Tuesday, April 5, 2016

puriyaadha pudhir

    புரியாத புதிர்.

குழந்தைகளின் அழுகை என்று நினைக்கும் போதே தெனாலிராமனின் கதைதான் நினைவுக்கு வரும்.தானே குழந்தையாக மாறி ராயரை அந்தக் குழந்தையை சமாதானம் செய்யச் சொன்ன கதை அனைவரும் அறிந்ததே.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என் மகன் பத்துமாதக் குழந்தையாக இருந்தான்.ஒருநாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும் நங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.திடீரென படுத்திருந்த குழந்தை அழ ஆரம்பித்தான்.நான் வேகமாக எழுந்து பால் கொடுத்தேன். ஆனாலும் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைக்க முயன்றேன்.
ஆனாலும் அழுகை அதிகரித்து குழந்தையின் உடம்பு வியர்வையில் நனைந்து விட்டது.மணி பதினொன்றைத் தாண்டிவிடவே மூன்று மணி நேரமாக அழுவதால் ஏதோ பெரிய பாதிப்பு எனத் தோன்றவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் வீட்டுக்குச் சென்றோம் பாதி இரவு டாக்டரின்
வீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் அழும் குழந்தையைக் காட்டினோம். எனக்கு பயத்திலும் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைசமாதானப் படுத்தியதால் வந்த களைப்பினாலும் அழுகையே வந்து விட்டது.
  1. அந்தமருத்துவர் குழந்தையை கீழே படுக்கவைத்து பரிசோதித்தார்.பின் ''குழந்தைக்குப் பசியாக இருக்குமோ என்னவோ பால் கொடுத்தீர்களா?''என்றபோது நான் அநேகமாக அழவே தொடங்கிவிட்டேன்.இன்னும் நன்றாக குழந்தையை ஆராய்ந்த பின் குழந்''தைக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதாகத் தெரியவில்லையே.தொட்டிலில் கிடத்தி ஆட்டிப் பாருங்கள்''என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். நாங்கள் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம் நான் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தேன்.அழும் குழந்தையை என் மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே அமர்ந்தேன்.அவன் பிட்டப் பகுதியில் சிறு சிறு வேர்க்குரு போல் தோன்றியதைப் பார்த்து திடுக்கிட்டேன். அந்த பாதிராத்திரியில் யாரிடம் சென்று மருந்து கேட்பது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வீட்டில் இருந்த வெள்ளைப் பூண்டு ஒன்றை எடுத்து நசுக்கி அந்த பகுதியில் வைத்துத் தேய்த்தேன்.அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம்போல் அமைதியாக இருந்ததோடு ஒரே நிமிஷத்தில் தூங்கியும் போனான். அப்போதுதான் தெரிந்தது ஏதோ பூச்சி அவன் பின் பகுதியில் கடித்துள்ளது என்ற செய்தி  
  •          வாய் பேசத் தெரியாத குழந்தைக்கு இப்படி ஏதேனும் கஷ்டம் வந்தால் அது அவர்களை விட நமக்குத்தான் துன்பம் அதிகம் மனஉளைச்சல் என்பது எத்துனை பெரிய கஷ்டம்?
    1. இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான் இதை இங்கு தெரிவித்துள்ளேன்.






      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Monday, February 22, 2016

      மழலையின் மொழி.


      பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
      அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

      இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தூங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

      வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுததனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம்.
      அடக் கடவுளே காற்றுப் புகாத சில்க்கினால் ஆன சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

      எனவே குழந்தை அழுதால்  எறும்பு கடித்துள்ளதா,ஏதேனும் உபாதையா,பசியா அல்லது தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோரின் கடமை.

      குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.








      --
      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      மழலையின் மொழி.


      பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
      அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

      இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தொங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

      வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுதோதனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம். அடக் கடவுளே காற்றுப்புகாத  சில்க்கினாலான சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் எனப் புரிந்து கொண்டோம். எனவே குழந்தை அழுதால் எறும்புகடித்துள்ளதா, உடலில் ஏதேனும் உபாதையா பசியா தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோர்களின் கடமை. குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.












