Thursday, March 28, 2013

மூத்தோர் மனம்

மூத்தோர் மனம் 

ஒரு முறை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகே இருந்த ஒரு மூதாட்டி கலங்கிய தன கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தார்.பார்க்கவே பரிதாபமாக இருந்தது.அருகே அமர்ந்திருந்த  அவர.கணவர் சற்றுக் கடுமையாகஅவரைக் கடிந்து கொண்டபடியே சமாதானம் செய்தபடி இருந்தார். நானும் மனம் பொறுக்காமல் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.
காரணத்தை அவர் கூறியபோது அந்த அம்மாள் எவ்வளவு கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.வேறொன்றுமில்லை.இவர்கள் இருவரையும் பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு போய்வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் தன மகன் திரும்பிச் சென்று விட்டதைத் தங்களை அலட்சியப் படுத்திவிட்டதாக எண்ணி அழுகிறாள் அந்தத் தாய்.
அந்தத் தாயை ஒருவழியாக சமாதானம் செய்தேன்.வெகுநேரம் கழித்தே அந்த அம்மாள் சமாதானமானார்கள்.எனக்கும் இந்தத் தாயைப் பார்த்தபோது அந்த மகன் சற்று நேரம் நின்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் இந்தத் தாயுள்ளம். இதை இந்தத் தலைமுறை ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறது என்று தெரியவில்லை.
நான் இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவர்களிடம் குறிப்பாக அந்த அம்மாளிடம் சொல்லிக் கொண்டு இறங்கினேன்.இந்த நிகழ்ச்சி என் மனதில் பதிந்திருந்ததால் நான் அதன்பின் எங்கு சென்றாலும் வீட்டில் சொல்லிக் கொண்டு போகும் பழக்கத்தை அனைவருக்கும் சொல்லிவைத்தேன்.
அன்று பள்ளிக்குச் சென்றபோது ஒரு ஆசிரியரின் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.அனைவரும் அவர்களின் இல்லம் சென்றோம். அந்த ஆசிரியர் தன தாய்க்கு ஒரே பிள்ளை.தினமும் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு வெளியே செல்லும் அவர் அன்று தாயிடம் சொல்லிக் கொள்ளாமல் பள்ளிக்கு வந்துள்ளார்.அவர் வந்து ஒருமணி நேரத்தில் தாயார் திடீர் மரணமடைந்துள்ளார்.
தாயாரின் பிரிவுக்காக அழுததைவிட கடைசிநாள் தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேனே. அந்தத் தாயின் மனத்தைக் கடைசி நாளில் ஏங்க வைத்துவிட்டேனே என்று அவர் கதறியது மனதை உருக்குவதாக இருந்தது.
இன்றைய இளைய தலைமுறைக்கு இளமையில் உறவுகளின் அருமை பாசம் புரிவதில்லை. அந்த பாசத்தை உணரும்போது உறவுகள் இருப்பதில்லை.
இதை இளைய தலைமுறை உணர்ந்து கொண்டால் இடைவெளிக்கு எது இடம்?

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasaye
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, March 21, 2013

பேத்தியின் திருமண விமரிசனம்.

 என் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.
கடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.
                              எட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா )  ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
                              மாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.
                              திருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.
அதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாடல் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.
                             திருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து  கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண்  கொர்த்துவைத்தனர்.
                              மறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்  
சரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.
                               பெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக 
காசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா  என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா   என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண்  பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.
இவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய முறைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
என் பேத்திக்கு அனைவரும்  நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Photo
Like ·  · Share · Tuesday at 6:00pm · 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

மகளிர் தினம்.

மகளிர் தினம்.

கடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப்  (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட  ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில்  அடியேனும்  75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, February 19, 2013

அப்பா சொன்ன கதை.

