Monday, August 29, 2011

8. இவர்கள் மனிதர்கள்

இவர்கள் மனிதர்கள்.
ஒரு  ஞாயிற்றுக்கிழமையன்று அம்பத்தூரிலிருக்கும் என் உறவினரைப் பார்த்து வரலாம் எனப் புறப்பட்டோம்.நாங்கள் செல்லும் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அத்துடன் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.அதனால் கொஞ்சம் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு போனோம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நாங்களும் கொண்டுவந்த பழங்களைப் பெரியவரிடமும் பிஸ்கட்டுகளைக் குழந்தைகளிடமும் கொடுத்தோம்.
அந்தப் பெரியவரின் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வீட்டு இல்லத்தரசி எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தவே சம்மதித்துவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது வாயிலில் "சாமீ..".என்ற குரல் கேட்டது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் "யாரது வள்ளியா? வா..வா..நல்லாருக்கியா?" என்று வரவேற்றார்.
சுமார் எழுபத்தைந்து வயதுகொண்ட முதிய பெண் உள்ளே வந்து மூலையில் அமர்ந்தாள்.உழைத்து ஓடான ஒல்லியான உடல்.கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன.
அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் கவனிப்பதைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
அந்தப் பெண்ணும் தன் உடன் பிறந்தவரிடம் கூறுவது போல்  தன்னைப் பற்றிய விவரங்களைஎல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.அவளுக்குக் காப்பி கொடுக்குமாறு கூறியவர் நாங்கள் கொண்டுபோய்க் கொடுத்த பழங்களிலிருந்து சில பழங்களை அவளுக்குக் கொடுத்தார். மிக்க சங்கோஜப் பட்டவளாய் "இதெல்லாம் எனக்கெதுக்கு சாமீ.நீங்க சாப்புடுங்க."
என்று மறுத்தபோதும் வற்புறுத்தி அவளை சாப்பிடச் சொன்னார்.
சற்று நேரத்தில் அவரது மருமகள் அவரிடம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தாள்.அதை எண்ணிப் பார்த்த அவர்,"ஏம்மா, ஒரு அம்பது ரூபாய் கூடக் கொண்டு வா."
என்று கூறியவர் அந்தப் பணத்தை அந்த முதியவளிடம் கொடுத்தார்."வள்ளி, இந்த மாசத்திலிருந்து அம்பது ரூபாய் கூடக் கொடுத்திருக்கேன்.இனிமேல் இருநூறு ரூபாய் உனக்கு பென்ஷன்." என்றவர் சிரித்தபடியே அவளுக்கு விடை கொடுத்தார்.காலில் விழாத குறையாக அவரை வணங்கி விடை பெற்றாள் அந்த முதியவள்.
இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர் "இந்தக் கிழவி சிறுவயதிலிருந்து எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தவள். இப்போது முடியவில்லை. அதனால் அவளை நிறுத்திவிட்டேன்.ஆனால் நாமெல்லாம் பென்ஷன் வாங்கும் போது இருபது வருடமாக வேலை பார்த்த வேலைக் காரிக்கும் நாம் பென்ஷன் கொடுப்பதுதானே முறை."
என்று சொல்லிச் சிரித்தார்.
நான் திகைத்தேன். மனிதநேயம் என்பது இதுதானோ. தன்னைப்போல் பிறரை நினைப்பதை விட சிறந்த மனித நேயம் வேறு உண்டோ. 
என் மனதுக்குள்ளும் ஒரு புரட்சி தோன்றியது. வள்ளலாரும் வள்ளுவனாரும் மற்ற மகான்களும் இதைத்தானே கூறினார்கள்!
மறுநாள் என் வீட்டு வேலைக்காரியை ஒரு சகோதரியைப் போலப் பார்த்தேன்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Sunday, August 7, 2011

அப்பாவின் பரிசு

அப்பாவின் பரிசு.

