Wednesday, February 15, 2017

அவசர காரியம் ஆகாது.


                      பெங்களூரிலிருக்கும்  என் மகன் சொந்த வீட்டுக்கு குடிபோகும்போது வீட்டுப் பொருட்களையெல்லாம் கட்டி வண்டியில் வைத்து அனுப்பிவிட்டுக் கடைசியில் கையில் கொண்டு போவதற்காக விலையுயர்ந்த வெள்ளிப் பொருட்களையெல்லாம் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தான்.
              பெங்களூரில் வீட்டைக் காலி செய்வதாயிருந்தால் வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுத்தான் காலி செய்யவேண்டும் என்பது  அங்கு எழுதப் படாத சட்டம்.
               என் மருமகளும் வீட்டிலிருக்கும் குப்பைகளையெல்லாம் ஒரு பையில் போட்டு அதன் பக்கத்திலேயே வைத்திருந்தாள்  கிட்டத்தட்ட நான்கைந்து பைகள் சேர்ந்து விடவே அத்தனையையும் 
கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு வந்து விட்டான் என் மகன்.
அவற்றோடு வெள்ளிப் பாத்திரங்கள் கிட்டத்தட்ட இரண்டு கிலோ பையோடு வாசலில் காத்துக் கிடந்தது குப்பையோடு குப்பையாய்.
                  காலை 9 மணிக்கு வைத்த குப்பையை எடுக்க தினமும் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் வண்டியில் வீட்டு வாசலில் இருக்கும் குப்பையையெல்லாம் அள்ளிக் கொண்டு போவார்கள் நகர சுத்திகரிப்பாளர்கள்.அவர்கள்  வருமுன்பாகவே குப்பையைக் காலி செய்யவேண்டுமென்னும் அவசரத்தில் எல்லாக் குப்பைப் பைகளையும் வாசலில் வைத்தாயிற்று.
                    ஒரு  மணிக்குமேல் சுண்ணாம்படிப்பவருக்கு வீட்டு  சாவியைக் கொடுத்துவிட்டு புறப்படும்போதுதான் வெள்ளிப் பாத்திரங்கள் வைத்த பையை இருவரும் தேடினார்கள்.அவசரத்தில் எந்தப் பையில் வைத்தோம் என்பதே இருவருக்கும் மறந்து விட்டது.
                    
                               இரண்டுமணிநேரம்தேடியும்கடைக்கவில்லை.இருவருக்கும் அழாத குறைதான்.சரி வீட்டையே காலி செய்தபின் எங்கிருந்து கிடைக்கும் பலரும் வந்து  போன இடம்.யார்கையில் கிடைத்ததோ என்று சமாதானம் செய்து கொண்டு ஒருவழியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டனர்.

                       வெளியே வந்து வண்டியை இயக்கும்போதுதான் 
குப்பைப் பைகள் அங்கேயே யிருப்பதை மருமகள் பார்த்தாள் 
என்ன இன்றைக்கு என்று குப்பை வண்டி வரவில்லையே.வீட்டு வாசலில் இத்தனை குப்பை கிடக்கிறது. வீட்டுக் கார அம்மாள் பார்த்தால் கத்துவாள். சீக்கிரம் புறப்பட்டுப் போய்விடலாம் என்றபடியே அமர்ந்தாள்.ஆனால் என்ன தோன்றியதோ உடனே இருங்கள் என்று சொன்னபடியே வண்டியிலிருந்து குதித்து அந்தக் குப்பைப் பைகளைத் திறந்து திறந்து பார்த்தவள் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள்.                     

                        மகிழ்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. பெருமூச்சு வாங்க இதோ நம்ம பொருள் பத்திரமா இருக்குங்க என்றபடியே பையைக் காட்டினாள்.உள்ளே வெள்ளிப் பாத்திரங்கள் அவர்களைப்  பார்த்துச் சிரித்தபடி ஜம்மென்று பைக்குள் அமர்ந்திருந்தன.என்மகனும் பாடுபட்ட பொருள் நம்மை விட்டுப் போக பகவான் விட்டுவிடுவாரா.நாலைந்து மணி நேரம் நாம் கஷ்டப் படணும்னு விதி இருக்கு.இனிமேலாவது அவசரமும் அலட்சியமும் இல்லாமே ஒரு காரியம் செய்யணும்னு தெரிஞ்சுப்போம்.என்றபடியே வீட்டுக்குப் புறப்பட்டனர்.
                எந்தக் காரியத்திலும் அவசரம் அலட்சியம் கூடாது என்பது ஒரு பெரிய படிப்பினைதானே எல்லாருக்கும்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, February 3, 2017

இப்படியும் ஒரு தொழில்.

ஒரு கல்யாணத்திற்காக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லவேண்டி வந்தது.
 டபுள் டக்கர் வண்டியில் டிக்கட்டைப் பதிவு செய்திருந்தோம்அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வெளியிலிருந்து
2ஏ பிளாட்பாரத்திற்கு வெகு தொலைவு நடக்க வேண்டியிருந்தது நானும் என் மகளும் வேகமாக நடந்து வந்தோம். உள்ளே நுழையும் போதே வழியில் புத்தகங்கள் வார மாதப் பத்திரிகை விற்பவர் கண்ணில் படவே அவரிடம் கல்கியும் குமுதமும் அவசரமாக வாங்கி கொண்டோம்.முப்பத்தைந்து ரூபாய் வாங்கி கொண்டவர் நூறு ரூபாய்க்கு முதலில் சில்லறை இல்லை என்று சொன்னவர் சற்று நேரத்தில் இருக்கிறது எனக் கூறி மீதியையும் கொடுத்தார்.நாங்கள் எங்கள் வண்டி பிளாட்பாரத்தில் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக ஏறி எங்கள்  இருக்கையில் அமர்ந்தோம்.  சற்று நேரத்தில் வண்டியும் புறப்பட்டது நாங்களும் இருக்கையினுள் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு புத்தகத்தைப் பிடித்துப் பிரித்தோம். குமுதத்தின் அட்டையில் இலவச புத்தகத்தைக் கேட்டு வாங்குங்கள் என்று இருநதது . அதைப் பார்த்தாய் அந்தக் கடைக்காரன் இலவச  ஏமாற்றிவிட்டான் பார்.  என்றேன்.நாமதானம்மா பார்த்துக் கேட்டிருக்கவேண்டும்.என்றாள்

-                         நானும் அமைதியாக புத்தகத்தைப் பிரித்தேன்.உள்ளே...!
.அடாடா...மூன்று வாரங்களுக்கு முன் நடந்த செய்திகளும் படங்களும் அத்துடன் வரவிருக்கும் பொங்கலை வரவேற்கும் செய்திகளும் என்னைத் தூக்கிவாரிப் போட வைத்தது. உடனே அட்டையைப் பார்த்தேன் ஜனவரி 11ந்தேதி என்று போட்டிருந்தது.என் மகளுக்கும் அதே அதிர்ச்சி போலும் அவளது கல்கி புத்தகத்தில் 5-1-2017 என்று  இருந்தது.இருவரும் நன்கு ஏமாந்து விட்டோம். எங்கள் அவசரத்திற்கு நாங்கள் கொடுத்த விலை. இனி எந்தசந்தர்ப்பத்திலும் புத்தகம் வாங்கும் போது தேதி பார்க்காமல்  வாங்கக் கூடாது.என்ற படிப்பினையை நாங்கள் பெற்றோம். யாருக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com