Friday, April 19, 2019

paati sonna kadhai

    பாட்டி சொன்ன கதை 

                                            16.பால்காரனும் குரங்கும்.
         ஒரு கிராமத்தில் ஒருபால்காரன் வாழ்ந்துவந்தான்.அந்தகிராமத்திலுள்ள 
மக்களுக்கு தினமும் பால் விற்று வந்தான்.வேறு யாரும் பசுக்கள் வளர்க்காததால் அவனிடமே பால் தேவைப்படுவோர் வாங்கிவந்தனர். சில நாட்களில் அந்தப் பால் வியாபாரிக்கு நிறைய பணம் சம்பாதித்து பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்று ஆசை தோன்றியது.
         அவன் யோசிக்க ஆரம்பித்தான்.அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
ஐந்து பேருக்கு கொடுக்கவேண்டிய பாலை நீர் ஊற்றிப்  பெருக்கினான்.
அதை இன்னும் ஐந்து பேருக்கு விற்றான்.மக்கள் யாரேனும் 
"என்னப்பா, பால் நீராக உள்ளதே?"என்றால் "பசு இன்று நீர் அதிகம் குடித்து விட்டது என்றோ சரியாகப் புல்  மேயவில்லை" என்றோ சாக்குப் போக்கு சொல்வான்.
        நாட்கள் செல்லச் செல்ல ஆசை பேராசையாக மாறியது.தாராளமாக நீர் ஊற்றி வியாபாரம் செய்யத் தொடங்கினான்.சேர்த்த பணத்தை ஒரு பட்டுப் பையில் போட்டு பத்திரப்படுத்தி வைத்தான்.
      ஒருநாள் அவன் நண்பன் வந்திருந்தான்.அவனிடம் பேசியபோது அருமையான பசுக்கள் விலைக்கு வந்திருப்பதாகவும் உடனே பணம் கொடுத்தால் வீட்டுக்கு ஒட்டி வந்து விடலாம் என்றும் கூறினான்.
பால்வியாபாரிக்கு ஆசை தோன்றியது. உடனே நண்பனை அழைத்துக் கொண்டு பணப்பையையை எடுத்துக் கொண்டு அடுத்த ஊரை நோக்கிப் புறப்பட்டான்.
        போகும் வழியில் மிகவும் சிறப்புவாய்ந்த அனுமார்  கோயில் ஒன்று இருந்தது.அங்கு  சுவாமி தரிசனம் செய்துவிட்டுப் போகலாம் என எண்ணினர் இருவரும்.கோயில் குளத்தில் கால் கழுவிக் கொண்டு  கோயிலில் சாமியைப் பார்க்கலாம் என எண்ணி நடந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்னால்  பலத்த மழை பெயதிருந்ததால் வழியெங்கும் நீராக இருந்தது. குளத்திலும் நீர் நிரம்பி வழிந்தது.
        பால்காரன் பணப்பையை கையில் இடுக்கிக் கொண்டு நீரில் காலை வைத்து அலம்பிக் கொண்டான் ஒரு கை  நீரை அள்ளித்  தலையில் போட்டுக் கொண்டான்.அப்போது யாரோ அவன் கையிலிருந்த பையைப் பிடுங்கிக்  கொண்டு ஓடவே ஐயோ என் பணம் என் பை  என்று கூச்சலிட்டான்.
அனைவரும் பார்க்க கையில் பையுடன் ஓடியது ஒரு குரங்கு.
       "சூ..,சூ.., என்று துரத்தியவாறே பின்னால் ஓடினான் பால்காரனும் அவன் நண்பனும்.ஆனால் குரங்கோ சாவகாசமாக ஒரு பெரிய மரத்தின் உயர்ந்த கிளையில் அமர்ந்து கொண்டது.அந்தக் கிளை நீண்டு வளர்ந்து நடுக் குளம் வரை பரவியிருந்தது.ஒன்றும் செய்ய முடியாமல் கைகளை பிசைந்து கொண்டனர் இருவரும்.
அந்தக் குரங்கோ பைக்குள் கையை வீட்டுக் காசுகளை அள்ளிக் குளத்தில் போட்டது.சற்று நேரத்தில் கீழே இறங்கிய குரங்கு மீ திக் காசுகளோடு பையைக் கீழே போட்டு விட்டு ஓடியது.
வேகமாகப் பையைத் திறந்து எண்ணிப் பார்த்தவன் தான் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தான்.பால்காசு மட்டும் பையில் இருந்தது நீர் விட்டு விற்ற பணம் நீரோடு போய்விட்டது.இறைவன் எனக்கு நல்ல புத்தி கொடுத்து விட்டார்.இனி நேர்மையாக மக்களுக்குப் பயன்படும் விதமாக வாழவேண்டும் என முடிவு செயது.கொண்டான்.
கோயிலுக்குள் சென்று இறைவன் முன் தான் செய்த தவறுகளை மன்னிக்கும்படியும் இனி இதுபோன்ற தவறு செய்வதில்லை எனவும் பிரார்த்தனை செய்து கொண்டான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------










55 ரயிலில் சந்திப்பு


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வதுஎன்பது பழக்கத்தில் அதிகமாக இல்லாமலிருந்தது.ஒருமணி இரண்டு மணி நேரம் முன்பாகவே வந்து   ரயிலில் இடம் பிடித்து பயணிப்பவர்களும் துண்டு விரித்துப் போட்டு இடத்தை   விற்கும் போர்ட்டர்களும் இருந்தகாலம்..