பள்ளிப் பருவத்தில் பல பரிசுகளைப் பெற்றிருந்தாலும் அவை நினைவில் இல்லை.ஆனால் யாரை மிகக் கண்டிப்பானவர் என்று நினைத்து அருகில் நெருங்கவே அச்சப்பட்டுக் கொண்டிருந்தேனோ அவர் எதிர்பாரா விதமாக எதிபாரா சமயத்தில் பரிசளித்தார் என்றால் அதை மறக்க முடியுமா? ஆம். என் தந்தையார்தான் எனக்கு எதிர்பாரா பரிசளித்தவர். எப்பேர்ப்பட்ட பரிசு அது!.
அந்தக் காலத்தில் பத்திரிகைகளும் வார மாதப் புத்தகங்களும் அதிகமாக இல்லை. கல்கி விகடன் குமுதம் போன்ற ஒரு சில பத்திரிகைகளே உண்டு.அவற்றுள் கல்கண்டு என்ற சிறுவர் பத்திரிகையும் வந்து கொண்டிருந்தது.அப்போது அது சிறுவர் பத்திரிகையாக இருந்தது.
தமிழ்வாணனின் தொடர்கதையைப் படிக்க நாங்கள் ஆவலாகக் காத்துக் கொண்டிருப்போம்.மர்ம மனிதன் ,பயங்கர நகரம் போன்ற துப்பறியும் நாவல்கள் எங்கள் வாழ்வின் அங்கமாக இருந்த காலம்.
அப்போதுதான் கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலர் பற்றிய விளம்பரம் வந்தது.சாதாரண பத்திரிகைமீதே நாங்கள் அளவு கடந்த ஆவல் கொண்டிருக்கும்போது மலர் வெளிவருகிறது என்றால் கேட்கவேண்டுமா? தீபாவளியை நாங்கள் எதிர்பார்த்ததை விட கல்கண்டு பத்திரிகையின் தீபாவளி மலரைத்தான் அதிகமாக ஆவலுடன் எதிர்பார்த்தோம்.நண்பர்களுள் யார் வாங்கப் போகிறார்களோ என எதிர்பார்ப்பு வேறு.கதைப் புத்தகம் படிக்கும் நேரத்தில் பாடத்தைப் படித்தால் மதிப்பெண் அதிகம் வாங்கலாமே என்ற தந்தையாரின் கண்டிப்பினால் கிடைக்கும் கல்கண்டு பத்திரிகையை மறைத்து மறைத்து வைத்துப்  படிப்போம்.
தீபாவளிமலர் விலை ஒரு ரூபாய்.எங்களுக்கு அது அதிகம்தான்.பத்திரிக்கையின் விலை இரண்டணா.அதை வாங்குவதே மிகுந்த சிரமம்.
ஒரு ரூபாய்க்கு எங்கே போவது. அம்மாவிடம் சொல்லிப் புலம்புவதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.பத்திரிக்கை படிப்பதையே தவறென்று சொல்லும் அப்பாவா மலர் வாங்கித்தருவார்?அவரே எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறு.அவரே ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியரும் கூட.வீட்டில் இருக்கும்போது கூட ஏதேனும் பாடம் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்.நாட்கள் நகர்ந்து தீபாவளி நாளும் வந்தது.
அதிகாலை கங்கா ஸ்நானம் முடித்து அப்பா எல்லோருக்கும் புதுத் துணி கொடுத்து ஆசி கூறுவார்.அந்த நிகழ்ச்சியின் போது வீட்டு அங்கத்தினர் அனைவரும் நடுக்கூடத்தில் ஆஜரானோம். அப்பா அனைவருக்கும் புதுத் துணியைக் கையில் கொடுத்தார்.எப்போதும் போல நானும் கையை நீட்டி வாங்கிக் கொண்டேன். உனக்கு ஸ்பெஷல் பரிசுடீ பிரித்துப் பார்  என்றார் அம்மா. அப்பா புன்னகைத்தார்.நான் என்புதுத்துணியைப் பிரித்துப் பார்த்தேன்.
ஆடையின் நடுவே புத்தம்புதிய கல்கண்டு தீபாவளி மலர் சிரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். என்னால் மகிழ்ச்சியையும் திகைப்பையும் அடக்கமுடியவில்லை.அப்பா!.....என்று மகிழ்ச்சியில் கூவிவிட்டேன்.அந்த நிமிடம் என் மனநிலை எப்படி இருந்தது என்பதைக கூறவே இயலாது.அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் மனம் தந்தையாரின்  அன்பை எண்ணி பெருமிதம் கொள்கிறது.
எதிர்பாராமல் கிடைத்த அப்பாவின்  அந்தப் பரிசுக்கு இணையாக என்னால் வேறு எந்தப் பரிசையும் எண்ண முடியவில்லை.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, July 25, 2011

