Sunday, April 27, 2014

புலமைத் திறம்..

           ஒரு கிராமத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு தனது புலமை மீது மிகவும் பெருமை.தனது புலமையை அறியும் திறம் அவ்வூரில் யாருக்கும்
இருப்பதாக அவர் எண்ணவில்லை.
       ஒருநாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு தன்
ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வரப்பின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஆ.,! என்று கத்தினார்.
         அவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் வேகமாக அருகில் வந்தார். "புலவரே! என்ன ஆயிற்று?" என வினவினார்.
      புலவருக்குத் தன புலமையைக் காட்டவேண்டுமெனத் தோன்றியது போலும்.உடனே அவர்,"முக்காலில் செல்கையிலே நான்முகத்தான் பின்னவன் தன் நற்கரும்புக்  காட்டுக்குள் ஐந்து தலைப் பாம்பு தீண்டியது."
என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.
உடனே அந்த நண்பர் புலவரின் குறும்பைப் புரிந்து கொண்டார்.பிறரை ஒன்றும்  தெரியாதவர் என்று மட்டம் தட்டுவதையே பெருமையாக எண்ணி வந்தவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.
உடனே நண்பர்,"ஓஹோ., அப்படியா, பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலேடுத்துத் தேய்."என்று சொல்லிவிட்டு நடந்தார்.
புலவரும் அவர் சொன்னபடியே செய்து விட்டு நடந்தார்.
அதன்பின் அவர் யாரையும் அவமதிப்பதையும் விட்டு விட்டார்.தன்னைப்போல் சிறந்த புலமை இருந்தும் அதை வெளிக்காட்டாது இருக்கும் தன நண்பரின் சான்றாண்மையைப் புரிந்து கொண்டார்.
இனி அவர்கள் பேசிக்கொண்டதன் பொருளைப் பார்ப்போம்.புலவர், சொன்னது"கையில் கோலுடன் செல்லும்போது அவ்வூரில் பிரம்மன் என்பவரின் தம்பியின் கரும்புக்காட்டுக்குள் நெருஞ்சி முள் குத்தியது"
இதற்கு அவர் நண்பர் சொன்னது."பத்துரதன் என்பவன் தசரதன்.அவன் புத்திரன் ராமன்.அவன் மித்திரன் சுக்ரீவன்.அவன் சத்துரு வாலி.அவன் பத்தினி தாரை.அவள் காலை எடுத்தால் தரை.எனவே தரையில் தேய் "
தன்னைவிடத் திறமையாகப் பேசும் திறம் படைத்தவரான நண்பரின் புலமையைப் புரிந்து கொண்ட புலவரின் கர்வம் நீங்கியது.