      --
      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Sunday, October 4, 2015

      திறமைசாலி

                       
      ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் பெரிய ஆறு இருந்தது.செழிப்பான அந்த ஊரில் நல்ல விளைச்சல் விளைந்தது.அந்த ஊரிலிருந்து அரிசி கடத்துவதாக செய்தி வந்தது. திருடர்கள் திருடிச் செல்வதாய் செய்தி காதுகளில் விழ அந்த ஊரின் தலைவர் ஊர் எல்லையில் ஆட்களை நிறுத்திவைத்தார்.யார் அரிசியை  எடுத்துச் சென்றாலும்அவர்களை உடனே காவலரிடம் ஒப்படைத்து வந்தார்.
                   ஒருநாள் மிதிவண்டியில் ஒருவன் வேகமாக ஊர் எல்லையைக் கடந்தான்.அவனது வண்டியின் பின்புறம் ஒரு சாக்குப் பை இருந்தது.
      அவன் எல்லையில் வந்ததும் காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி விசாரித்தனர்.
                  அவனோ தைரியமாக தனது பையைத் திறந்து காட்டினான். அதில் நிறைய மணல்தான் இருந்தது.தன வீடு இடிந்து விட்டதாகவும் அதைசீர் படுத்த மணல் எடுத்துச் செல்வதாகவும் கூறவே    அவனைப் போக விட்டனர். இப்படியே சுமார் பத்துநாட்கள் கடந்தன.திடீரென்று அவன் வருவது நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த ஊரில் இதுவரை பத்து மிதிவண்டிகள் காணவில்லை என்பது.அந்தத் திருடனின் திறமையைப் பாராட்டுவதா வேண்டாமா?
        இப்படிப்பட்டவர்கள் திருந்துவது எப்படி?" திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டைத் திருத்த முடியாது"
       என்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே!








      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Wednesday, July 22, 2015

      பொருளின் அருமை.

                      சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளி ல் இவ்வளவு பொருட்கள் நிறைந்திருந்ததில்லை. மிகக் குறைவான பொருட்களிலேயே திருப்தியாக வாழ்ந்து வந்தனர். பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருந்தனர் நம் பெற்றோர்.
                    ஒரு பொருள்  தொலைந்து விட்டது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தேடி எடுக்கின்ற உள்ள உறுதியும் உடல் உழைப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்றால் அது சற்றும் மிகையில்லை.ஏனெனில் என் .சிறுவயதில் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் 
      சொல்கிறேன்.

                     ஒருமுறை என் பிறந்தநாள் வந்தது.அன்று எனக்கு ஒருஜதை  தோடும் அந்தக் காலத்தில் லோலாக்கு எனச் சொல்லும் தொங்கட்டானும்  வாங்கி எனக்கு அதைப் போட்டு அழகு பார்த்தார் என் தாயார்.அவர் மனதில் ஏகத்துக்கு மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிந்தது.

                    அப்போது  எங்கள் வீட்டுக்கு அருகிலேயே புது வீடு கட்டிக் கொண்டிருந்தனர். வீடு கட்டுவதற்காக ஒரு வண்டி மணல் வந்து இறங்கியிருந்தது.அந்தத் தெருவில் இருந்த சிறுவர் சிறுமியர் நல்ல நிலவு வெளிச்சத்தில் அந்த மணல் குவியலில் குதித்து விளையாடினோம்.வெகுநேரம் கழித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னை என் அம்மா பார்த்தார்.
      "ஏண்டி! காதிலே எங்கே காணோம்?" சட்டென அப்போதுதான் என் காதுகளைத் தொட்டுப் பார்த்தேன்.
      'ஐயோ' வலது காதில் தொங்கட்டானும் இல்லை தோடும் இல்லை. அழுகை பொங்கி வந்தது. என் அம்மா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சற்று நேரத்தில் களைப்புடன்  தூங்கிவிட்டேன்.  

                        ஆனால் என் தாயார் தூங்கவேயில்லை. என் தந்தையார் துணை நிற்க கையில் மணல் சலிக்கும் பெரிய சல்லடையை எடுத்துக்கொண்டு மணல் குவியலின் அருகே வசதியாக அமர்ந்து கொண்டார். தந்தையாருடன் பேசிக் கொண்டே மணலை சலிக்க ஆரம்பித்தார்.நான் ஒரு இடத்திலா குதித்திருப்பேன்? எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ நம்பிக்கையில் சலித்தார் சலித்தார் சலித்துக் கொண்டே இருந்தார்.
      வெகு நேரம் கழித்து திருகாணி மட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் சலித்தார். கிட்டத்தட்ட அரைவண்டி மணல் சலித்துவிட்டார். ஒரே சமயம் தோடும் லோலாக்கும் சல்லடையில் மாட்டிக் கொண்டது.வெற்றியுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து படுக்கும் போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது.

                           இந்தக் கதையை மறுநாள் என் தந்தையார் சொல்லித் தெரிந்து கொண்டேன். அன்றே என் காதுகளில் தொங்கட்டானை மாட்டியவர் ""அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்கோ.பொருள் வாங்கறது பெருசில்லே வாங்கின பொருளைப் பாதுகாக்கிற துதான்பெருசு ." என்று சொன்னபோது எட்டு வயது சிறுமியாகிய நான் தலையை ஆட்டுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தபோது கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்டு அம்மா அணை த்துக் கொண்டார். 

