Thursday, August 30, 2012

நினைத்துப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன்.
என் இளமைப் பருவம்.பதினெட்டு வயதில் திருமணமாகி கணவரின் இல்லத்தில் வாசம். வீட்டில்  வேலை அத்துடன் அரசுத் துறையில்  
ஆசிரியர் பணி. வேலைப் பளு அதிகம். வீட்டிலும் மூன்று குழந்தைகள். வயதானவர், குழந்தைகள், விருந்தினர், என்று கவனித்துச் செய்யவேண்டிய நிலை. பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டிய நிலை.எந்தக்  குழந்தையையும் சீராட்டி பாராட்ட இயலாத நிலைமையில் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விட்டு பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டிய கட்டாயம். மாலையில் களைத்து வந்தால் மீண்டும் இரவுக்கான வேலை. இப்படிப் போயிற்று வாழ்க்கை.
ஆனால் இன்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.அவர்களின் மூன்று வயது மகள் எழுந்தவுடன் அழுது கொண்டேயிருந்தாள். அவளை எடுத்து அணைத்து கொஞ்சி விளையாட்டுக் காட்டி குடிக்கப் பால் கொடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் சமாதானமானாள்.அதுவரை அந்தக்குழந்தையின் பெற்றோர் அவளைத் தவிர உலகமில்லை என்பதுபோல அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது நான் எவ்வளவு பெரிய சுகத்தை சுவர்க்கத்தை இழந்திருக்கிறேன் என்று புரிந்தது.இதேபோல என் இரண்டு வயது மகன் தூக்கு என்று கைகளைத் தூக்கியபோது அவன் அழ அழ அதைக் கவனிக்காது சென்றிருக்கிறேன். காரணம் வேலைப் பளுவுடன் கடமைக்காக ஓடவேண்டிய நிலை. ஆனால் இன்று தனிமையில் அந்த நாளின் நினைவு எழும்போது மனம் ஏங்குகிறது. மனம் கனக்கிறது.இந்த நிலை என்போன்ற பெண்களுக்கு வரக்கூடாது என்பதால் சிறு குழந்தைகளை அவர்களை முடிந்தவரை கொஞ்சிப் பேசுங்கள்.அணைத்து அரவணைத்து மகிழுங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த இன்பம் கிட்டாது.தான் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சி மகிழாமல் போனோமே என்று வயதானபின் வருந்துவதில் பயனில்லை.
'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்று வள்ளுவரின் வாய்மொழி எவ்வளவு உண்மையானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். 






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, August 9, 2012

26 கண்ணனின் மனம்

Lord Sri Krishna




இன்று கண்ணனின் பிறந்த நாள்..கோகுலாஷ்டமி என்று இந்த நாளைக் கொண்டாடுகின்ற சிறப்பான  நாள்.இதுபோன்ற நாட்களில் கொண்டாடுவது மட்டுமல்லாது இந்த நாள் மூலமாக இறைவன் நமக்குக் காட்டும் பல நல்ல பண்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணன் அரசகுமாரனாகப் பிறந்து ஆயர்பாடியில் வளர்ந்து ஆடு மாடு மேய்த்து எளிமையாக வாழ்ந்தான் என்ற கதை நமக்குத் தெரியும்.எளிய சிறுவர்களான ஆயச் சிறுவர்கள்தான்  அவனது உயிர்த் தோழர்களாக இருந்தனர்.அவர்களுடன் அவன் ஆடிப் பாடி மண்ணில் புரண்டு விளையாடி  உயிர் நண்பனாகத் திகழ்ந்தான். அந்த ஆயச் சிறுவர்களும் கண்ணனைத் தங்களின் உயிராக எண்ணி இருந்தனர்.கண்ணனையே தங்களின் தலைவனாக எண்ணி ஒவ்வொரு சொல்லும் செயலும் கண்ணனுக்காகவே என்று வாழ்ந்து வந்தனர்.
            ஒருநாள் கண்ணன் அமர்ந்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்த அச் சிறுவர்கள் அவனுக்கு மணி மகுடம் சூட்ட எண்ணினா வெகு நேரம் சிந்தித்தனர். அவன் அழகுக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு ஒரு சிறந்த மகுடத்திச் சூட்ட எண்ணினர்.அப்போது அங்கே வந்த ஒரு மயிலைப் பார்த்தனர்.உடனே மயிலின் பின்னே ஓடி இறகுக்காகக் கையேந்தினர்.அவர்கள் கண்ணனின் நண்பர்களன்றோ.அவர்கள் கேட்டதும் கொடுப்பது எத்தனை புண்ணியம் என்று அந்த மயில் எண்ணியதோ என்னவோ.தன் மேனியிலிருந்த மயில் பீலிகளை உதிர்த்தது.அதனைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்த அந்த கோபச் சிறுவர்கள் அதனை கண்ணனின் தலையில் செருகினார்.  
கண்ணன் மகிழ்ச்சியோடு சிரித்தான்.தினமும் மயில் பீலி அவன் தலையை அலங்கரித்தது.
கம்சவதம் முடிந்தபின்பு மன்னனாகக் கண்ணன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது மறக்காமல் மயில் பீலியைத் தன் நண்பர்களின்  அடையாளமாகக் கண்ணன் சூடிக் கொண்டதுதான் அவனது உள்ள உயர்வை எடுத்துக் காட்டுகிறது. எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் நம் அன்புக்குரியவர்களையும் நம் மீது அன்பு செலுத்தியவர்களையும் நாம் மறக்கலாகாது என்ற சிந்தனையை இந்தப் பண்டிகை நாளில் நாம் தெரிந்து கொள்வோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com