Tuesday, February 19, 2013

அப்பா சொன்ன கதை.

என் இள  வயதில் மிகவும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தேன். ஒருநாள் தேர்வு சமயத்தில் படிக்காமல் பண்டிகைநாள் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.ஆசிரியரான என் அப்பா அப்போது உள்ளே வந்தார். ஒரு வினாவைக்  கேட்டு அந்தப் பாடம் படித்தாயா?என்றார். நான் இன்னும் -படிக்கவில்லை என்றபோது, "இன்னும் சற்று நேரத்தில் தேர்வு எழுதவேண்டும் என்ற பயமோ பதட்டமோ இன்றி கோலம் போடுகிறாயே எப்படி மதிப்பெண் வரும்" என்று நிதானமாகத்தான் கேட்டார். ஆனாலும் எனக்குக் கண்ணில் நீர் வந்து விட்டது.அதைக் கவனித்த என் தந்தையார் "போ ஒருமுறை படித்ததையாவது திருப்பிப் பார்" என்றார். கோலத்தை அவசரமாக முடித்துவிட்டு உள்ளே சென்றேன்.
      அன்று இரவு சாப்பிடும்போது, என்னை அன்போடு பார்த்த அப்பா, "நீங்கள் படிக்க நான் வசதி செய்து தருகிறேன் அதனால் உங்களுக்கு படிப்பின் அருமை தெரியவில்லை.ஆனால் நான் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு சாதாரண வேலையில் இருந்து கொண்டே மேல் படிப்புப் படித்தேன்.பணம் கட்ட நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா?" என்று சொன்ன போது நான் கையில் எடுத்த சோற்றுக் கவளத்தை வாயில் போடாமல் பொம்மை போல் அமர்ந்து கேட்டேன்.
       "என் நாற்பதாவது வயதில் தான் நான் பி.ஏ. பரீட்சைக்குப்  படித்தேன்.தேர்வுக்குக் கட்ட பணம் இல்லாமல் அலைந்து திரிந்து அந்தப் பணத்தைச் சேர்த்தேன்.அப்படியும் போகவர பேருந்து கட்டணமும் தேர்வுக்கான கட்டணமும்தான் சேர்க்க முடிந்தது.
தேர்வுக்குப் பணம் கட்டக் கடைசி நாளானதால் விடுப்பு எடுத்துக் கொண்டு மதுரைக்குச் சென்று பணம் கட்டிவிடலாம் என்று மன தைரியத்தோடு சென்றேன்.எங்கள் பள்ளி தனியார் பள்ளியானதால் சரியான காரணத்தைச் சொல்லியும் அரைநாள் விடுப்புதான் கொடுத்தனர்.இப்போதே ஒருமணியாகி விட்டதே என்று வேகவேகமாக பேருந்தைப் பிடித்து மதுரைக்குப் பயணமானேன்.பாதிவழி போனதும் என் கடிகாரத்தைப் பார்த்தேன்.பணம் கட்ட என்னும் ஒருமணி நேரமே இருந்தது.அந்தக காலத்தில் பரீட்சைக்குப் பணம் கட்டுவது என்பதே  சிரமமான காரியமாக இருக்கும். மனம் பதை பதைப்புடன் அமர்ந்திருந்தேன்.
        திடீரென்று ஒரு பெரும் ஓசை கேட்டது.எல்லா பயணிகளும் என்ன என்ன என்று கீழே இறங்கினர்.நானோ பெரும் அவசரத்தில் இருந்தேன் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று சேர்ந்து விடலாம் பணமும் கட்டி விடலாம் என எண்ணியிருக்கும் இந்த சமயம் வண்டி நின்று விட்டதே என கண்களில் நீர் நிறைய ஏறக்குறைய அழுது விட்டேன்.நடத்துனரோ இனி இன்னொரு வண்டி வந்தால் அதில் ஏற்றிவிடுகிறேன் நில்லுங்கள் எனக் கூறியதும் என் ஆசை அடியோடு நொறுங்கி விட்டது.அந்தக் காலத்தில் அபராதத்துடன் பணம் கட்டும் பழக்கம் எல்லாம் கிடையாது.