அம்பது பைசா மகத்துவம்

அம்பது  பைசா  மகத்துவம் 

இரண்டு மாதங்களுக்கு முன்னால் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சிறியஸ்டேஷனில்  வண்டி நின்றது.ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்தஎன்  முன் ஒரு பிஞ்சுக்  கை நீண்டது. "அம்மா ஏதானும் குடுங்கம்மா".என்ற குரலுடன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தன இரண்டு கண்கள். நானும்என்  பையைத் துழாவிப் பார்த்தேன்.ஒரு ஐம்பது பைசாதான் இருந்தது. மீதி எல்லாம் நோட்டுக்களாக இருந்தன.அந்தச சிறுவனிடம்,
"இந்தாப்பா சில்லறை இல்லே. இதுதான் இருக்கு." என்றபடி அந்த நாணயத்தைக் கொடுத்தேன். அதைக் கையில் எடுத்துப்  பார்த்த அந்தப் பிச்சைக்காரன் பின்னர்  என்னைக் கூர்மையாகப் பார்த்தான். 
"இந்தாம்மா, இதை நீயே வச்சுக்க." எட்டணா நாணயம் இப்போது என் முன்னே சிரித்தது. எட்டணா நாணயத்தை விசிறியடித்த சிறுவன் அடுத்த பெட்டிக்குப் போய் விட்டான்.
அப்போது அந்த எட்டணாவின் மதிப்பு ஒரு காலத்தில் எப்படி இருந்தது என்பது என் நினைவுக்கு வந்தது.சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னே நான் பயணித்தேன்.எனக்கு அப்போது பதிமூன்று பதினான்கு வயது இருக்கும்.எங்கள் ஊர் தேனியில் வாரச் சந்தை நடக்கும்.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடும்.அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து வியாபாரிகள் தங்களின் விளைந்த பொருளைக் கொண்டு வந்து மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பார்கள்.ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் இந்தச் சந்தையில்இருந்துதான்  பொருள் வாங்கி வருவார்கள். மளிகைசாமானில் இருந்து காய்கறி துணி வகைகளும் ஆடு மாடு வியாபாரம் வரை கூட இங்கு நடக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்லும் நபர் நானும் எனக்குத் துணையாக என் தம்பியும்தான்.
அப்பா எட்டணாவை சில்லரையாக மாற்றித் தருவார். அம்மா இரண்டு பைகளைத் தருவார். ஒரு பையில் கிழங்கு வகை. மற்றதில் பச்சைக் காய்கள் என்று பிரித்துப் போட்டுக் கொண்டு வரச் சொல்லுவார்.நானும் தம்பியின் கைப்பற்றிக் கொண்டு சந்தைக்குச் செல்வேன்.அங்கு நான் வாங்கும் பொருள்களின் அளவும் விலையையும் கேட்டால் அது கனவுக் காலமோ என்று தோன்றுகிறது.
அந்த விலைப் பட்டியலை நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.
வெங்காயம் சின்னது...ஒரு வீசை அதாவது இப்போதைய ஒன்றரை கிலோ ஒன்றேகால் அணா (எட்டு பைசா)
உருளைக்கிழங்கு ஒன்றரை அணா. சேனை  பெரியது இரண்டு அணா.  சேப்பங்கிழங்கு முக்கால் அணா.(ஐந்து பைசா.)
இந்த அளவுகளில் பாதிதான் வாங்குவேன்.அதாவது இத்தனையும்  மூன்று அணாவில் முடிந்து விடும்.

அடுத்து பச்சைக் காய்கறி விற்கும் இடம் வருவோம்.எந்தக் காய் எடுத்தாலும் வீசை ஒன்றேகாலணா. வெண்டை, கத்தரி,  கோஸ்,பீன்ஸ் என்ற காய்களை ஒவ்வொன்றும் அரையணாவுக்கு வாங்குவேன்.மலையாகக் குவிந்திருக்கும் காய்களில் அளவு பார்க்காமல் தட்டு நிறைய அளந்து போடுவார் கடைக்காரர். அது ஒரு கிலோவாகவோ ஒன்றரைக் கிலோவாகவோ இருக்கலாம்.
நாட்டுக் காய்கள் விலை குறைவாக இருக்கும் ஆனால் கோஸ் பீன்ஸ் சற்றுக் கூடுதலாக  இருக்கும்.அவரை பீர்க்கு 
புடல் பாகல் காய்களெல்லாம் வீட்டு வாசலிலேயே காய்க்கும் அதனால் அவற்றை வாங்கவேண்டிய அவசியமில்லாமல் இருந்தது.

