Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்து.


மணி மணியாய் செய்திகள் என்ற தளத்திற்கு விஜயம் செய்து கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் 

எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் அன்புப் பாட்டி
ருக்மணி சேஷசாயி.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 5, 2012

34.கவனம் தேவை.

                கவனம் தேவை.
     
      வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து "அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.
      அவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.
அந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள்  எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது. 
       ஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே  என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 16, 2012

33 amma sonna kadhai.

                        அம்மா சொன்ன கதை.
 மாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும்  நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.
அதற்கு அம்மா,"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா?" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.
உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்."ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்."யாரம்மா அந்த எட்டுப்பேர்?"
அவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார்  இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா "
நான் ஆவலோடு "என்னம்மா சொன்னார்?"என்றேன்.
"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம்  துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு  அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.
இதிலேருந்து என்ன தெரியுது?மனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ  இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே"
என்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 7, 2012

32. உடனே செய்யுங்கள்

.
சுமார் அறுபது ஆண்டுகளுமுன் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நேரம் என் அத்தை மகளை எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வ்ந்தார் என் தந்தையார். அவள் பெற்றோரை இழந்துவிட்டதால் என்னுடன் என் வீட்டில் வளர்ந்து வந்தாள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் பிறந்த சகோதரி யாருமில்லாததால் அவளை நான் என் சகோதரியாகவும் உற்ற தோழியாகவும் ஏற்றுக் கொண்டேன்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம்.ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.
இரவு ஒரே பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டு ஊர்க்கதைகள் பேசி இரவைக் கழித்தோம்.தாயார் அதட்டும் வரை பேச்சு நீளும். இரவு நேரம் கதை பேசுவது எங்களுக்குப் பிடித்தமானது.குளிர் நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்து குளிர் காய்ந்தபடி கதை பேசுவது அதைவிடப் பிடித்தமானது.
இப்படி ஒன்றாகப் படித்து படுத்து ஆடிப்பாடி வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வேறு வேறு திசைகளுக்கு பயணப் பட்டது.
சில ஆண்டுகள் கழித்து என் தோழியின் கணவருக்கு எங்கள் ஊருக்கே மாற்றல் கிடைத்தது. ஆனால் என்தோழி பார்க்க பரிதாபமாக இருந்தாள். உடல்நிலை சரியில்லையென அறிந்தேன்.
ரத்தமில்லாமல் வெளுத்துப் போயிருந்தாலும் அவளது வேடிக்கைப் பேச்சும் ஜோக்கடிக்கும் திறமையும் சற்றும் குறையவில்லை.நான் என் தந்தையாரைப் பார்க்க பணியிடத்திலிருந்து நேரே போகும்போதெல்லாம் அவளும் அங்கு வந்துவிடுவாள் வெகு நேரம் பழங்கதைகள் பேசுவோம். அப்போது என் தாயார் காலமாகியிருந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அவளுக்கு என் தாயார் மேல் மிகுந்த பிரியம். சில மணித் துளிகளாவது அவர்களைப் பற்றிப் பேசாமல் போகமாட்டாள்.
ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறினாள்."ருக்கு, அம்மா நம்ம சின்ன வயசிலே கேழ்வரகு தோசை செய்து போடுவார்களே, எவ்வளவு ருசியா இருக்கும்!தேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியா?"
நான் மனம் நெகிழ்ந்து போனேன்."ரெசிப்பி சொல்றேன் அதே மாதிரி செய்யேன்." ஆனால் " எனக்கு வரலை.நீதான் செஞ்சு தரணும்."என்று கூறியபோது மறுநாளே செய்து கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன்.
ஆனால் மறுநாள் நான் வேலை விஷயமாகக் கடலூர் செல்ல வேண்டி இருந்தது.ஒரு வார வேலை என்று எண்ணியவள் இரண்டு வாரங்கள் தங்க வேண்டி வந்து விட்டது.ஊர் வந்து சேரும் முன்பாகவே அவள் திடீரென்று காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.
உடனே எனக்கு கேழ்வரகு தோசைதான் நினைவுக்கு வந்தது. என்முன் நின்று எங்கே தோசை என்று கேட்பது போல் தோன்றும். இன்று அவளை நினைத்தாலோ  அல்லது கேழ்வரகு என்ற சொல்லைக் கேட்டாலோ அவளின் முகம் என் முன்னே வந்து என்னை வேதனைப் படுத்தும். பணி முடிந்து திரும்பியபின் செய்து கொடுக்கலாம் என நினைத்த என் கணக்குத் தவறி விட்டது.மனித வாழ்க்கையில் எப்போது அது முடியும் என்பதை கணக்குப் போட நம்மால் இயலுமா? உடனே அவள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு நான் ஊருக்குப் போயிருந்தால் இந்த மனக் குறு குறுப்பிலிருந்து  தப்பியிருக்கலாம். அவளைப் பிரிந்த வேதனையை விட இந்த வேதனையே என்னை இன்றளவும் வாட்டுகிறது.
அதன்பின் யாருக்கேனும்  ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றி விட்டால்  இயன்றவரை உடனே அதைச்செய்து விடுவதைப் பழக்கமாகக் கொண்டேன். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாக நான் நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 22, 2012

31 நண்பன் சொன்ன கதை.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு."என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் "என்றான்.
அதற்கு சேகர், "அதென்னடா புதுக்கதை விடுகிறாய்?" என்றான்  
புதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன்  ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி  சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி  வந்தான். "ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று  சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி,"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்."என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.
இப்போது என்ன நடந்திருக்கும்?யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.
சேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com


Sunday, September 16, 2012

30-ஆசிரியர் சொன்ன கதை.

 ஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்..
ஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார்.படுக்கையில் இருந்த அவரைப் பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.
ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பனைப் பார்க்க வ்ந்தார்.சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.படுத்திருக்கும்புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியவர்  தன் மகளை அழைத்தார்.
"அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா" என்று கூறினார்,
அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே.அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.
அந்தக் காலத்தில் பாலை ஆடைநீக்குவதற்காக துணி வைத்திருப்பார்கள்.அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள்.ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.
அதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்."ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண்.
உடனே புலவர் புன்னகை மாறாமல்"இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும்  கசக்கவில்லை."என்றார்.
தான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம் 
 திருந்தினாள் புலவரின் மகள்.
பெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, September 10, 2012

29.எங்கோ படித்த கதை

.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே  நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் "அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,
"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்."பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே."என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.
சட்டென்று அந்தப் பையன் "அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா?"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்."என்று விளக்கினார்.
இவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட  காட்டாமே இருக்கியே."என்று கூறியவர்,"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய."என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்."ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு  எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல்  உண்மை.
என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com