Sunday, July 5, 2015

எதிலும் கற்போம்.


                   நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நம் வாழ்க்கையில் எங்கும் எந்த இடத்திலும் தோன்றும்.எனக்கும்  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
                  ஒருமுறை நாங்கள் திருப்பதி செல்ல ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில்  நல்ல கூட்டம் நாங்கள் இருக்கையைத் தேடி வேகமாக நடந்தோம்.அப்போது  ஒரு கம்பத்தின் அருகே ஒரு வயதான பிச்சைக்காரன் கால் நீட்டி  அமர்ந்திருந்தான். நான் என் இருக்கையைத் தேடும் வேகத்தில் அவனது காலை நன்கு மிதித்து விட்டேன். அவனும் காலை மடக்கமுடியாமல்  திசை மாற்றி வைத்துக்  கொண்டான். ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்களில் வேதனை தெரிந்தது.ஆனால் அதை அவன் கால் நீட்டி அமர்ந்த தவறு என்மீது எந்தத் தவறும் இல்லையெனஎன்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். 
                  ஒருவழியாக எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தபின் சற்றே நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.அப்போது ஒரு சிறுவன் சுமார் எட்டு வயதிருக்கும் கைநிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் நூல்களின் பெ யர் சொல்லி  "வேணுமா சார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். 
                    அவனிடம் "எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடமே இருக்கு" என்று சொல்லிவிட்டதால் என்னைத்தாண்டி அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நூல்களைக் காட்டிப் பேசத் தொடங்கினான். அவர் வெகுநேரம் பார்த்துவிட்டு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அவனிடம் அள்ளிக் கொடுத்தார்.சிறுவன் பாவம் கையில் கனத்துடன் நூல்களை அடுக்கமுடியாமல் அள்ளிக் கொண்டு அவர் கேட்ட மீதிச் சில்லறையையும் கொடுக்க முடியாமல் தவித்தான்.
                    அதே சமயம் சில்லறையை வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு நாணயத்தைத் தவறவிட்டார். அந்த நிலையிலும் அந்தச் சிறுவன் கஷ்டப்பட்டு கீழே விழுந்த நாணயத்தைப் பொறு க்கி எடுத்தவன் ' மன்னிச்சுக்குங்க ஐயா கை தவறிடுச்சு" என்றவாறே  கொடுத்தான்.என்னைத்தாண்டிச் சென்றவன் என் கால் தடுக்கவே கீழே விழுந்து எல்லாப் புத்தகங்களையும் தவறவிட்டான்.உடனே "சாரி ம்மா .உங்க காலை மிதிச்சுட்டேனா. ரொம்ப சாரிம்மா."என்று மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்.எனக்கு மனம் உறுத்தியது காலை நீட்டிக் கொண்டது என் தவறு. ஆனால்  அந்த தவறைத்  தன மீது போட்டுக்  கொண்டு  மன்னிப்புக் கேட்கும் சிறுவன் சிறுவனாகத் தோன்றவில்லை என் கண்களுக்கு.எனக்குப் புத்தி புகட்டவந்த அந்த முருகப் பெருமானாகவே தோன்றியது எனக்கு.

                          வண்டி மெதுவாக நகரத் தொடங்கியவுடன் நான் வேகமாக ஜன்னலோரம் நின்றுகொண்டு அந்த முதியவர் கண்களில் பட்டவுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை இந்தாப்பா என்று கூவி அதை அவன் எடுத்துக் கொண்டு கை கூப்பியதைப் பார்த்தபின் ஏதோ பிராயச்சித்தம் செய்து விட்டதைப் போல அமைதியானேன்.


                      எப்படியெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.





















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, April 13, 2015

பெயர் பிறந்த கதை

ஒரு மாலை நேரம். வீட்டிலிருக்கும் அனைவரும் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவரவர் வயதுக்கேற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று சின்னப் பெண் தன தாத்தாவிடம் கேட்டாள் ,"தாத்தா, இந்த பெங்களூருவுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தாத்தா?".தாத்தா புன்னகைத்ததைப் பார்த்ததும் நாங்களும் அவர் ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறார் என தெரிந்துகொண்டு அவரருகே சென்று அமர்ந்தோம்.