இந்தக் காய்கள் முழுவதும் ஆறு அணாவில் முடிந்திருக்கும். கையில் இன்னும் இரண்டணா இருக்கும்.பழங்கள் விற்கும் பகுதிக்குப் போய் ஒரு சீப்பு வாழை ஒரு அணாவுக்கும் 
ஒரு மடி இலை அதாவது ஐந்துவாழை  இலைகள் அரை அணாவுக்கு வாங்குவேன். இன்னும் இருக்கும் அரை அணாவுக்கு வரும் வழியில் அணாவுக்கு பதினாறு நுங்கு கிடைக்கும் எட்டு நுங்குகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவோம்.

தூக்க முடியாத கனத்துடன் வீட்டுக்கு வந்து அவற்றைத் தரையில் கொட்டுவோம்.ஒவ்வொரு காய்கறியைத் தனியாகப் பிரிக்கவே ஒரு மணி நேரம் ஆகும்.
 இப்படிப்பட்ட எட்டணாவை அந்தப் பிச்சைக்காரச் சிறுவன் எவ்வளவு அலட்சியப் படுத்திவிட்டான்.ஒருகாலத்தில் அந்த எட்டணா எவ்வளவு மதிப்புடன் இருந்தது.காலத்தின் கோலத்தால் அது மதிப்பிழந்து போய்விட்டாலும் என்னைப்போன்ற அனுபவம் உள்ளவர்கள் அதை மறப்பார்களா? மறக்கத்தான் முடியுமா?









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, July 15, 2011

என் முதல் புகைப்படம்

.
என் பேத்தி தன் குழந்தையை விதம் விதமாய்ப் புகைப் படம் எடுப்பதைப் பார்த்து நான் இப்போது மலைத்துப் போகிறேன்.எங்களது இளமைக் காலத்தில் 
புகைப் படம் எடுப்பது என்பது மிகவும் அபூர்வம். அத்துடன் புகைப் படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்ற மூட நம்பிக்கையும் இருந்தது.
மிகவும் தேவை ஏற்பட்டால் ஒழிய  படம் எடுப்பது என்பது மிகவும் ஆடம்பரமான ஒன்றாகவே கருதப்பட்ட காலம் அது.
அந்தமாதிரி நேரத்தில் இளம் வயதுடைய நான் ஒரு புகைப் படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப் பட்டதில் தவறில்லையல்லவா?

        ஆனால் ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் ஒரு ரூபாய் கொடுக்கவேண்டும்.அந்த ஒரு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் ஒருநாளைய செலவுப் பணம்.அந்த ஒரு ரூபாயில் நான்கு  அணாவுக்கு துவரம்பருப்பு ஒரு அணாவுக்குப் புளிஇரண்டு  அணாவுக்கு மிளகாய் தனியா அரையணாவுக்கு கடுகு உளுத்தம்பருப்பு நான்கு அணாவுக்கு எண்ணெய் மீதி காசுக்கு இரண்டு வகை காய்களை வாங்கி வந்து விடுவார் என் பாட்டி. அத்துடன் உடன் அழைத்துச் செல்பவருக்கு கொசுறாக கொஞ்சம் வெல்லமும் சுவைக்கக் கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு வாங்கிவந்த பொருளிலேயே எங்கள் அனைவருக்கும் இரண்டு வேளைக்குமான சாம்பார் பொரியல்முடிந்துவிடும். 

         இந்த நிலையில் புகைப் படத்திற்காக ஒரு ரூபாய் செலவழிப்பது ஆடம்பரமில்லாமல் வேறென்ன? ஆனால் என்னுடைய புகைப்படக் கனவு மட்டும் தீரவேயில்லை. எப்படியும் புகைப் படம் எடுத்து என்முகத்தை அதில் பார்க்கவேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டேன். அந்த அருமையான நாளும் வந்தது.ஒரு மதிய நேரம் பள்ளி விடுமுறைநாள். வாசலில் நெல் காயப் போட்டிருந்தார்கள். அதைக் காவல் காத்தபடி ஒரு புத்தகத்தை வைத்துப்  படித்துக் கொண்டிருந்தேன்.

"போட்டோ எடுக்கறீங்களா... போட்டோ. ஒரு  நிமிடத்திலே உங்கள் அழகு முகத்தை நீங்களே பார்க்கலாம்."

