Sunday, September 16, 2012

30-ஆசிரியர் சொன்ன கதை.

 ஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்..
ஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார்.படுக்கையில் இருந்த அவரைப் பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.
ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பனைப் பார்க்க வ்ந்தார்.சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.படுத்திருக்கும்புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியவர்  தன் மகளை அழைத்தார்.
"அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா" என்று கூறினார்,
அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே.அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.
அந்தக் காலத்தில் பாலை ஆடைநீக்குவதற்காக துணி வைத்திருப்பார்கள்.அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள்.ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.
அதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்."ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண்.
உடனே புலவர் புன்னகை மாறாமல்"இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும்  கசக்கவில்லை."என்றார்.
தான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம் 
 திருந்தினாள் புலவரின் மகள்.
பெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, September 10, 2012

29.எங்கோ படித்த கதை

.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே  நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் "அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,
"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்."பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே."என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.
சட்டென்று அந்தப் பையன் "அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா?"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்."என்று விளக்கினார்.
இவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட  காட்டாமே இருக்கியே."என்று கூறியவர்,"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய."என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்."ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு  எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல்  உண்மை.
என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 1, 2012

மனம் கவர்ந்த கதை.

மனம் கவர்ந்த கதை.
-ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள்.
கிணறு வெகு தொலைவில் இருந்ததால் ஒரு நீண்ட கொம்பின் இரு முனைகளிலும் குடத்தைக் கட்டி அதைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவாள்.சிறிது நாள் கழித்து அந்த இரண்டு குடங்களில் ஒன்று ஒட்டையாகிப் போனது.அதனால் அந்தப் பானையில் பாதி நீர்  
வரும் வழியெங்கும் சிந்திக் கொண்டே வரும். வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்தக் குடத்தில் பாதி நீர்தான் இருக்கும். 
ஒரு நாள் நீர் நிறைந்த பானையின் அருகில் பாதி நீர் இருந்த பானை அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அந்தப் பானை "அய்யோ பாவம் உன்னால் நிறைய நீர் கொண்டு வர முடியவில்லை. என்னைப் பார். நான் அந்த எஜமானிக்கு எவ்வளவு நீர் கொண்டு வருகிறேன்"என்று கர்வமாகப் பேசி ஏளனம் செய்தது.
ஓட்டைப் பானை பதில் சொல்லாமல் குனிந்து கொண்டது.அது சில நாட்கள் வரை பொறுமையாக இருந்தது. ஓட்டையாகி விட்ட போதும்  எஜமானி ஏன் இதையே தூக்கி வருகிறாள் என்று அது திகைத்தபடி இருந்தது. ஒருநாள் மனம் பொறுக்காமல் அந்த ஓட்டைப்பானை கூறியது."அம்மா, என்னால் பானை நிறையத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை.அதனால் என்னை உடைத்துவிட்டு வேறு நல்ல பானையை வாங்கிக் கொள்."
அந்தப் பெண் சிரித்தாள்."உன்னால் எனக்கு பயன் குறைவு என்றுதானே நினைக்கிறாய். இதோபார். கிணற்றிலிருந்து வீடு வரும் வரை பூக்களாக இருக்கிறதே அதைப் பார்த்தாயா.உன்னிடமிருந்து சிந்தும் தண்ணீர் விழும் இடத்தில் நான் பூக்களின் விதைகளைப் போட்டேன்.அதுதான் வழியெங்கும் பூக்களாகச் சிரித்து நம்மை மகிழ்விக்கின்றன. அதனால் உன்னால் ஏதும் பயனில்லையென்று வருந்தாதே.என்றாள் அதைக்கேட்டு அந்த ஓட்டைப் பானை நம்மாலும் ஏதோ பயன் இருக்கிறது என்று புரிந்து கொண்டு சிரித்தது நல்லபானையும் அதைப் பார்த்து நட்புடன் சிரித்தது. 
இந்தக் கதையைப் படித்தபோது பயனற்றது என்பது இறைவனின் படைப்பில் ஏதுமில்லை.அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்தும் பொறுப்புதான் நமக்கு வேண்டும்.என்று ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.




Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, August 30, 2012

நினைத்துப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன்.
என் இளமைப் பருவம்.பதினெட்டு வயதில் திருமணமாகி கணவரின் இல்லத்தில் வாசம். வீட்டில்  வேலை அத்துடன் அரசுத் துறையில்  
ஆசிரியர் பணி. வேலைப் பளு அதிகம். வீட்டிலும் மூன்று குழந்தைகள். வயதானவர், குழந்தைகள், விருந்தினர், என்று கவனித்துச் செய்யவேண்டிய நிலை. பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டிய நிலை.எந்தக்  குழந்தையையும் சீராட்டி பாராட்ட இயலாத நிலைமையில் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விட்டு பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டிய கட்டாயம். மாலையில் களைத்து வந்தால் மீண்டும் இரவுக்கான வேலை. இப்படிப் போயிற்று வாழ்க்கை.
ஆனால் இன்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.அவர்களின் மூன்று வயது மகள் எழுந்தவுடன் அழுது கொண்டேயிருந்தாள். அவளை எடுத்து அணைத்து கொஞ்சி விளையாட்டுக் காட்டி குடிக்கப் பால் கொடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் சமாதானமானாள்.அதுவரை அந்தக்குழந்தையின் பெற்றோர் அவளைத் தவிர உலகமில்லை என்பதுபோல அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது நான் எவ்வளவு பெரிய சுகத்தை சுவர்க்கத்தை இழந்திருக்கிறேன் என்று புரிந்தது.இதேபோல என் இரண்டு வயது மகன் தூக்கு என்று கைகளைத் தூக்கியபோது அவன் அழ அழ அதைக் கவனிக்காது சென்றிருக்கிறேன். காரணம் வேலைப் பளுவுடன் கடமைக்காக ஓடவேண்டிய நிலை. ஆனால் இன்று தனிமையில் அந்த நாளின் நினைவு எழும்போது மனம் ஏங்குகிறது. மனம் கனக்கிறது.இந்த நிலை என்போன்ற பெண்களுக்கு வரக்கூடாது என்பதால் சிறு குழந்தைகளை அவர்களை முடிந்தவரை கொஞ்சிப் பேசுங்கள்.அணைத்து அரவணைத்து மகிழுங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த இன்பம் கிட்டாது.தான் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சி மகிழாமல் போனோமே என்று வயதானபின் வருந்துவதில் பயனில்லை.
'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்று வள்ளுவரின் வாய்மொழி எவ்வளவு உண்மையானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். 






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, August 9, 2012

26 கண்ணனின் மனம்

Lord Sri Krishna




இன்று கண்ணனின் பிறந்த நாள்..கோகுலாஷ்டமி என்று இந்த நாளைக் கொண்டாடுகின்ற சிறப்பான  நாள்.இதுபோன்ற நாட்களில் கொண்டாடுவது மட்டுமல்லாது இந்த நாள் மூலமாக இறைவன் நமக்குக் காட்டும் பல நல்ல பண்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணன் அரசகுமாரனாகப் பிறந்து ஆயர்பாடியில் வளர்ந்து ஆடு மாடு மேய்த்து எளிமையாக வாழ்ந்தான் என்ற கதை நமக்குத் தெரியும்.எளிய சிறுவர்களான ஆயச் சிறுவர்கள்தான்  அவனது உயிர்த் தோழர்களாக இருந்தனர்.அவர்களுடன் அவன் ஆடிப் பாடி மண்ணில் புரண்டு விளையாடி  உயிர் நண்பனாகத் திகழ்ந்தான். அந்த ஆயச் சிறுவர்களும் கண்ணனைத் தங்களின் உயிராக எண்ணி இருந்தனர்.கண்ணனையே தங்களின் தலைவனாக எண்ணி ஒவ்வொரு சொல்லும் செயலும் கண்ணனுக்காகவே என்று வாழ்ந்து வந்தனர்.
            ஒருநாள் கண்ணன் அமர்ந்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்த அச் சிறுவர்கள் அவனுக்கு மணி மகுடம் சூட்ட எண்ணினா வெகு நேரம் சிந்தித்தனர். அவன் அழகுக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு ஒரு சிறந்த மகுடத்திச் சூட்ட எண்ணினர்.அப்போது அங்கே வந்த ஒரு மயிலைப் பார்த்தனர்.உடனே மயிலின் பின்னே ஓடி இறகுக்காகக் கையேந்தினர்.அவர்கள் கண்ணனின் நண்பர்களன்றோ.அவர்கள் கேட்டதும் கொடுப்பது எத்தனை புண்ணியம் என்று அந்த மயில் எண்ணியதோ என்னவோ.தன் மேனியிலிருந்த மயில் பீலிகளை உதிர்த்தது.அதனைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்த அந்த கோபச் சிறுவர்கள் அதனை கண்ணனின் தலையில் செருகினார்.  
கண்ணன் மகிழ்ச்சியோடு சிரித்தான்.தினமும் மயில் பீலி அவன் தலையை அலங்கரித்தது.
கம்சவதம் முடிந்தபின்பு மன்னனாகக் கண்ணன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது மறக்காமல் மயில் பீலியைத் தன் நண்பர்களின்  அடையாளமாகக் கண்ணன் சூடிக் கொண்டதுதான் அவனது உள்ள உயர்வை எடுத்துக் காட்டுகிறது. எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் நம் அன்புக்குரியவர்களையும் நம் மீது அன்பு செலுத்தியவர்களையும் நாம் மறக்கலாகாது என்ற சிந்தனையை இந்தப் பண்டிகை நாளில் நாம் தெரிந்து கொள்வோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, July 19, 2012

25-பிஞ்சு நெஞ்சம்.