என் இள  வயதில் மிகவும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் தேர்வு சமயத்தில் படிக்காமல் பண்டிகைநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.ஆசிரியரான என் அப்பா அப்போது உள்ளே வந்தார். ஒரு வினாவைக்  கேட்டு அந்தப் பாடம் படித்தாயா?என்றார். நான் இன்னும் -படிக்கவில்லை என்றபோது, "இன்னும் சற்று நேரத்தில் தேர்வு எழுதவேண்டும் என்ற பயமோ பதட்டமோ இன்றி கோலம் போடுகிறாயே எப்படி மதிப்பெண் வரும்" என்று நிதானமாகத்தான் கேட்டார். ஆனாலும் எனக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.அதைக் கவனித்த என் தந்தையார் "போ ஒருமுறை படித்ததையாவது திருப்பிப் பார்" என்றார். கோலத்தை அவசரமாக முடித்துவிட்டு உள்ளே சென்றேன்.
      அன்று இரவு சாப்பிடும்போது, என்னை அன்போடு பார்த்த அப்பா, "நீங்கள் படிக்க நான் வசதி செய்து தருகிறேன் அதனால் உங்களுக்கு படிப்பின் அருமை தெரியவில்லை.ஆனால் நான் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு சாதாரண வேலையில் இருந்து கொண்டே மேல் படிப்புப் படித்தேன்.பணம் கட்ட நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?" என்று சொன்ன போது நான் கையில் எடுத்த சோற்றுக் கவளத்தை வாயில் போடாமல் பொம்மை போல் அமர்ந்து கேட்டேன்.
       "என் நாற்பதாவது வயதில் தான் நான் பி.ஏ. பரீட்சைக்குப்  படித்தேன்.தேர்வுக்குக் கட்ட பணம் இல்லாமல் அலைந்து திரிந்து அந்தப் பணத்தைச் சேர்த்தேன்.அப்படியும் போகவர பேருந்து கட்டணமும் தேர்வுக்கான கட்டணமும்தான் சேர்க்க முடிந்தது.
தேர்வுக்குப் பணம் கட்டக் கடைசி நாளானதால் விடுப்பு எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று பணம் கட்டிவிடலாம் என்று மன தைரியத்தோடு சென்றேன்.எங்கள் பள்ளி தனியார் பள்ளியானதால் சரியான காரணத்தைச் சொல்லியும் அரைநாள் விடுப்புதான் கொடுத்தனர்.இப்போதே ஒருமணியாகி விட்டதே என்று வேகவேகமாக பேருந்தைப் பிடித்து மதுரைக்குப் பயணமானேன்.பாதிவழி போனதும் என் கடிகாரத்தைப் பார்த்தேன்.பணம் கட்ட என்னும் ஒருமணி நேரமே இருந்தது.அந்தக காலத்தில் பரீட்சைக்குப் பணம் கட்டுவது என்பதே  சிரமமான காரியமாக இருக்கும். மனம் பதை பதைப்புடன் அமர்ந்திருந்தேன்.
        திடீரென்று ஒரு பெரும் ஓசை கேட்டது.எல்லா பயணிகளும் என்ன என்ன என்று கீழே இறங்கினர்.நானோ பெரும் அவசரத்தில் இருந்தேன் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று சேர்ந்து விடலாம் பணமும் கட்டி விடலாம் என எண்ணியிருக்கும் இந்த சமயம் வண்டி நின்று விட்டதே என கண்களில் நீர் நிறைய ஏறக்குறைய அழுது விட்டேன்.நடத்துனரோ இனி இன்னொரு வண்டி வந்தால் அதில் ஏற்றிவிடுகிறேன் நில்லுங்கள் எனக் கூறியதும் என் ஆசை அடியோடு நொறுங்கி விட்டது.அந்தக் காலத்தில் அபராதத்துடன் பணம் கட்டும் பழக்கம் எல்லாம் கிடையாது.