அதுபோல் ஒரு மாலை வேளை.எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் ரயில் வண்டி நின்று கொண்டிருந்தது.எங்கே கூட்டம் அதிகமில்லையெனத் தேடிக் கொண்டே வந்தான்  லக்ஷ்மணன் ஒரு பெட்டியில் கூட்டமும் இல்லை இடமும் காலியாக இருந்தது.உடனே தன மேல்துண்டை எடுத்துப் போட்டு ஒரு இடம் பிடித்து விட்டு அப்பாடா என்று மூச்சு விட்டான்.பெட்டிக்குள் சலசலவென்று பேச்சு சப்தம் தாங்காமலும் காற்றுக்காகவும் வெளியே வந்து நின்றான்.

மீண்டும் அவன் உள்ளே பார்த்தபோது திடுக்கிட்டான்.அவனது துண்டு மூலையில் சுருண்டு கிடந்தது ஒரு புதிய அங்கவஸ்த்திரம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.வேகமாக உள்ளே நுழைந்தவன் அங்கவஸ்திரத்தைத் தூக்கி  எறிந்தான் அந்த இடத்தில் நன்றாக அமர்ந்து கொண்டான்.

வண்டி புறப்படப் போகும் சமயமாகிவிட்டதை அறிவிப்பு அறிவித்தது.அப்போது அந்த இடத்துக்கு வந்த மணி ஆக்ரோஷமாக லக்ஷ்மணன் மடியில் அமராத குறையாக அமர்ந்தான்.அவனைத் தள்ளிவிட்டவன்,"என்னய்யா, ஒருமணி நேரமாக என் துண்டு  போட்டு இடம் பிடித்திருக்கிறேன் நீ இப்போது வந்து என்னைத் தள்ளுகிறாயா."என்றான் கோபமாக
            
"இடம் காலியாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அமரலாம்.உங்கப்பன் வீட்டு வண்டியா இது."

"உங்கப்பன் வீட்டு வண்டி என்ற நினைப்புதான் உனக்கு.சரிதான் எழுந்து போ அந்தப்பக்கம்."

வார்த்தை கனத்தது. வண்டியில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில பெண்கள் முகம் சுளித்தார்கள்.ஆனாலும் அவர்கள் சண்டை நின்றபாடில்லை.வண்டி வேகமெடுத்தது.நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் என்று ஒவ்வொரு இடமாகத் தாண்டிக் கொண்டே வந்தது.
அடுத்த நிறுத்தம் தாம்பரம்தான்.

மணி உறுமினான். "தாம்பரம் வரட்டும் உன்னைத் தூக்கி பிளாட்பாரத்தில் எறிந்து விடுகிறேன்."

இருவரும் சளைக்காமல் சண்டையிட்டுக் கொண்டே வந்தனர்.

ஒரு வழியாக தாம்பரம் வந்ததும் ரயில் உறுமியபடியே நின்றது..

லக்ஷ்மணனும் மணியும் ஒரே பாய்ச்சலில் ஜன்னலருகே வந்தனர்.மணி"கோபால், கோபால்,"எனக் கூவி யாரையோ அழைத்தான்.அதே சமயம் லக்ஷ்மணனும்,"மாமா, மாமா..'என்று
அழைத்தான்.வேகமாக வந்த கோபால் என்ற நபர் வண்டிக்குள் நுழைந்து லக்ஷ்மணனைப் பார்த்து "நல்லவேளை லக்ஷ்மணா, இடம் பிடித்தாய்"என்றபடி அமர்ந்தார்.

சட்டென்று அருகே நின்ற மணியைப் பார்த்து ,"மாப்பிள்ளை நீங்க எங்கே...",என்றார்.

"உங்களுக்கு இடம் பிடித்து வைத்தேன். அதே இடத்தை  இவரும்
பிடித்திருந்தார்.கொஞ்சம் தகராறாகிவிட்டது.இப்போது லக்ஷ்மணனும் அசடு வழிந்தார்.

"லக்ஷ்மணா, இது என் தங்கை வீட்டுக்காரர்.டெல்லியிலிருந்தவர்.

இப்போதான் சென்னைக்கு வந்திருக்கிறார்." என்றவர்"மாப்பிள்ளை இது என் மச்சினன்.தாம்பரத்தில் கடை வைத்திருக்கிறான்."என்று அறிமுகப் படுத்தவே இருவரும் கை குலுக்கிக் கொண்டே புன்னகை புரிந்து கொண்டனர். அதற்குள் ரயில் ஊதவே இருவரும் கோபாலுக்கு கை அசைத்து விடைகொடுத்தனர். ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் நடந்ததை நினைத்து  அப்பாடா, ஒரு பூகம்பம் வர இருந்தது எப்படியோ சரியாயிற்று என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.