"நானே சொல்லணுமின்னு இருந்தேன்.பாப்பா கேட்டது நல்லதாப் போச்சு.கேளு.சுமாரா ஒரு அறுநூறு வருசத்துக்கு மின்னாலே இந்த எடமெல்லாம் காடாக கெடந்துச்சாம்.
அப்போல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்தான் இந்தப் பகுதியிலே இருந்துச்சாம். அப்படி இருந்த கொஞ்ச கிராமங்கள  கேம்பெகவுடான்ற ராசா ஆட்சி பண்ணாராம்.அவரு ஒரு நா சிப்பாய்ங்களோட காட்டுக்கு வேட்டைக்கு  வந்தாராம்.
ரொம்பநேரம் வேட்டையாடிட்டு களைச்சுப்போய் பார்த்தா கூட வந்த சிப்பாய்க யாரையும் காணோம்.ராசாவழிதவறி  காட்டுக்குள்ளார ரொம்ப தொலைவு வந்திட்டாரு. அவரூக்கொ நல்ல பசி ஏன்னா செய்யிறதுன்னே தெரியல.மெதுவா எதாச்சும் வழி தெரியிதான்னு பாத்துகிட்டே வரும்போது ஒரு சின்ன குடிசை தேம்புட்டுதாம். ராசாக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சாம். வெளியே நின்னாப்பல ஆறு வூட்டுக்குள்ள? அப்படின்னு கேட்டது உள்ளேருந்து வயசானஒரு  பாட்டிம்மா வந்தாங்க. அவங்ககிட்ட ராசா வழி தவறிடுச்சு. பசிக்கு ஏதானும் கொடுங்கன்னு கேட்டாராம்.அந்தப் பாட்டிம்மாவும் உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சு தன்கிட்டே இதுதான் இருக்குது. பசிக்கு சாப்புடுன்னு கொஞ்சம் வெந்த பயறுகுடுத்துச்சாம். அதைத் தின்னு தண்ணி குடிச்ச ராசாவுக்கு புது தெம்பு வந்துடிச்சாம் 
அந்தப் பாட்டிகிட்டே வழிகேட்டுக்கிட்டு தன்னோட ஊருக்கு வந்து சேர்ந்தாராம்.
மறுநாள் சிப்பாய்கள அனுப்பி அந்தக் கிழவியை தன்னோட ஊருக்கு வரவழைச்சார்.தன வீட்டுக்கு அவளை க்  கூட்டிவந்து அவள் இருந்த நிலப்பகுதியை அவளுக்கே கொடுத்து நிறையப் பொன்னும் கொடுத்ததோட வெந்த பயறு கொடுத்த காரணத்தாலே அந்தப் பகுதிக்கு பெந்த காளு  ஊரு அப்படின்னு பேர் வச்சான். அதுதான் பிற்பாடு பெங்களூருன்னு ஆயிடிச்சி.பெந்த அப்படீன்னா வெ ந்தன்னு அர்த்தம் கன்னட பாஷையில.காளுன்னா பயறு வெந்த பயறு தந்த ஊருன்னு பேர் வந்துச்சு. காலப்போக்கில அதுவே பெங்களூருன்னு ஆகிப்போச்சு. என்ன புருஞ்சுதா என்றதும் அனைவரும் நல்ல கதையோட புது விஷயமும் தெரிந்து கொண்டோம் தாத்தா.என்றபடியே அவரவர் படுக்கச் சென்றனர்.

















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, March 8, 2015

Check out Rukmani's photos on Facebook.

facebook
Check out Rukmani's photos on Facebook.
If you sign up for Facebook, you'll be able to stay connected with friends by seeing their photos and videos, staying up to date with their latest status updates, exchanging messages and more.
Join Rukmani on Facebook
This message was sent to rukmani68sayee.manimani@blogger.com. If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

Wednesday, January 7, 2015

சனியின் ஆதிக்கம்.
