       மதுரை சென்றடைய இன்னும் இரண்டு மைல் இருந்தது ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்கள்.என்னால் நிற்கவோ காத்திருக்கவோ இயலவில்லை.எனவே ஓடத் தொடங்கினேன்.வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஓடுவதை பலரும் பார்த்தாலும் நான் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.ஒருவழியாக ஐந்து மணிக்குள் கலெக்டர் ஆபீஸ் முன் சென்று பெருமூச்சுடன் நின்றேன்.பணம் கட்டும் இடம் சென்று நின்று பூர்த்தி செய்த விண்ணப்பத் தாளைக் கொடுத்துவிட்டு பணத்தை எண்ணினேன். "ஐயோ, ஒரு ரூபாய் குறைகிறதே. பேருந்துக்கான பணத்தைச் சேர்த்தாலும் போதவில்லையே."என்று தவித்தேன்.நேரம் ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.கட்டணம் வசூலிப்பவரோ "என்ன சார், நேரமாச்சு.அஞ்சு மணிக்குள்ளே குளோஸ் பண்ணணும். சீக்கிரம்."என்றார்.முகம் சிவக்க, உடல் வியர்வையில் நனைய, கண்கள் குளமாக ஏறக்குறைய பித்துப் பிடித்தவன் போல் நின்ற என் பரிதாப நிலையை நினைத்து நானே வெட்கப் பட்டேன்."சார் பணம் ஒரு அரை  ரூபாய் குறைகிறது.என்ன செய்யறதுன்னு தெரியல்லே.
ரெண்டு மைல் ஓடிவந்தப்போ கீழே விழுந்துடுச்சுன்னு நினைக்கிறேன்."என்றேன் கண்களின் நீரைத் துடைத்தபடியே. அப்போது ஒரு முதியவர் என் தோளைத் தட்டி ஒரு ரூபாயை நீட்டினார்.
ஐயா என்று பேச ஆரம்பித்த என்னை முதலில் பணம் கட்டு என்று ஜாடை செய்தார்.பணம் கட்டியவுடன் கவுண்டர் மூடப்பட்டது.
என் மன உளைச்சலும் மூடிக்கொண்டது.பணம் கொடுத்து உதவிய அந்த பெரிய மனிதருக்கு நன்றி சொல்லி மீதிப் பணத்தைக் கொடுக்க நினைத்துத் தேடினால் அவரைக் காணோம். உதவிசய்த கையோடு அவர் சொல்லாமலேயே சென்று விட்டார். நான் அவர் நின்ற இடத்தைத் தொட்டு வணங்கினேன்.அதன்பின் மேலே படித்துப் பட்டம் வாங்கி இன்று ஒரு உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன்.என் வாழ்நாளில் இந்த சம்பவத்தை மறக்கமாட்டேன்.அதனால் படிப்பதை சாதாரணமாக எண்ணிவிடாதே.என்றார்.அந்த அப்பாவின் மீது எனக்கிருந்த அன்பு வளர்ந்ததோடு மரியாதையும் கூடிவிட்டது.இந்த விடாமுயற்சியை நானும் பின்பற்ற முடிவு செய்தேன்.அவரது அனுபவம் எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாடமாக அமையும் என எண்ணுகிறேன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, December 22, 2012

