Friday, November 25, 2011

12--தேவை ஒரு திறமை.

தேவை ஒரு திறமை.
நாம்  எல்லோருமே  நம்  வாழ்க்கையில்  வெற்றி  பெறவே  விழைகிறோம்.விரும்பத்தக்க பண்புதான் என்றாலும் அதற்க்கும் சிலமுயற்சிகளை  நாம் செய்யத்தான் வேண்டியிருக்கிறது அல்லவா? வெற்றிக்கு மூல காரணம் என்ன என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதலில் புன்னகை. இந்தப் புன்னகை எத்தகைய மாற்றங்களை எதிர்ப்படுபவரிடம் காட்டுகிறது தெரியுமா?
நம்மை வேண்டியவராகக் காட்டும், நம்மை அறிந்தவராகக் காட்டும், ஏன் சில சமயங்களில் நம்மை உறவினறாகக் கூடக் காட்டும் அளவுக்கு இந்தப் புன்னகைக்கு பலம் உண்டு.அதனால்தான் புன்னகையே கோடிப் பொன் பெறும் என்றும் பொன்னகை எதற்கு புன்னகை போதுமே என்றும் கூறினர் நம் முன்னோர். பத்திரிகையாளர் திரு லேனா அவர்கள் தனது ஒரு பக்கக் கட்டுரையில் "உலகம் உங்களை விரும்ப வேண்டுமெனில் ஒருவரைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் புன்னகையை உதிர்க்கத் தவறாதீர்கள்." என்று குறிப்பிடுகிறார்.முன் பின் தெரியாதவராக இருந்தாலும் அவரைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தால் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அவரே உங்களை அறிந்தவர் போலப் பேசவும் தேவையான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் தயங்க மாட்டார்.இந்த வெற்றியின் ரகசியத்தை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்பர்?இனியேனும் புன்னகையை வெற்றிப் போருக்குரிய சிறந்த ஆயுதமாகக் கொள்வோம், வாழ்வில் வெற்றி பெறுவோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, November 20, 2011

11-சொல்லாற்றல்.

      சொல்லாற்றல் என்பது பெரும் வரப்ரசாதம்.ஒருவருக்கு சொல்லாற்றல் இருந்தால் அவர் எந்த இடத்திலும் எந்த சொற்போரிலும் வெற்றி பெறலாம்.
நம் நாட்டில் பிறந்த பெரும் ஞானியர் பலரும் இந்த சொல்லினால் பல தத்துவங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.அப்படிப்பட்ட ஞானியருள் ஒருவர் கனகதாசர் என்ற கிருஷ்ண பக்தர்.இவரைப் பற்றி 'பாட்டி சொல்லும் கதைகள்' என்ற என் தளத்தில் எழுதியுள்ளேன்.
இந்த கனகதாசர் வியாசராயர் என்ற குருவிடம் சீடராக இருந்தார்.இவருடன் புரந்தரதாசர் போன்ற சில கிருஷ்ண பக்தர்களும் வியாசராயரிடம்  சீடராக இருந்தனர்.குரு கனதாசரின் ஞானத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினார்.தாழ்ந்த இனத்தில் பிறந்தவர் என்ற எண்ணம் தனது மற்ற சீடர்களிடம் இருப்பதை உணர்ந்த வியாசராயர் அவர்களின் எண்ணத்தை மாற்றி கனகதாசர் ஒரு மகான் என்பதை உலகுக்கு உணர்த்த எண்ணினார்
          ஒருநாள் வித்வான்களின் சபை கூடியிருந்தது. குருவான வியாசராயர் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.அப்போது அவர் திடீரென ஒரு கேள்வி எழுப்பினார்."சீடர்களே, நான் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் சொல்லுங்கள்."என்றார். சீடர்கள் மெளனமாக இருந்தனர்.
"இந்த இடத்தில் இருப்பவர்களில் சுவர்க்கத்திற்குச் செல்பவர் யார் எனத் தெரியுமா?" அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.ஒவ்வொருவரையும்  குரு  கேட்டுக்  கொண்டே  வந்தார .
கனகனின் முறை வந்தபோது கனகதாசர் புன்னகையுடன் எழுந்து நின்றார்."சுவாமி, நான் போனால்... போவேன்." என்றபோது சபையே திடுக்கிட்டது.
புன்னகை புரிந்த வியாசராயர் "இந்த சபையில் இருப்பவரில் நீமட்டும்தான் சுவர்க்கம் செல்வாயா?"என்ற போதும், கனகதாசர் மீண்டும் அதே பதிலைக் கூறினார்.
சீடர்களுக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் அவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.கீழ் ஜாதியில் பிறந்த ஒருவன் சுவர்க்கம் செல்வானாம் என்ன துணிச்சல்?என்று தமக்குள் முணுமுணுத்தனர்.
அப்போது குருவானவர், "கனகா,நீ இவ்வாறு கூறுவதன் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும்படி சொல்."என்றார்.
கனகதாசர் பணிவுடன் "குருதேவா, யார் ஒருவர் நான் என்ற அகந்தையை விட்டு விட்டு வாழ்கிறார்களோ அவரே சுவர்க்கம் செல்வார் எனக் கூறினேனே அல்லாது இந்தக் கனகன் போவேன் எனச் சொல்லவில்லை குருதேவா.என் உள்ளத்திலும் நான் எனும் அகந்தை விலகிவிட்டால் நானும் போவேன் என்று கூறினேன் சுவாமி." என்று கூறி வணங்கி நின்றான்.
அப்போது வியாசராயர் தமது சீடர்களைப் பார்த்து "இப்போது தெரிந்து கொண்டீர்களா கனகனின் பெருமையை.சிறந்த ஞானம் உள்ளவன் கனகன்.அந்த கிருஷ்ணனுக்கு தாசன். 
இவனது குல பேதம் பார்க்காமல் இனியேனும் இவனது ஞானத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.பக்திக்கும் ஞானத்திற்கும் குலம் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்."
என்று உரைத்து கனகனை அழைத்து தனது முக்கிய சீடர்களுள் ஒருவராக அமர்த்திக் கொண்டார்.
இப்படி ஒரு சொல்லிலே பொருள் கூறி அதன் மூலம் தனது ஞானத்தை உணர்த்திய கனகதாசரின் சொல்லாற்றல் நாமும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆற்றல் அல்லவா?



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com