Wednesday, July 22, 2015

பொருளின் அருமை.

                சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளி ல் இவ்வளவு பொருட்கள் நிறைந்திருந்ததில்லை. மிகக் குறைவான பொருட்களிலேயே திருப்தியாக வாழ்ந்து வந்தனர். பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருந்தனர் நம் பெற்றோர்.
              ஒரு பொருள்  தொலைந்து விட்டது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தேடி எடுக்கின்ற உள்ள உறுதியும் உடல் உழைப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்றால் அது சற்றும் மிகையில்லை.ஏனெனில் என் .சிறுவயதில் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் 
சொல்கிறேன்.

               ஒருமுறை என் பிறந்தநாள் வந்தது.அன்று எனக்கு ஒருஜதை  தோடும் அந்தக் காலத்தில் லோலாக்கு எனச் சொல்லும் தொங்கட்டானும்  வாங்கி எனக்கு அதைப் போட்டு அழகு பார்த்தார் என் தாயார்.அவர் மனதில் ஏகத்துக்கு மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிந்தது.

              அப்போது  எங்கள் வீட்டுக்கு அருகிலேயே புது வீடு கட்டிக் கொண்டிருந்தனர். வீடு கட்டுவதற்காக ஒரு வண்டி மணல் வந்து இறங்கியிருந்தது.அந்தத் தெருவில் இருந்த சிறுவர் சிறுமியர் நல்ல நிலவு வெளிச்சத்தில் அந்த மணல் குவியலில் குதித்து விளையாடினோம்.வெகுநேரம் கழித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னை என் அம்மா பார்த்தார்.
"ஏண்டி! காதிலே எங்கே காணோம்?" சட்டென அப்போதுதான் என் காதுகளைத் தொட்டுப் பார்த்தேன்.
'ஐயோ' வலது காதில் தொங்கட்டானும் இல்லை தோடும் இல்லை. அழுகை பொங்கி வந்தது. என் அம்மா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சற்று நேரத்தில் களைப்புடன்  தூங்கிவிட்டேன்.  

                  ஆனால் என் தாயார் தூங்கவேயில்லை. என் தந்தையார் துணை நிற்க கையில் மணல் சலிக்கும் பெரிய சல்லடையை எடுத்துக்கொண்டு மணல் குவியலின் அருகே வசதியாக அமர்ந்து கொண்டார். தந்தையாருடன் பேசிக் கொண்டே மணலை சலிக்க ஆரம்பித்தார்.நான் ஒரு இடத்திலா குதித்திருப்பேன்? எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ நம்பிக்கையில் சலித்தார் சலித்தார் சலித்துக் கொண்டே இருந்தார்.
வெகு நேரம் கழித்து திருகாணி மட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் சலித்தார். கிட்டத்தட்ட அரைவண்டி மணல் சலித்துவிட்டார். ஒரே சமயம் தோடும் லோலாக்கும் சல்லடையில் மாட்டிக் கொண்டது.வெற்றியுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து படுக்கும் போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது.

                     இந்தக் கதையை மறுநாள் என் தந்தையார் சொல்லித் தெரிந்து கொண்டேன். அன்றே என் காதுகளில் தொங்கட்டானை மாட்டியவர் ""அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்கோ.பொருள் வாங்கறது பெருசில்லே வாங்கின பொருளைப் பாதுகாக்கிற துதான்பெருசு ." என்று சொன்னபோது எட்டு வயது சிறுமியாகிய நான் தலையை ஆட்டுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தபோது கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்டு அம்மா அணை த்துக் கொண்டார். 

              அந்த நம்பிக்கை மனஉறுதி உழைப்பு நமக்கு இப்போது இருக்கிறதா என அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


-



-
ருக்மணி சேஷசாயி  
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, July 5, 2015

எதிலும் கற்போம்.


                   நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நம் வாழ்க்கையில் எங்கும் எந்த இடத்திலும் தோன்றும்.எனக்கும்  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
                  ஒருமுறை நாங்கள் திருப்பதி செல்ல ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில்  நல்ல கூட்டம் நாங்கள் இருக்கையைத் தேடி வேகமாக நடந்தோம்.அப்போது  ஒரு கம்பத்தின் அருகே ஒரு வயதான பிச்சைக்காரன் கால் நீட்டி  அமர்ந்திருந்தான். நான் என் இருக்கையைத் தேடும் வேகத்தில் அவனது காலை நன்கு மிதித்து விட்டேன். அவனும் காலை மடக்கமுடியாமல்  திசை மாற்றி வைத்துக்  கொண்டான். ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்களில் வேதனை தெரிந்தது.ஆனால் அதை அவன் கால் நீட்டி அமர்ந்த தவறு என்மீது எந்தத் தவறும் இல்லையெனஎன்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். 
                  ஒருவழியாக எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தபின் சற்றே நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.அப்போது ஒரு சிறுவன் சுமார் எட்டு வயதிருக்கும் கைநிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் நூல்களின் பெ யர் சொல்லி  "வேணுமா சார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். 
                    அவனிடம் "எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடமே இருக்கு" என்று சொல்லிவிட்டதால் என்னைத்தாண்டி அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நூல்களைக் காட்டிப் பேசத் தொடங்கினான். அவர் வெகுநேரம் பார்த்துவிட்டு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அவனிடம் அள்ளிக் கொடுத்தார்.சிறுவன் பாவம் கையில் கனத்துடன் நூல்களை அடுக்கமுடியாமல் அள்ளிக் கொண்டு அவர் கேட்ட மீதிச் சில்லறையையும் கொடுக்க முடியாமல் தவித்தான்.
                    அதே சமயம் சில்லறையை வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு நாணயத்தைத் தவறவிட்டார். அந்த நிலையிலும் அந்தச் சிறுவன் கஷ்டப்பட்டு கீழே விழுந்த நாணயத்தைப் பொறு க்கி எடுத்தவன் ' மன்னிச்சுக்குங்க ஐயா கை தவறிடுச்சு" என்றவாறே  கொடுத்தான்.என்னைத்தாண்டிச் சென்றவன் என் கால் தடுக்கவே கீழே விழுந்து எல்லாப் புத்தகங்களையும் தவறவிட்டான்.உடனே "சாரி ம்மா .உங்க காலை மிதிச்சுட்டேனா. ரொம்ப சாரிம்மா."என்று மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்.எனக்கு மனம் உறுத்தியது காலை நீட்டிக் கொண்டது என் தவறு. ஆனால்  அந்த தவறைத்  தன மீது போட்டுக்  கொண்டு  மன்னிப்புக் கேட்கும் சிறுவன் சிறுவனாகத் தோன்றவில்லை என் கண்களுக்கு.எனக்குப் புத்தி புகட்டவந்த அந்த முருகப் பெருமானாகவே தோன்றியது எனக்கு.

                          வண்டி மெதுவாக நகரத் தொடங்கியவுடன் நான் வேகமாக ஜன்னலோரம் நின்றுகொண்டு அந்த முதியவர் கண்களில் பட்டவுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை இந்தாப்பா என்று கூவி அதை அவன் எடுத்துக் கொண்டு கை கூப்பியதைப் பார்த்தபின் ஏதோ பிராயச்சித்தம் செய்து விட்டதைப் போல அமைதியானேன்.


                      எப்படியெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com