சனியின் ஆதிக்கம் எல்லா மனிதரையும் பற்றுவது போலவே தேவர்களையும் பற்றும் என்பதை அனைவரும் அறிவர்.ஒருமுறை தேவர்கள் அனைவரும் கயிலைக்கு சிவபெருமானை தரிசிக்கச் சென்றனர்.நவக்ரஹங்களும் உடன் சென்றனர். சப்த ரிஷிகள் பூதகணங்கள், தேவர்கள், நவக்ராகங்கள், இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் சிவபெருமான் தரிசனம் காணச் சென்றனர்.
                                                                                                    இறைவன் உமாதேவியுடன் வீற்றிருந்த காட்சியைக் கண்டு  அனைவரும் மகிழ்ந்து வணங்கினர்.
அப்போது புன்னகையுடன் இறைவன் சனியிடம் கேட்டார்."சனியே, நீ அனைவரையும் பிடிக்கும் தொழில் புரிகிறாயே.அது எனக்குப் பொருந்துமா?"என்றார் 
அதே புன்னகையுடன் சனி"மகாதேவா, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் உங்களைப் பிடிக்கவேண்டும் என்பது எனக்கிடப் பட்டுள்ள கட்டளை. அந்த விதியை என்னால் மீற  முடியாது. தாங்களும் என் பார்வைக்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும்." என்றார் பணிவோடு.
பெருமான் கோபத்தோடு புருவம் சுருக்கினார்."என்ன?"என்றவர் சிந்தனை வயப்பட்டார்.தேவர்கள் இறைவனை 
மிகப் பணிவோடு வணங்கியபடி இருப்பிடம் வந்தனர் . சிந்தனை வயப்பட்டசிவபெருமான் எப்படியாவது இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் சனியின் கண்ணில் படாத இடத்தில் சென்று ஒளிந்து கொள்ளவேண்டும் என்று இடத்தைத் தேடிப்  போனார்.
யாரும் அறியமுடியாத இடமாகப் பார்த்து ஒளிந்து கொண்டார் இறைவன். அவருக்குரிய காலம் கடந்தது.வெற்றிப் பெருமிதத்துடன் தன்  இருப்பிடமான கயிலாயம் வந்து சேர்ந்தார்.
காலம் முடிந்துவிட்டதே, இறைவன் இப்போது கயிலையில் இருப்பார். அவரைத் தரிசிக்கலாம் என்று சனி தன்  மற்ற க்ரகங்களுடன்  கயிலைக்கு வந்து சேர்ந்தார்.
பெருமிதத்துடனும் கர்வத்துடனும் சனியை நோக்கிய பெருமான். "என்ன, சனியே நீ சொன்ன காலம் வரை  நான் உன் கண்ணில் படாமல் மறைந்து விட்டேனல்லவா? என்னைப் பிடிக்க முடிந்ததா உன்னால்?" என்றார் புன்னகையுடன்.
"பரமேஸ்வரா , தாங்கள் மறைந்திருந்த இடம் எது என்று இப்பொழுது சொல்லலாமே."குறுநகையுடன் கேட்டார் சனி பகவான்.
"ஒரு பாதாளக் கழிவு நீர் தொட்டியில் ஒரு சிறு புழுவாகி மறைந்து கொண்டிருந்தேன். உன்னால் என்னைக் காண இயலவில்லை அல்லவா?"
"சுவாமி, மன்னியுங்கள்.நான் பிடித்ததால்தான் தாங்கள் நாற்றமெடுக்கும் கழிவு நீர் தொட்டியில் இரண்டரை நாழியும் அமர்ந்திருந்தீர்கள்.நறுமணமும் இனிய சூழலையும் விட்டு இப்படி நீங்கள் இருந்ததற்கு என் பார்வையே காரணம்."
பரமன் திகைத்தார்.
"உண்மையே நான் தவறாக நினைத்திருந்தேன்.உன்னை ஏமாற்றியதாக எண்ணிய நான்தான் ஏமாந்திருந்தேன்.விதியை மீள இறைவனாக இருந்தாலும் முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்வர்.என்னையும்  பிடித்த நீயும் ஈஸ்வரனுக்கு இணையானவனே. சனீஸ்வரா உன் கடமையை நீ தொடர்ந்து செய்வாயாக."என்று வரமளித்து அனுப்பினார்.
                  