       மதுரை சென்றடைய இன்னும் இரண்டு மைல் இருந்தது ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்கள்.என்னால் நிற்கவோ காத்திருக்கவோ இயலவில்லை.எனவே ஓடத் தொடங்கினேன்.வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடுவதை பலரும் பார்த்தாலும் நான் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.ஒருவழியாக ஐந்து மணிக்குள் கலெக்டர் ஆபீஸ் முன் சென்று பெருமூச்சுடன் நின்றேன்.பணம் கட்டும் இடம் சென்று நின்று பூர்த்தி செய்த விண்ணப்பத் தாளைக் கொடுத்துவிட்டு பணத்தை எண்ணினேன். "ஐயோ, ஒரு ரூபாய் குறைகிறதே. பேருந்துக்கான பணத்தைச் சேர்த்தாலும் போதவில்லையே."என்று தவித்தேன்.நேரம் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.கட்டணம் வசூலிப்பவரோ "என்ன சார், நேரமாச்சு.அஞ்சு மணிக்குள்ளே குளோஸ் பண்ணணும். சீக்கிரம்."என்றார்.முகம் சிவக்க, உடல் வியர்வையில் நனைய, கண்கள் குளமாக ஏறக்குறைய பித்துப் பிடித்தவன் போல் நின்ற என் பரிதாப நிலையை நினைத்து நானே வெட்கப் பட்டேன்."சார் பணம் ஒரு அரை  ரூபாய் குறைகிறது.என்ன செய்யறதுன்னு தெரியல்லே.
ரெண்டு மைல் ஓடிவந்தப்போ கீழே விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்."என்றேன் கண்களின் நீரைத் துடைத்தபடியே. அப்போது ஒரு முதியவர் என் தோளைத் தட்டி ஒரு ரூபாயை நீட்டினார்.
ஐயா என்று பேச ஆரம்பித்த என்னை முதலில் பணம் கட்டு என்று ஜாடை செய்தார்.பணம் கட்டியவுடன் கவுண்டர் மூடப்பட்டது.
என் மன உளைச்சலும் மூடிக்கொண்டது.பணம் கொடுத்து உதவிய அந்த பெரிய மனிதருக்கு நன்றி சொல்லி மீதிப் பணத்தைக் கொடுக்க நினைத்துத் தேடினால் அவரைக் காணோம். உதவிசய்த கையோடு அவர் சொல்லாமலேயே சென்று விட்டார். நான் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்கினேன்.அதன்பின் மேலே படித்துப் பட்டம் வாங்கி இன்று ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன்.என் வாழ்நாளில் இந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்.அதனால் படிப்பதை சாதாரணமாக எண்ணிவிடாதே.என்றார்.அந்த அப்பாவின் மீது எனக்கிருந்த அன்பு வளர்ந்ததோடு மரியாதையும் கூடிவிட்டது.இந்த விடாமுயற்சியை நானும் பின்பற்ற முடிவு செய்தேன்.அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும் என எண்ணுகிறேன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, December 22, 2012