நான் ஆசிரியையாகப் பணியேற்ற புதிது. முதலில் ஐந்தாம் வகுப்பிற்குதான் ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.அந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய போதிய அறிவும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.அதனால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கதை மூலமாகக் குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம்.கதை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது/ அதுவும் குழந்தைகளுக்குப் பிடிக்கக்கேட்பானேன்.அப்படி ஒருநாள் அம்மாவைப் பற்றிய என் கற்பனைக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அம்மாவின் அன்பு நம்மீது அவள் கொண்டுள்ள  ஆசை அக்கறை நமக்காக அவள் செய்யும் தியாகம் வேலைகள் என்றெல்லாம் சொல்லிவந்தேன்.சில குழந்தைகள் தன் அம்மாவும் அப்படித்தான் என பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கேவல் சத்தம் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி அழுவது தெரிந்தது.கண்கள் குளமாக கேவலுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் வருத்தமாகிவிட்டது எனக்கு. அவளை அருகே அழைத்தேன்.தயங்கியவாறு வந்த பெண் தன் அழுகையை நிறுத்தமுடியாமல் தவித்தாள்.அருகே இருந்தவள்" டீச்சர், அவளோட அம்மா இறந்துட்டாங்க அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமாம்." என்ற போது என் மனத்துக்குள் யாரோ சாட்டையால் அடிப்பதைப்போல் வலியை உணர்ந்தேன்.
.
ஏதோ அறிவுரை கூறுவதாக என்ணிக் கொண்டு சற்று மிகைப் படுத்திக் கூறி இந்தப் பெண்ணின் மனப் புண்ணைக் கீறி வேதனைப் படுத்தி விட்டதற்காக மிகவும் வருந்தினேன்.

பின்னர் பேச்சை மாற்றி வகுப்பை சமநிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண்ணின் வேதனை படிந்த கண்களையும் ஏக்கத்தில் துவண்ட மனவாட்டத்தையும் என்னால் மறக்க இயலவில்லை.
 
அன்று மாலையே அவள் இல்லம் சென்று அவளையும் அவள் தந்தையையும் பார்த்துப் பேசினேன். மீண்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மலர்ச்சியையும்  பார்த்தபிறகே என் மனம் ஓரளவு அமைதியடைந்தது.
யார் மனமும் புண்படாமல் பேசவேண்டும் என்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.என் மனதை விட்டு அகலாத நினைவு என்றே சொல்லலாம்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, July 8, 2012

24.அமெரிக்க தீபாவளி

அமெரிக்க தீபாவளி.
நாட்டுக்கு நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்தந்த  நாட்டுக் கலாச்சாரத்தின்படி சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவிலும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் நாளை
சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றனர். அரசாங்க விடுமுறை நாளான இன்று மாலையில் நமது நாட்டு தீபாவளி நாள் போல இங்கும் மத்தாப்பு கொளுத்தி ஊரையே ஒளி வெள்ளமாக மாற்றுகின்றனர்.
ஒவ்வொரு நகரிலும் ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரும் கூடுகின்றனர்.இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வண்ண மயமான  மத்தாப்பு கொளுத்தும் காட்சி சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெறுகின்றது.
இந்த வண்ணக் காட்சியைக் காண அமெரிக்க மக்கள் கூடியிருக்கும் காட்சியை படத்தில் பாருங்கள்.







தீப ஒளியையும் மக்கள் கூட்டத்தையும் காணும் போது பெரிய பண்டிகையைக் கொண்டாடிய
திருப்தி நம் மனதுக்கு ஏற்படுகின்றது.
எந்த நாடாக இருந்தாலும் குழந்தைகள் உலகமே ஒன்றுதான் என்பதை அந்நாட்டுக் குழந்தைகள் ஆரவாரத்துடன் பூவாணத்தை ரசித்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காட்சி முடிந்தபின் எங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்தை நாங்கள் அடைய அரைமணி நேரம் ஆயிற்று எங்கள் கார் இருந்த இடத்திலிருந்து நகர் அரைமணி நேரம் ஆயிற்று.அத்தனை நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்று கொண்டே இருந்தன.ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்ட நாங்கள் வீட்டை அடைய சுமார் பதினொன்றரை மணி ஆயிற்று. இத்தனை கூட்டம் இருந்தாலும் எந்த சத்தமும் இன்றி அமைதியாக நகர்ந்துகொண்டு  இருந்ததுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்..


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com