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, October 31, 2014

நினைவில் நிற்கும் நிலாச்சோறு

பௌர்ணமியன்று அந்த நிலவைப் பார்த்தேன்.என் நினைவு எங்கோ சென்றது.இரவு எட்டுமணி.இந்த நேரம்தான் சிறுவர்கள் இரவு உணவைத் தேடும் நேரம். சுமார் எழுபது ஆண்டுகளுக்குமுன் எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் பாட்டி எங்களுக்கு சோறிட்டதை நினைவு கூர்ந்தேன்.பெரிய கிணற்றடி. சுற்றி மண் தரை யோ காரையிட்ட தரையோ பளிச்சென்று சுத்தமாக இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைச் சுற்றிலும் தென்னை மா எலுமிச்சை மரங்களும் அருகில் மல்லி ரோஜா சாமந்தி பாரிஜாதம் போன்ற மலர்ச் செடிகளும் நிறைந்திருக்கும் ரம்யமான தோட்டம். 
 அங்கு நடுவே அமர்ந்து கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் குழம்போ ரசமோ ஊற்றிப் பிசைந்து கொண்டு வந்து 'பசங்களா, வாங்க எல்லாரும். கதைவேணுமானா சீக்கிரமா வரணும் "என்று ஒரு அதட்டல் போடுவார்.
விளையாடிக்கொண்டிருந்த பத்துப் பேரும் ஓடிவந்து பாட்டியின் அருகே உட்காரப் போட்டி போடுவோம்.
ஒரு வழியாக எங்கள் சண்டையைத் தீர்த்துவிட்டுக் கதை சொல்லும் போதே ஒவ்வொரு உருண்டையாய் பாத்திரத்திலிருந்து கைகளில் விழும்.

இடையிடையே முழுங்கு, இருடா அவசரப்படாதே, ஏண்டி பறக்கறே, ம்..னு சொல்லு என்ற வசனங்களுடன் கதை நடக்கும். அந்தப் பாத்திரம் காலியாகும் வரை கதையும் தொடர்ந்துகொண்டிருக்கும்.அடுத்தவீட்டு அம்மாள் தன குழந்தை சாப்பிட அடம்பிடிப்பதாகச் சொல்லி எங்களுடன் சாப்பிட அமர்த்திவிடுவார்.நாங்களும் ஒரு விருந்தாளியை வரவேற்பது போல அந்தக் குழந்தையை நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அருகே அமர்த்திக் கொள்வோம்.அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி  சிரிப்பு பொங்கும் அந்தக் குழந்தையும் அழுகையை மறந்து சிரிப்பதோடு எங்கள் பாட்டியின் கையிலிருந்து கவளம் கவளமாக சாதத்தை வாங்கி தானே உண்டு விட்டுப் பெருமையோடு எங்களைப் பார்த்துச் சிரிக்கும்.

இந்த நினைவு காரணமாக எனக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தபின்னர் நான் பெற்ற நிலாச்சோறு மகிழ்ச்சியை என் பிள்ளைகளும் பெறவேண்டுமென  விரும்பினேன். எனவே சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவர்களுக்கு நிலாச்சோறு தான். என் பிள்ளைகளின் நண்பர்கள் தோழிகள் வீட்டுக்கு வந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களையும் நிலாச்சாப்பாட்டுக்கு அமர்த்திவிடுவேன்.இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது அந்தப்பையன்களில் ஒருவன்  என்னிடம் நிலாச்சாப்பாட்டை நினைவு வைத்துக் கொண்டு கேட்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். நம் பிள்ளைகளின் உணர்வு இன்னும் மங்காமல் இன்னும் நம் பாரம்பரியத்தில் அமிழ்ந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.இளைஞர்கள் இப்போது நிலாச்சாப்பாடு போட்டாலும் கைநீட்டத்  தயார்தான்.போடுவதற்குத் தாய்மார்கள் தயாரா?

