Friday, December 30, 2011

வாழ்த்து..

மணி மணியாய் சிந்தனை என்ற எனது வலைச் சரத்தைப் படிப்பவர்க்கும் விமரிசனம் செய்பவர்களுக்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரி ருக்மணி சேஷசாயி..

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, December 16, 2011

13 - ஓர் இனிய நினைவு

சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால் அப்போதுதான் நான் ஆசிரியப் பணியில் சேர்ந்திருந்தேன்.முதலில் மூன்று வகுப்புவரைதான் நான் கவனித்துவந்தேன்.அதன்பின் ஒவ்வொரு ஆண்டாக உயர்வு கிடைத்து ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியராக உயர்ந்தேன்.அப்போதெல்லாம் வாரம் ஒரு முறை மாணவர் இலக்கியக் கூட்டம் என்று ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும். அதை அந்தந்த வகுப்பாசிரியர் நடத்தவேண்டும்.   

கூட்டத்துக்குத் தலைவர் பேச்சாளர் கலைநிகழ்ச்சி என்றுஏற்பாடு செய்யவேண்டும். நிகழ்ச்சி  தயாரிக்கவேண்டும். மாணவர்களின் துணையுடன் அந்த வாரக் கூட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின் அதைப் பற்றிய அறிக்கையைத் தலைமை ஆசிரியை அவர்களுக்கு அனுப்பி அவரின் கையொப்பம் பெறவேண்டும்.இந்த நடைமுறை எட்டாம் வகுப்பு வரை இருந்தது.

அந்த வாரம் என் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சியைப் பார்த்து அதன் படி கூட்டத்துக்கு மாணவர் அனைவரையும் அமரவைத்தேன். கூட்டம் தொடங்கியபோது பார்த்தால் தலைமை தாங்கவேண்டிய மாணவனைக் காணோம். 
 
அவனைப் பற்றி விசாரித்தபோது மதியம் அவன் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்தது.கடைசி நேரத்தில் அந்த மாணவன் தலைமை தாங்க அஞ்சி பள்ளிக்கே வராமல் நின்று விட்ட செய்தி தெரிந்தது. என்ன செய்வது கடைசிநேரத்தில் கூட்டத்தை நடத்தி ஆகவேண்டுமே. எனவே வகுப்பு ஆசிரியையான நானே தலைமை தாங்கினேன்.

. அந்தக் கூட்டம் பாரதியார் தினமாகக் கொண்டாடப் பட இருந்ததால் மாணவர்கள் பாரதியார் பாடல்கள் அவரைப் பற்றிய பேச்சுக்கள் என்று அழகாக நிகழ்த்தினர்.கடைசியாக  தலைவர்  சிறப்புரை ஆற்றவேண்டிய நேரம்.நான் எழுந்து நின்றேன்.மாணவர்கள் ஆவலோடு பார்த்தபடி இருக்க நான் "காணி நிலம்  வேண்டும்" என்று பாரதியாரின் பாடலை  எடுத்து பேசத் தொடங்கினேன்.

ராகமாகப் பாடலைப் பாடியவுடன் சற்றே சலசலத்த மாணவர்கள் கூட அமைதியானார்கள்.அதன்பின் நான் பேசத் தொடங்கினேன்.
"பாரதியின் ரசனை உள்ளம் எத்தகையது என்று பாருங்கள்.ஒரு காணி நிலம் வேண்டும்.அதில் ஒரு மாளிகை வேண்டும். அருகே கேணி இருக்கவேண்டும்.அருகே தென்னைமரங்களின் எண்ணிக்கை பத்து பனிரெண்டு இருக்கவேண்டும்.கேணி அருகில் நாம் அமர்ந்திருக்க, முத்துப்போல நிலாவொளி வீசவேண்டும். குயிலோசை நமது காதுகளில் இனிமையாக விழவேண்டும்.நமது மனத்தைக் குளிர்விக்கும் இளம் தென்றல் வீசி உள்ளத்தைக் கவரவேண்டும்.
அத்துடன் இந்த இனிமையான சூழலில் நல்ல கவிதையை நான் இசைக்கவேண்டும். அந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க ஒரு பத்தினிப் பெண் துணையாக வீற்றிருக்க வேண்டும்.
அந்தப் பாட்டுத் திறத்தால் இந்த உலகையே நான் காக்குமாறு அருள் செய் தேவி என்று கூறும் பாரதியின் கனவு எத்தகையது."என்று சொன்னவள் "இந்த அழகிய சூழலில் நீங்கள் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.உங்கள் உள்ளம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அடைகிறது.என்று சொன்ன போது அமைதியாக இருந்த அந்த அறையின் மூலையில் இருந்து ஒரு சின்னக் குரல் "ஆஹா,, த்சு" என்ற அனுபவித்த உணர்வுடன் கூடிய குரல் எழுந்தது.அதுவரை எந்தப் பெண்ணைப் பாடத்தில் மக்கு. புரிந்து கொள்வதில் மந்தம் என நான் நினைத்திருந்தேனோ அந்த மாணவியின் வாயிலிருந்து இந்த அனுபவித்த குரல் எழும்பியவுடன் நான் அசந்து போனேன். அவள் எத்தகைய ரசிகை எனப் புரிந்து கொண்டேன்.

அன்று முதல் கவிதையை ரசிக்கும் உணர்வு வேறு படிப்பறிவு வேறு எனப் புரிந்து கொண்டேன். அந்தப் பெண்ணை மரியாதையுடன் பார்க்குமாறு  கவிதை உள்ளம் எனக்குக் கட்டளையிட்டது. இன்றும் இந்த நினைவு எனக்குள் ஒரு நீங்கா இனிய நினைவாக நிறைந்துள்ளது.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com