ஒரு பெரிய புகைப்படக் கருவியைத் தூக்கியபடி வந்துகொண்டிருந்தார் புகைப்படம் எடுப்பவர்.அவரைச் சுற்றி ஒரு பட்டாளமாகவே சிறுவர் சிறுமியர் 
சூழ்ந்து கொண்டிருந்தனர்.என்னைப் பார்த்தவர் ஒரு நிமிடம் என் கண்களில் தெரிந்த ஆவல் மின்னலைப் பார்த்திருக்கக் கூடும்.என் முன்னால் தன் புகைப் படக்கருவியை  நிறுத்தினார். அது தன் மூன்று கால்களைப் பரப்பிக் கொண்டு நின்றது.நான் உள்ளே ஓடினேன். உடன் என் பாட்டியை அழைத்து வந்தேன்.என் பாட்டி பேரம் பேச ஆரம்பித்தார்.
"இந்தாப்பா. எட்டணாவுக்கு எடுக்கிறதா இருந்தா  எடு. இல்லே நடையைக் கட்டு."கறாராகப் பேசிய பாட்டியின் பேரத்துக்கு ஒப்புக் கொண்டவர் என்னை வந்து ஒரு நாற்காலியின் மேல் அமரச் சொன்னார்.என் பாட்டி "கொஞ்சம் இருப்பா," என்றவர் உள்ளே சென்று ஆறு மாதமே ஆகியிருந்த 
என் தம்பியைத் தூக்கிவந்து என்மடியில் அமரவைத்தார்.
"வயசுப்  பொண்ணைத் தனியாப் படம் எடுக்கக் கூடாது. தம்பியை மடியிலே வச்சுப் படம் எடுத்துக்கோ." தம்பியை மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தேன்.
என்னைச் சுற்றி ஒரு கூட்டமே சூழ்ந்திருக்க நான் அதன் நடுவே ஒரு நாயகியாகவே ஆகியிருந்தேன்.
புகைப்படம் எடுப்பவரோ விரைவாக எடுப்பதாகக் காணோம்.என்னைப் பார்த்த அந்தத் தெருவாசிகளில் சில பேருக்கும் என்னைப் போலவே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆசை வந்து விட்டது."என் பையனையும் படம் எடப்பா. அதன் பிறகு எங்களையும் எடு."என்று வரிசை வரவே புகைப் படக்காரருக்கு குஷி.நல்ல வசூலாகும் என்று மகிழ்ச்சியுடன் என்னைப் படம் எடுத்து சற்று நேரத்தில் ஒரு தபால் கார்டு அளவுக்கு புகைப்படம் ஒன்று தந்தார்."பாப்பா, படத்திலே ஈரம் இன்னும் காயலே. கை படாமே பாத்துக்கோ" என்றபடியே கொடுத்தார்.அந்தப் படத்தில் உண்மையாகவே நான் மிகவும் அழகாக இருப்பதாகவே தோன்றியது. எனது முதல் புகைப்படம் அல்லவா? அடிக்கடி அதை யாருக்கும் தெரியாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.

அதன்பிறகு காலம் ஓடினாலும் எத்தனையோ புகைப் படங்கள் எடுத்துக் கொண்டாலும் அந்த ஒரு படத்துக்காக ஏங்கியதும் அதை எடுத்துக் கொண்ட சூழ்நிலையும் என் மனதைவிட்டு நீங்காத பசுமையோடு இருக்கிறது.







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Monday, June 27, 2011

4 . பொன்னுலகாகும் பூவுலகம்.

மனித உயிர் - அது மகத்துவம் வாய்ந்தது.மனிதராய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும். குறையில்லா  மனிதராய்ப் பிறக்க 
மாபெரும் தவம் செய்திருக்கவேண்டும். அதைத்தான் அவ்வையாரும்' அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அதனினும் அரிது தானமும் தவமும் செய்தல் என்று குறிப்பிட்டார்.
இத்தகைய உயர்ந்த மனிதப் பிறவி பெற்றிருந்தாலும் நிறைவான வாழ்க்கை வாழ்வது என்பது நாம் பெற்ற பெரும் பேறு என்றுதான் கொள்ள வேண்டும்.இப்படி உலகில் எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்தவரை வாழ்ந்தார் என இயம்பிவிட  இயலாது. உலகில் வாழ்வாங்கு வாழ்ந்தாரையே உண்மையில் வாழ்ந்தவராக உலகச் சான்றோர் குறிப்பிடுவர். அப்படி வாழ்பவர் மிகச் சிலரே.