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, October 27, 2014

chillaraich chettiaar.

.                         . சில்லரைச் செட்டியார்.


      ஒரு ஊரில் சில்லறைச் செட்டியார் என்று ஒருவர் இருந்தார்.அவர் அந்தஊரில் ஒரு சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார்.அவருக்கு இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. சில்லறைச் செட்டியார் என்ற பெயரே நிலைத்துவிட்டது.அந்தப் பெயர் வந்த காரணம்தான் இந்தக் கதை.
        ஒருநாள் நல்ல வெய்யில் நேரம். செட்டியார் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.நிறையப்பேர் சாப்பிட வந்திருந்தனர்.சமையலறையில் சமையல் சுறுசுறுப்பாக நடந்துகொண்டிருந்தது.அடுப்பில் சமைக்கும் பதார்த்தத்தின் வாசனை வெளியே வரை கமகமத்தது.
       ஒரு வழிப்போக்கன் சாப்பாட்டுக்கடையின் திண்ணையில் வந்து அமர்ந்தான்.சாப்பாட்டு நேரமானதால் தான் கொண்டுவந்திருந்த பழைய சோற்று . மூட்டையைத் திறந்து அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டான்.
         சாப்பிட்ட களைப்பில் திண்ணையில் சாய்ந்தான்.அப்போது சில்லறைச் செட்டியார் வெளியே வந்தார். படுத்திருக்கும் வழிப்போக்கனைப் பார்த்தார்.
"ஏனப்பா, உள்ளே போய்  சாப்பிடுவதுதானே. நல்ல சாப்பாடு. விலையும் குறைவு."
"உண்மைதானுங்க. நல்ல வாசமுங்க. .வயத்துல பசியைக் கெளப்பிடுச்சிங்க..
உங்க புண்ணியத்துல அந்த  வாசத்தைப்  பிடிச்சிகிட்டே பழையதைத் தின்னுட்டேனுங்க"என்றபடியே புறப்பட எழுந்தான்.
செட்டியார் விடுவாரா?

எங்கேப்பா புறப்பட்டுட்டே?வாசம் பிடிச்சியில்லே எனக்கு ஒரு சாப்பாட்டுக்கான மூணு அணாவை எண்ணி வச்சுட்டுப் போ."

"அய்யா, நான்தான் சாப்பிடவே இல்லீங்களே?"

"ஏதாவது பேசினேன்னா திண்ணையிலே உக்காந்ததுக்கும் வாடகை கேப்பேன்."

வழிப்போக்கனிடமோ  இருப்பதே வழிச் செலவுக்கு அவன் வைத்திருக்கும்  .மூன்றணாதான். என்ன செய்வான் பாவம். ஆனால் செட்டியாரோ விடுவதாயில்லை.அவனை இழுத்துக் கொண்டு அவ்வூர் நியாயாதிபதியிடம் சென்றார்.தன வழக்கை எடுத்துக் கூறி அவன் பிடித்த வாசனைக்கு ஒரு சாப்பாட்டுக்குண்டான மூன்றணா தரவேண்டும் என்று முறையிட்டார். நியாயாதிபதி வழக்கை மீண்டும் மீண்டும் கேட்டார்.

வழிப்போக்கன் அழுதுகொண்டே நின்றான்.