35-முடிவில்லாத கதை




பாட்டி சொல்லும் கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்திய சுட்டி விகடனுக்கு பாட்டியின் நன்றி.



சில புதிய கதைகளை சுட்டிகளுக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தை சுட்டிவிகடன் எனக்கு அளித்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி.
சுட்டி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைதளத்தைப் படிப்பவர்கள் அதையும் கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்புப்பாட்டி,
ருக்மணி சேஷசாயி.


   35- முடிவில்லாத கதை.

ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்.அவன் எப்போதும் ஏதேனும் புதிய புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சபையில் கூறுவான். அந்த கருத்துகளால் மக்களும் மந்திரிகளும் சற்றுக் குழப்பமடைவார்கள்.அதனைத் தீர்த்து வைக்கப் பெரும் பாடு படுவார்கள். கடைசியில் அதைத் தீர்க்காமல் மன்னனிடம் தோற்று நிற்பார்கள். மன்னன் இவர்களின் தோல்வியைக் கண்டு மனதுக்குள் மகிழ்வான்.இப்படி ஒரு மன்னனைப் பெற்றதால் நாட்டின் முன்னேற்றமே நடக்கமுடியாமல் இருக்கிறதே என்று மந்திரிகளும் மக்களும் வருந்தினர்.
ஒருமுறை அந்த நாட்டிற்கு ஒரு புலவர் வந்தார்.அவர் மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.அந்த நாட்டு மன்னனைத் திருத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என எண்ணினார்.அதனால் மன்னர் முன் வந்து நின்ற புலவர் "வணக்கம் மன்னர் மன்னா, தாங்கள் பல கேள்விகளைக் கேட்டு மந்திரிகளையும் மக்களையும் திணற அடித்துள்ளீர்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விடை சொல்லிவிட்டால் என் தமிழப்புலமையைத் தங்களுக்கு அடிமையாக்குகிறேன். நீங்கள் தோற்றால் இந்த நாட்டு மக்களின் நலன் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை என வாக்குத் தரவேண்டும்" என்றான்.
மன்னருக்கு மகிழ்ச்சி. எங்கிருந்தோ வந்து என்னிடம் மாட்டிக் கொள்கிறானே என்று நகைத்தான்.அதனால் ,"எங்கே கேள் பார்ப்போம்"என்றான் கர்வத்தோடு.
"மன்னா, முடிவே இல்லாத கதையைச் சொல்லுங்கள்."
"என்ன, முடிவே இல்லாத கதையா?"
"ஆம் மன்னா, போதும் என்று சொல்லும் வரை கதை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அப்படி ஒரு கதை சொல்ல முடியுமா தங்களால்?"
அரசன் யோசித்தான். தன கற்பனை மேல் அவனுக்கு அபார நம்பிக்கை."சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.
ஆனால் அரசனால் மூன்று நாட்களுக்கு மேல் கற்பனை செய்ய இயலவில்லை.மிகவும் களைத்துவிட்டான். சோர்ந்துபோய் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.ஆனால் நீ அப்படி ஒரு கதையைக் கூறவேண்டும் அப்போதுதான் நீ வென்றதாகக் கொள்ள முடியும் என்றான்.
புலவன் கதை சொல்லத் தொடங்கினான்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் பல காணி நிலம் இருந்தது. நல்ல செழிப்பான பூமி. மூன்று போகம் விளையக் கூடியது.அப்படி ஒரு முறை மூன்று போகம் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து  சேமிப்புக் கிடங்கில் கொட்டியிருந்தார்.அந்த மலைபோலக் கொட்டிக் கிடந்த நெல்லை ஒரு குருவி பார்த்தது இந்த நெல்லை நம் கூட்டுக்குக் கொண்டு பொய் விடவேண்டும் என்று அந்தக் குருவி நினைத்தது. உடனே பறந்து வந்து ஒரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்துவிட்டுத் திரும்பியது மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைத் தன மூக்கில் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.மூன்று நாட்கள் ஆகியும் அவன் நிறுத்தவில்லை இதே செய்தியை கூறிக் கொண்டே இருந்தான்.
"புலவரே நிறைய நெல்மணிகளைத் தான் கொண்டுபோய் விட்டதே  பிறகு என்ன அதைச் சொல்லுங்கள் என்றான் பொறுமை யிழந்து.
"இல்லை மன்னா, அந்த அம்பாரம் நெல்  முழுவதையும் அந்தக் குருவி கொத்திப் போகும் வரை சொல்லவேண்டும் அல்லவா?"
மன்னன் மிகவும் களைத்துவிட்டான். மந்திரி மார்களும் கூடியிருந்த மக்களும் தூங்கிவிட்டனர்.மன்னன் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக்  கேட்பது யார்?
தான் சொன்னபடியே தன நாட்டைக் கவனிப்பதாகவும் இனி அனாவசியமாக மந்திரிமாரையும் மக்களையும் சங்கடப் படுத்துவதில்லை என்றும் உறு திகூறினான் அந்த மன்னன்.
அத்துடன் நிறைந்த பரிசுகளையும்  அந்தப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான் .மக்களும் நிம்மதி பெற்றனர்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்து.


மணி மணியாய் செய்திகள் என்ற தளத்திற்கு விஜயம் செய்து கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் 

எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் அன்புப் பாட்டி
ருக்மணி சேஷசாயி.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 5, 2012

34.கவனம் தேவை.

                கவனம் தேவை.
     
      வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து "அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.
      அவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.
அந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள்  எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது. 
       ஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே  என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 16, 2012

33 amma sonna kadhai.