35-முடிவில்லாத கதை




பாட்டி சொல்லும் கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்திய சுட்டி விகடனுக்கு பாட்டியின் நன்றி.



சில புதிய கதைகளை சுட்டிகளுக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தை சுட்டிவிகடன் எனக்கு அளித்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி.
சுட்டி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைதளத்தைப் படிப்பவர்கள் அதையும் கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்புப்பாட்டி,
ருக்மணி சேஷசாயி.


   35- முடிவில்லாத கதை.

ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்.அவன் எப்போதும் ஏதேனும் புதிய புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சபையில் கூறுவான். அந்த கருத்துகளால் மக்களும் மந்திரிகளும் சற்றுக் குழப்பமடைவார்கள்.அதனைத் தீர்த்து வைக்கப் பெரும் பாடு படுவார்கள். கடைசியில் அதைத் தீர்க்காமல் மன்னனிடம் தோற்று நிற்பார்கள். மன்னன் இவர்களின் தோல்வியைக் கண்டு மனதுக்குள் மகிழ்வான்.இப்படி ஒரு மன்னனைப் பெற்றதால் நாட்டின் முன்னேற்றமே நடக்கமுடியாமல் இருக்கிறதே என்று மந்திரிகளும் மக்களும் வருந்தினர்.
ஒருமுறை அந்த நாட்டிற்கு ஒரு புலவர் வந்தார்.அவர் மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.அந்த நாட்டு மன்னனைத் திருத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என எண்ணினார்.அதனால் மன்னர் முன் வந்து நின்ற புலவர் "வணக்கம் மன்னர் மன்னா, தாங்கள் பல கேள்விகளைக் கேட்டு மந்திரிகளையும் மக்களையும் திணற அடித்துள்ளீர்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விடை சொல்லிவிட்டால் என் தமிழப்புலமையைத் தங்களுக்கு அடிமையாக்குகிறேன். நீங்கள் தோற்றால் இந்த நாட்டு மக்களின் நலன் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை என வாக்குத் தரவேண்டும்" என்றான்.
மன்னருக்கு மகிழ்ச்சி. எங்கிருந்தோ வந்து என்னிடம் மாட்டிக் கொள்கிறானே என்று நகைத்தான்.அதனால் ,"எங்கே கேள் பார்ப்போம்"என்றான் கர்வத்தோடு.
"மன்னா, முடிவே இல்லாத கதையைச் சொல்லுங்கள்."
"என்ன, முடிவே இல்லாத கதையா?"
"ஆம் மன்னா, போதும் என்று சொல்லும் வரை கதை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அப்படி ஒரு கதை சொல்ல முடியுமா தங்களால்?"
அரசன் யோசித்தான். தன கற்பனை மேல் அவனுக்கு அபார நம்பிக்கை."சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.
ஆனால் அரசனால் மூன்று நாட்களுக்கு மேல் கற்பனை செய்ய இயலவில்லை.மிகவும் களைத்துவிட்டான். சோர்ந்துபோய் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.ஆனால் நீ அப்படி ஒரு கதையைக் கூறவேண்டும் அப்போதுதான் நீ வென்றதாகக் கொள்ள முடியும் என்றான்.
புலவன் கதை சொல்லத் தொடங்கினான்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் பல காணி நிலம் இருந்தது. நல்ல செழிப்பான பூமி. மூன்று போகம் விளையக் கூடியது.அப்படி ஒரு முறை மூன்று போகம் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து  சேமிப்புக் கிடங்கில் கொட்டியிருந்தார்.அந்த மலைபோலக் கொட்டிக் கிடந்த நெல்லை ஒரு குருவி பார்த்தது இந்த நெல்லை நம் கூட்டுக்குக் கொண்டு பொய் விடவேண்டும் என்று அந்தக் குருவி நினைத்தது. உடனே பறந்து வந்து ஒரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்துவிட்டுத் திரும்பியது மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைத் தன மூக்கில் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.மூன்று நாட்கள் ஆகியும் அவன் நிறுத்தவில்லை இதே செய்தியை கூறிக் கொண்டே இருந்தான்.
"புலவரே நிறைய நெல்மணிகளைத் தான் கொண்டுபோய் விட்டதே  பிறகு என்ன அதைச் சொல்லுங்கள் என்றான் பொறுமை யிழந்து.
"இல்லை மன்னா, அந்த அம்பாரம் நெல்  முழுவதையும் அந்தக் குருவி கொத்திப் போகும் வரை சொல்லவேண்டும் அல்லவா?"
மன்னன் மிகவும் களைத்துவிட்டான். மந்திரி மார்களும் கூடியிருந்த மக்களும் தூங்கிவிட்டனர்.மன்னன் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக்  கேட்பது யார்?
தான் சொன்னபடியே தன நாட்டைக் கவனிப்பதாகவும் இனி அனாவசியமாக மந்திரிமாரையும் மக்களையும் சங்கடப் படுத்துவதில்லை என்றும் உறு திகூறினான் அந்த மன்னன்.
அத்துடன் நிறைந்த பரிசுகளையும்  அந்தப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான் .மக்களும் நிம்மதி பெற்றனர்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்து.


மணி மணியாய் செய்திகள் என்ற தளத்திற்கு விஜயம் செய்து கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் 

எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் அன்புப் பாட்டி
ருக்மணி சேஷசாயி.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 5, 2012

34.கவனம் தேவை.

                கவனம் தேவை.
     
      வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து "அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.
      அவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.
அந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள்  எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது. 
       ஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே  என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com