்மேல் போட்டுக் கொண்டு சாரி சொன்ன அவன் பண்பு என்னை சிந்திக்க வைத்தது.

அவனை அழைத்து அன்புடன் அடி பட்டதாப்பா என்றேன். அவனோ புன்னகையுடன் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வியாபாரத்தில் குறியாக இருந்தான்.அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன். 

" தம்பி பள்ளிக்கூடத்திலிருந்து நேராக புத்தகம் விற்க வந்து விட்டாயா? சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே? அப்படி என்ன அவசரம் உனக்கு?"
அவன் சொன்ன பதில்தான் என்னை மேலும்சிந்திக்க வைத்தது..

"பள்ளி விட்டவுடன் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டால்தான் ரயில் வரும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து புத்தகம் விற்க முடியும்.


ஒரு நாளைக்கு ஐந்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் அம்மா படிக்க அனுப்புவார்கள். கடைசி ரயிலில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு போய் வீட்டுப்பாடம் முடிப்பேன். இரண்டு புத்தகம் வாங்கிக் கொண்டதற்கு நன்றி அம்மா" என்று சொல்லிவிட்டு மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டான்.

"இந்தச் சிறுவன் எத்தனை எதிர்ப்புக்கிடையேயும் கஷ்டத்துக் கிடையேயும் கற்பதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கும்போது நான் ஒரு முறை தோல்வி அடைந்ததற்காகப் படிப்பை நிறுத்தியது எவ்வளவு முட்டாள்தனம்." என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தேன். எந்தத் துன்பம் எந்த இடையூறு வந்தாலும் படிப்பை இடையில் விடுவதில்லை என்று முடிவு செய்தேன். 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் சொல்லை நினைத்துக் கொண்டேன். கல்வி கற்கும்போது தோல்வி வந்து விட்டால் துவண்டுவிடக்கூடாது .அதிக முயற்சிஎடுத்து வெற்றி காண வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 3, 2011

எனது முதல் அனுபவம்


பலமாதங்களாக ஷிர்டி என்னும் புண்ணிய பூமிக்குச் சென்று பகவான் ஸ்ரீ சாயி பாபாவை தரிசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. நானும் என் கணவரும் ஷிர்டியை அடைந்தோம்.


அங்கே ஒரு அறையை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு இரவு தங்கினோம். இரவு ஒன்பது மணிக்கு இரவு ஹாரதியைப் பார்க்க கோவிலுக்குச் சென்று பாபாவை நன்கு தரிசித்தோம்.அனைவரும் ஹாரதியை தரிசிக்கும் பொருட்டு ஆங்காங்கே ஒளிப்படக் காட்சி தெரியுமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கூட்ட நெரிசல் இல்லாமல் வெளியில்நின்றவாறே பாபாவின் ஹாரதியைத் தரிசிக்க முடிந்தது.

திருப்தியாக தரிசனம் முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். பாபாவின் கருணை பொழியும் முகமும் கண்களும் மனதில் பதிந்து போனது. மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..மறுநாள் நாங்கள் சென்னைக்குத் திரும்பவேண்டும்.

பொழுது விடிந்ததும் நாங்கள் புறப்பட ஆயத்தமானோம். புறப்படுமுன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துக் கொண்டோம்.காலை உணவு குறைந்த விலையில் கோவில் வளாகத்திலேயே    வாங்கிச் சாப்பிட்டோம்.பின்னர் அறைக்குத் திரும்பி எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு அறையை காலி செய்துவிட்டு தெருவில் நடந்தோம்.அப்போது தரிசன நேரமாக இருந்ததால் தெருவில் நல்ல கூட்டம். முண்டியடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டியிருந்தது.அப்போது என்முன்னே ஒரு வயோதிகர் தன் இளைத்த கரங்களை நீட்டினார்.

சுற்றிலும் மக்கள் கூட்டம். என் கணவரோ  முன்னால் சென்று விட்டார் அவர் எங்கிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே கூட்டத்தைத தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்த என்னால் அந்தக் கிழவருக்கு எதையும் தானம் தரஇயலவில்லை. இருந்தாலும் ஏதோ உணர்வு உந்தவே என் கைப் பையைத் துழாவினேன். சோதனையாக சில்லறை எதுவும் தட்டுப் படவில்லை. நான் நடந்து கொண்டே இருந்தேன். அவரும் என்னைத் தொடர்ந்தார்.எனக்குக் காசு எதுவும் தட்டுப் படாததால் பேசாமல் விரைவாக நடக்கத் தொடங்கினேன். 


தொடர்ந்து நடந்து வந்த கிழவர் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவு சென்று நான் திரும்பிப் பார்த்தேன்.அப்பா!அந்தக் கண்கள்!அவற்றை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் எங்கே? ஆ!நினைவு வந்தது பகவான் பாபாவின் முகத்தில் அந்தக் கண்களின் தீட்சண்யத்தைப் பார்த்திருக்கிறேன்.

என் உடல் சிலீரென்று சிலிர்த்தது. பகவான் என்னை சோதித்தாரா? நான் நின்று அவருக்கு ஏதேனும் தானம் செய்திருக்கவேண்டும். கூட்டத்தைக் காரணமாக்கி நிற்காமல் சென்றது பெரும் தவறு எனப் புரிந்தது. தன் முன்னே நீண்ட கரத்தில் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடனே கொடுத்திருக்க வேண்டும்.சற்றே அலட்சியம் காட்டியது பெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டதே என எண்ணி எண்ணி இன்று வரை மனம் சஞ்சலப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னர் இரண்டு முறை அதே இடத்திற்குப்போய்  அந்தப் பெரியவருக்கு தானம் செய்ய எண்ணியும் நடக்கவில்லை அவரையும் பார்க்க முடியவில்லை.

அன்று முதல் தரவேண்டும் தருமம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எதையேனும் கொடுத்து விடவேண்டும் என்றஎண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது.
இன்றும் ஷிர்டி என்ற பெயரைக் கேட்டாலே அந்த முதியவரின் ஏக்கம் நிறைந்த விழிகள்தான் என் கண் முன் தோன்றுகிறது. எனவே இந்த அனுபவத்தின் மூலமாக கொடுப்பதை உடனே கொடுத்துவிட வேண்டும் என்ற பெரிய உண்மையை  புரிந்துகொண்டேன்   

எனது குறிக்கோள்

அன்பு நெஞ்சங்களே உங்கள் அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி உங்களுடன் மனம் விட்டுப் பேச வந்துள்ளேன் பாட்டி சொல்லும் கதைகள் மூலமாக இளம் தளிர்களுடன் பேசிவந்த நான் இப்போது என்மனதில் நிறைந்துள்ள எண்ணங்களை சிந்தனைகளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்

எனவே இந்த இரண்டாவது தளத்தை உருவாக்கியுள்ளேன்.இந்த தளத்தின் மூலமாக நான் ரசித்த என்னை பாதித்த என்னைத் திருத்திய காட்சிகள் நிகழ்ச்சிகள் புத்தகங்கள் என அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.எனது இந்த அனுபவங்கள் உங்களையும் பண்படுத்தும் என நம்புகிறேன்.தொடர்ந்து படித்து உங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

ருக்மணி சேஷசாயி.