"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் 
 தமியர் உண்டலும் இலரே."எனப் புறநானூறு புகல்வதப் போல வாழ்ந்தவர்களும் பிறர்க்கென வாழ்ந்து தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தவர்களுமே உலகில் வாழ்ந்தவர்களாவர் எனப் புலவர் குறிப்பிடுவர். என்றும் வாழ்பவர்களும் இவர்களே.

பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடிய பாரதியும் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என முழக்கமிடுகிறார்.
வள்ளுவரும்"
                       "இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக 
                         இவ்வுல கியற்றி யான்."  எனக் கூறுகிறார்.
இவ்வரிகள் நமக்கு எதனை உணர்த்துகின்றன? உலகில் பசித்துன்பம் இல்லாதிருக்க வேண்டும் என்பதையும் இருப்பவன் இல்லாதவனுக்களித்து அவன் பசியைப் போக்கவேண்டும் என்ற கருத்தையும் தெளிவாக்குகிறதன்றோ?

"எல்லோரும் வாழவேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்.நல்லோர்கள் எண்ணம் இது. இதுவே நல்லற வாழ்வு  " என்ற கவிஞனின் கூற்று நனவாக வழி வகுத்தலே ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை." என்றான் வள்ளுவன்.
பகுத்துண்ணும் பண்பும் எல்லா உயிர்களையும் காக்கின்ற கருணையும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலவுமானால் அந்த நாடு விண்ணவர் நாட்டுக்கு இணையாக விளங்கு 
மென்பது சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

நம் பாரத நாடு பழம்பெரும் நாடு. ஞானத்திலே பரமோனத்திலே அன்னதானத்திலே உயர் மானத்திலே உயர்ந்த நாடு நமது பாரதம் . இங்கே பஞ்சமும் நோயும் பசியும் தீமையும் களையப்பட வேண்டுமெனில் நமது உள்ளங்களில் எல்லாம் எல்லோரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று கூறிய வள்ளல் பெருமான் பயிர் வாடிய போது தன் உயிர் வாடியதாகக் கசிந்து உருகினார்.பயிர் நீரின்றி வாடுவதாக இருந்தாலும் அந்த வாட்டம் தன் உயிரையே வாட்டுவதாக எண்ணி வேதனைப் பட்டவர் அப்பெருமான்.

"தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே உண்டால் அம்மா இவ்வுலகம்." என்றான் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன்.
தமக்கென வாழாது பிறருக்காக வாழுகின்றவர் இருப்பதினாலேயே இவ்வுலகம் இன்னும் நிலை பெற்றுள்ளது என்கிறான். எனவே பிறர்க்கென  வாழும் உயர்ந்த பண்பு இவ்வுலகம் வாழ வழி வகுக்கின்றது.'வாழு வாழவிடு' என்ற தத்துவத்தின்படி வாழப் பழக வேண்டும் என்ற உண்மையை உணரவேண்டும்.

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்." என்றார் சங்கக் கவி கணியன் பூங்குன்றனார். உலகம் முழுமையும் ஒன்று.சாதி, இனம், மதம், என்ற வேறுபாடுகள் அற்றது.என்ற கருத்தை 
அனைவரும் நம் உறவினர் என்ற ஒரு சொல்லிலே அடக்கிக் கூறினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

மேல்நாட்டிலே இந்துமதக் கருத்துக்களைக் கூறச் சென்ற நம் நாட்டுத் தங்கம் விவேகானந்தரும் சகோதரர்களே, சகோதரிகளே! என அழைத்ததன்மூலம் இந்தஉண்மையையே  உறுதியாக்கிச் சென்றுள்ளார்.

உயர்ந்த மலையும் ஓங்கிய வானும் வீசும் தென்றலும், பரந்த கடலும் எப்படி ஒருவனுக்கே உரிமையுடையன அல்லவோ அதே போல் வாழும் உரிமையும் ஒருவனுக்கே சொந்தமல்ல. அனைவருக்கும் இந்த  உரிமை உண்டு என உணரவேண்டும்.