                        அம்மா சொன்ன கதை.
 மாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும்  நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.
அதற்கு அம்மா,"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா?" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.
உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்."ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்."யாரம்மா அந்த எட்டுப்பேர்?"
அவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார்  இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா "
நான் ஆவலோடு "என்னம்மா சொன்னார்?"என்றேன்.
"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம்  துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு  அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.
இதிலேருந்து என்ன தெரியுது?மனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ  இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே"
என்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 7, 2012

32. உடனே செய்யுங்கள்

.
சுமார் அறுபது ஆண்டுகளுமுன் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நேரம் என் அத்தை மகளை எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வ்ந்தார் என் தந்தையார். அவள் பெற்றோரை இழந்துவிட்டதால் என்னுடன் என் வீட்டில் வளர்ந்து வந்தாள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் பிறந்த சகோதரி யாருமில்லாததால் அவளை நான் என் சகோதரியாகவும் உற்ற தோழியாகவும் ஏற்றுக் கொண்டேன்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம்.ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.
இரவு ஒரே பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டு ஊர்க்கதைகள் பேசி இரவைக் கழித்தோம்.தாயார் அதட்டும் வரை பேச்சு நீளும். இரவு நேரம் கதை பேசுவது எங்களுக்குப் பிடித்தமானது.குளிர் நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்து குளிர் காய்ந்தபடி கதை பேசுவது அதைவிடப் பிடித்தமானது.
இப்படி ஒன்றாகப் படித்து படுத்து ஆடிப்பாடி வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வேறு வேறு திசைகளுக்கு பயணப் பட்டது.
சில ஆண்டுகள் கழித்து என் தோழியின் கணவருக்கு எங்கள் ஊருக்கே மாற்றல் கிடைத்தது. ஆனால் என்தோழி பார்க்க பரிதாபமாக இருந்தாள். உடல்நிலை சரியில்லையென அறிந்தேன்.
ரத்தமில்லாமல் வெளுத்துப் போயிருந்தாலும் அவளது வேடிக்கைப் பேச்சும் ஜோக்கடிக்கும் திறமையும் சற்றும் குறையவில்லை.நான் என் தந்தையாரைப் பார்க்க பணியிடத்திலிருந்து நேரே போகும்போதெல்லாம் அவளும் அங்கு வந்துவிடுவாள் வெகு நேரம் பழங்கதைகள் பேசுவோம். அப்போது என் தாயார் காலமாகியிருந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அவளுக்கு என் தாயார் மேல் மிகுந்த பிரியம். சில மணித் துளிகளாவது அவர்களைப் பற்றிப் பேசாமல் போகமாட்டாள்.
ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறினாள்."ருக்கு, அம்மா நம்ம சின்ன வயசிலே கேழ்வரகு தோசை செய்து போடுவார்களே, எவ்வளவு ருசியா இருக்கும்!தேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியா?"
நான் மனம் நெகிழ்ந்து போனேன்."ரெசிப்பி சொல்றேன் அதே மாதிரி செய்யேன்." ஆனால் " எனக்கு வரலை.நீதான் செஞ்சு தரணும்."என்று கூறியபோது மறுநாளே செய்து கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன்.
ஆனால் மறுநாள் நான் வேலை விஷயமாகக் கடலூர் செல்ல வேண்டி இருந்தது.ஒரு வார வேலை என்று எண்ணியவள் இரண்டு வாரங்கள் தங்க வேண்டி வந்து விட்டது.ஊர் வந்து சேரும் முன்பாகவே அவள் திடீரென்று காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.
உடனே எனக்கு கேழ்வரகு தோசைதான் நினைவுக்கு வந்தது. என்முன் நின்று எங்கே தோசை என்று கேட்பது போல் தோன்றும். இன்று அவளை நினைத்தாலோ  அல்லது கேழ்வரகு என்ற சொல்லைக் கேட்டாலோ அவளின் முகம் என் முன்னே வந்து என்னை வேதனைப் படுத்தும். பணி முடிந்து திரும்பியபின் செய்து கொடுக்கலாம் என நினைத்த என் கணக்குத் தவறி விட்டது.மனித வாழ்க்கையில் எப்போது அது முடியும் என்பதை கணக்குப் போட நம்மால் இயலுமா? உடனே அவள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு நான் ஊருக்குப் போயிருந்தால் இந்த மனக் குறு குறுப்பிலிருந்து  தப்பியிருக்கலாம். அவளைப் பிரிந்த வேதனையை விட இந்த வேதனையே என்னை இன்றளவும் வாட்டுகிறது.
அதன்பின் யாருக்கேனும்  ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றி விட்டால்  இயன்றவரை உடனே அதைச்செய்து விடுவதைப் பழக்கமாகக் கொண்டேன். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாக நான் நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 22, 2012

31 நண்பன் சொன்ன கதை.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு."என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் "என்றான்.
அதற்கு சேகர், "அதென்னடா புதுக்கதை விடுகிறாய்?" என்றான்  
புதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன்  ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி  சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி  வந்தான். "ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று  சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி,"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்."என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.
இப்போது என்ன நடந்திருக்கும்?யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.
சேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com