தீர்ப்புக் கூறினார்."நீ அவர் .கடை  வாயிலில் அமர்ந்து வாசனை பிடித்தபடி சாப்பிட்டதற்குப் பணம் தரவேண்டியதுதான். ஆனால் சாப்பாட்டின் வாசனை பிடித்ததுபோல சில்லறையை உன் கையில் வைத்து கலகலவென்று சத்தப் படுத்து. அதன் ஒலிதான் அவனுக்கு விலை.நீ பிடித்த வாசனைக்கு அவன் கேட்கும் காசின் ஒலிதான் கூலி.என்று கூறி வழக்கை முடித்தார்.
          இப்படி அநியாயமாக சம்பாதிக்க நினைத்ததனால் மூன்றணா சில்லறைக்காக நியாயசபைக்குச் சென்றதால் ஜனங்கள் இவரை சில்லறைச் செட்டியார் என்று அழைக்கிறார்கள்.எப்படி தீர்ப்பு.















Sunday, October 12, 2014

ராமனின் கோபம்

                                 ராமலக்ஷ்மணர்கள் வனவாசம் செல்லத் தயாராகி விட்டார்கள். சீதையும் பின்தொடர்கிறாள்.சீதை செல்லமாக ஆசையுடன் வளர்க்கும் கிளி அரண்மனை வாயிலில் இருந்த கூண்டுக்குள் இருந்தது.  நடக்கும் விபரீத நிகழ்ச்சிகளைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.வனவாசத்திற்கு ஸ்ரீராமனுடன் புறப்படும் சீதாதேவி தான் வளர்த்துவரும் கிளியின் அருகில் வந்ததும் நின்றாள்.'கிளியை மிகுந்த அன்புடன் பார்த்தாள் . மிகுந்த வாத்சல்யத்துடன் கூறினாள்.                                                                                                                                                                                                                                             "என் உயிரையே உன்மேல் வைத்திருக்கிறேன்.நான் சீக்கிரமே திரும்பி வருவேன். அதுவரை ஜாக்கிரதையாக இரு." என்று கூறி விடை பெற்றாள்.                           சீதை கிளியிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமனுக்குக் கோபம் வந்துவிட்டது.அவன் சீதையைப் பார்த்து சற்றே மனத் தாங்கலுடன் கூறினான்.
 "சீதே, சற்றுநேரம் முன்னர்தான் என் ப்ராணனே  நீங்கள்தான். தாங்கள் இல்லாமல் நான் ஒரு கணமும் உயிர் வாழமாட்டேன் என்று வாதாடினாய்..  மறு 
நிமிடமே கேவலம் ஒரு கிளியிடம் உன் பிராணன் இருப்பதாகக் கூறுகிறாய்.இதன் பொருள் எனக்கு விளங்கவில்லை." சற்றே சினத்துடன் கேட்ட மணாளனின் முகத்தைப் பார்த்த சீதை அச்சத்துடன் வாயடைத்து நின்று விட்டாள். 
அதைப் பார்த்த வசிஷ்டர் புன்னகையுடன் குறுக்கிட்டார்.
"ராமா, உன் அவதார ரகசியத்தை நினைத்துப் பார்.சீதை அந்த மகாலக்ஷ்மியின் அம்சம். அவள் கிளியிடம் பேசும்போது ஒருகால் வாயிலின் வெளியேயும் மற்றொரு கால் வாயிலுக்கு உள்ளேயும் வைத்துக் கொண்டு பேசினாள் .இதன் பொருள் என்னவென சிந்தித்தாயா.கிளியைக் காரணமாக வைத்து லக்ஷ்மி அம்சமான சீதை திரும்பி வரும்வரை அயோத்திக்கு லக்ஷ்மி கடாட்சம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அந்தக் கிளியிடம் தன உயிர் இருப்பதாகக் கூறினாள்."       என்று கூறி ராமனை சமாதானப் படுத்தினார்.
உண்மையை உணர்ந்துகொண்ட ராமனும் சீதையின் அன்புக்கும் அறிவுக்கும் அகமகிழ்ந்து அவள் கரம் பற்றி வனத்தை நோக்கி நடந்தான். இளவலும் .பின்தொடர்ந்தான்..