நாமும் வாழ்ந்து பிறரும்  வாழ வழி வகுப்பதே சீரான பாதை சிறந்த பாதை. இந்த உண்மையை உலகத்தார் அனைவரும் பற்றினால் இப்பூவுலகம் பொன்னுலகாய் மாறிவிடாதா?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Wednesday, June 22, 2011

விட்டுக் கொடுப்பதே விவேகம்

நாங்கள் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தோம்.பக்கத்துப் போர்ஷனில் ஒருகுடும்பம்  குடியிருந்தது. அந்த குடும்பத் தலைவி மிகவும் நட்புடனும் மரியாதையுடனும் பழகி வந்தாள்.நல்ல பண்புள்ள பெண்ணாகத் தெரிந்தாள். நானும் மிகவும் அன்புடன் பழகி வந்தேன். அந்தப் பெண் அடிக்கடி என்னுடன் என்வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பாள்..
சில நாட்கள் சென்றன. இப்போதெல்லாம் அந்தப் பெண் என்னைப் பார்க்கவே வருவதில்லையே என்று சிந்தித்தேன்.
.வீட்டு வேலைக்காரி மூலமாக விஷயம் தெரிந்தது.

அவர்களுக்கு  இரண்டு பெண்கள் இருந்தனர். மூத்தவளுக்குத் திருமணமாகி விட்டது. இரண்டாவது பெண்ணின் திருமணத்தில் தான் பிரச்சினை.தன் அண்ணன் மகனுக்குத் தன் இரண்டாவது மகளைத் தரவேண்டும் என்பது தாயின் ஆசை. தன் தங்கையின் மகனுக்குத்தான் தரவேண்டும் என்பது தந்தையின் ஆசை.இரண்டு பேரின் பிடிவாதத்தாலும் வீட்டில் பேச்சு வார்த்தையில் கசப்பு தெரிந்தது. பெற்றோரின் இந்தப் போராட்டத்தால் திருமணம் ஆகவேண்டிய  பெண்ணும் எப்போதும் சோகமாக இருந்தாள்.

வீட்டின் அமைதியும் மகிழ்ச்சியும் காணாமல் போய் விட்டது.  ஒருவருக்கொருவர் பேசுவதையே நிறுத்தி விட்டனர் என்றே சொல்லலாம். இந்த சமயத்தில் ஒரு நாள் அந்த அம்மாள் என்னைத் தேடி வ்ந்தார்.
" நான் என் உறவினர் வீட்டு விசேஷத்துக்குப் போகிறேன். மாலையில்தான் வருவேன் என் கணவர் வந்து கேட்டால்   சொல்லுங்கள்" என்றவளை உட்காரவைத்தேன்.

அவளது மகிழ்ச்சியற்ற முகம் என் மனதை வாட்டியது. இந்த நிலைக்கு யார் காரணம்? அவளேதான். என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
"கொஞ்சநேரம் உட்கார். உன்னிடம் பேசவேண்டும். " என்றேன். அமர்ந்தாள். 
"உன் மனதில் என்ன குறை இருக்கிறது? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றபோது  அவள் கண்கள் கலங்கிவிட்டன.
சற்று நேரம் தயங்கியவள் தன் கணவனின் பிடிவாதத்தைப் பற்றிக் கூறி மூக்கைச் சிந்தினாள்.
நான் புன்னகைத்தேன்."அடி பயித்தியமே, உன் மூத்த மகளை உன் தாய் வீட்டு உறவுக்குக் கொடுத்திருக்கும் போது இரண்டாவது பெண்ணை கணவர் வீட்டு  உறவுக்குக் கொடுப்பதுதான் முறை. குடும்பத்தில் உறவுகளின் மகிழ்ச்சி ரொம்ப முக்கியம். நீ விட்டுக் கொடுப்பதால் உன் குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றால் விட்டுக் கொடுப்பதில் தடை என்ன? எப்போதும் விட்டுக் கொடுப்பதை விட பெரிய வெற்றி வேறு இல்லை.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கணவன் மனைவிக்குள் வெற்றியா தோல்வியா எனப் பார்க்காதே விட்டுக் கொடுப்பவரே வெற்றியாளர் என்பதை மறவாதே. உன் குடும்ப மகிழ்ச்சியை உன் பிடிவாதத்தால் இழந்து விடாதே. என்றேன்.அவளுக்கு மனதில் தெளிவு பிறந்துவிட்டது என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்தது. 

மறுநாள் அவள் வீடு மீண்டும் கலகலப்பானதை அறிந்தேன். அந்தக் குடும்பத்தை விட நான் மிகவும் மகிழ்ந்தேன்.
பிடிவாதம் பிடித்து வெற்றி அடைவதை விட விட்டுக் கொடுத்து தோல்வியடைவதே வாழ்க்கையில்  உண்மையான வெற்றி என்பதை நானும் புரிந்து கொண்டேன்.

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Friday, June 10, 2011

சிறுவன் காட்டிய சிந்தனை..

எனது இருபதாவது வயதில் பட்டம் பெறவேண்டும் என்று முயன்றேன். அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்த நான் தனியாக பி.யு.சி. எழுதினேன்.


தேர்வில் வெற்றியும் பெற்றேன். பின்னர் பி.ஏ. தேர்வுக்குப் படித்தேன். பள்ளியில் பணி புரியும் நான் பள்ளி வேலை வீட்டு வேலை எல்லாம் செய்து கொண்டு மாலை நேரக் கல்லூரிக்கும் போய்ப் படித்தேன். அந்த முறை தேர்வில் வெற்றி பெறாததால் அதோடு என் படிப்பையும் பட்டம் பெறவேண்டும் என்ற என் ஆசையையும் கட்டித் தூர வைத்து விட்டேன்.
இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக கிராமத்திற்குப் போக நேர்ந்தது.நாங்கள் ரயிலில் பயணம் செய்தோம்.மாலை நேரம். ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. 


அப்போது ஒரு சிறுவன் அவனுக்கு சுமார் ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும்.கையில் சில புத்தகங்களை வைத்துக் கொண்டு எங்கள் பெட்டியில் ஏறினான்.ஒவ்வொருவரிடமும் சென்று புத்தகம் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.சிலர் வாங்கிக் கொண்டனர்.நான் கால் நீட்டி அமர்ந்திருந்தேன்.என்னைத் தாண்டி அவன் செல்லும்போது அவன் காலை என் கால் தடுக்கி விட்டது. 

கீழே விழுந்தவன் புத்தகங்களை சரியாக அடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்து சாரிம்மா. என்று பணிவுடன் கேட்டுக் கொண்டான். காலை நீட்டி அமர்ந்தது என் தவறு. நான் தான் அந்தச் சிறுவனுக்கு சாரி சொல்லவேண்டும் ஆனால் அந்தச் சிறுவன் என் தவறைத் தன்மேல் போட்டுக் கொண்டு சாரி சொன்ன அவன் பண்பு என்னை சிந்திக்க வைத்தது.

அவனை அழைத்து அன்புடன் அடி பட்டதாப்பா என்றேன். அவனோ புன்னகையுடன் ஒரு புத்தகம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று வியாபாரத்தில் குறியாக இருந்தான்.அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன். 

" தம்பி பள்ளிக்கூடத்திலிருந்து நேராக புத்தகம் விற்க வந்து விட்டாயா? சீருடையைக் கூடக் கழற்ற வில்லையே? அப்படி என்ன அவசரம் உனக்கு?"
அவன் சொன்ன பதில்தான் என்னை மேலும்சிந்திக்க வைத்தது..

"பள்ளி விட்டவுடன் கடைக்குச் சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டால்தான் ரயில் வரும் நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து புத்தகம் விற்க முடியும்.


ஒரு நாளைக்கு ஐந்து ரூபாயாவது சம்பாதித்தால்தான் அம்மா படிக்க அனுப்புவார்கள். கடைசி ரயிலில் வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு போய் வீட்டுப்பாடம் முடிப்பேன். இரண்டு புத்தகம் வாங்கிக் கொண்டதற்கு நன்றி அம்மா" என்று சொல்லிவிட்டு மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலிலிருந்து இறங்கி வெளியே நின்று கொண்டான்.

"இந்தச் சிறுவன் எத்தனை எதிர்ப்புக்கிடையேயும் கஷ்டத்துக் கிடையேயும் கற்பதற்காக இவ்வளவு முயற்சி எடுக்கும்போது நான் ஒரு முறை தோல்வி அடைந்ததற்காகப் படிப்பை நிறுத்தியது எவ்வளவு முட்டாள்தனம்." என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்தேன். எந்தத் துன்பம் எந்த இடையூறு வந்தாலும் படிப்பை இடையில் விடுவதில்லை என்று முடிவு செய்தேன். 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையின் சொல்லை நினைத்துக் கொண்டேன். கல்வி கற்கும்போது தோல்வி வந்து விட்டால் துவண்டுவிடக்கூடாது .அதிக முயற்சிஎடுத்து வெற்றி காண வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com