                    அந்த நம்பிக்கை மனஉறுதி உழைப்பு நமக்கு இப்போது இருக்கிறதா என அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


      -



      -
      ருக்மணி சேஷசாயி  
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Sunday, July 5, 2015

      எதிலும் கற்போம்.


                         நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகள் நம் வாழ்க்கையில் எங்கும் எந்த இடத்திலும் தோன்றும்.எனக்கும்  அதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது.
                        ஒருமுறை நாங்கள் திருப்பதி செல்ல ரயில் நிலையம் சென்றோம். ரயில் நிலையத்தில்  நல்ல கூட்டம் நாங்கள் இருக்கையைத் தேடி வேகமாக நடந்தோம்.அப்போது  ஒரு கம்பத்தின் அருகே ஒரு வயதான பிச்சைக்காரன் கால் நீட்டி  அமர்ந்திருந்தான். நான் என் இருக்கையைத் தேடும் வேகத்தில் அவனது காலை நன்கு மிதித்து விட்டேன். அவனும் காலை மடக்கமுடியாமல்  திசை மாற்றி வைத்துக்  கொண்டான். ஒரு நிமிடம் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கண்களில் வேதனை தெரிந்தது.ஆனால் அதை அவன் கால் நீட்டி அமர்ந்த தவறு என்மீது எந்தத் தவறும் இல்லையெனஎன்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். 
                        ஒருவழியாக எங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தபின் சற்றே நீண்ட மூச்சு விட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.அப்போது ஒரு சிறுவன் சுமார் எட்டு வயதிருக்கும் கைநிறைய புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு பயணியிடமும் நூல்களின் பெ யர் சொல்லி  "வேணுமா சார்?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். 
                          அவனிடம் "எனக்கு எதுவும் வேண்டாம். என்னிடமே இருக்கு" என்று சொல்லிவிட்டதால் என்னைத்தாண்டி அடுத்து அமர்ந்திருப்பவரிடம் நூல்களைக் காட்டிப் பேசத் தொடங்கினான். அவர் வெகுநேரம் பார்த்துவிட்டு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை அவனிடம் அள்ளிக் கொடுத்தார்.சிறுவன் பாவம் கையில் கனத்துடன் நூல்களை அடுக்கமுடியாமல் அள்ளிக் கொண்டு அவர் கேட்ட மீதிச் சில்லறையையும் கொடுக்க முடியாமல் தவித்தான்.
                          அதே சமயம் சில்லறையை வாங்கிக் கொண்ட பெரியவர் ஒரு நாணயத்தைத் தவறவிட்டார். அந்த நிலையிலும் அந்தச் சிறுவன் கஷ்டப்பட்டு கீழே விழுந்த நாணயத்தைப் பொறு க்கி எடுத்தவன் ' மன்னிச்சுக்குங்க ஐயா கை தவறிடுச்சு" என்றவாறே  கொடுத்தான்.என்னைத்தாண்டிச் சென்றவன் என் கால் தடுக்கவே கீழே விழுந்து எல்லாப் புத்தகங்களையும் தவறவிட்டான்.உடனே "சாரி ம்மா .உங்க காலை மிதிச்சுட்டேனா. ரொம்ப சாரிம்மா."என்று மீண்டும் மீண்டும் சாரி கேட்டான்.எனக்கு மனம் உறுத்தியது காலை நீட்டிக் கொண்டது என் தவறு. ஆனால்  அந்த தவறைத்  தன மீது போட்டுக்  கொண்டு  மன்னிப்புக் கேட்கும் சிறுவன் சிறுவனாகத் தோன்றவில்லை என் கண்களுக்கு.எனக்குப் புத்தி புகட்டவந்த அந்த முருகப் பெருமானாகவே தோன்றியது எனக்கு.

                                வண்டி மெதுவாக நகரத் தொடங்கியவுடன் நான் வேகமாக ஜன்னலோரம் நின்றுகொண்டு அந்த முதியவர் கண்களில் பட்டவுடன் ஐந்து ரூபாய் நாணயத்தை இந்தாப்பா என்று கூவி அதை அவன் எடுத்துக் கொண்டு கை கூப்பியதைப் பார்த்தபின் ஏதோ பிராயச்சித்தம் செய்து விட்டதைப் போல அமைதியானேன்.


                            எப்படியெல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டேன்.





















      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Monday, April 13, 2015

      பெயர் பிறந்த கதை

      ஒரு மாலை நேரம். வீட்டிலிருக்கும் அனைவரும் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவரவர் வயதுக்கேற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று சின்னப் பெண் தன தாத்தாவிடம் கேட்டாள் ,"தாத்தா, இந்த பெங்களூருவுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தாத்தா?".தாத்தா புன்னகைத்ததைப் பார்த்ததும் நாங்களும் அவர் ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறார் என தெரிந்துகொண்டு அவரருகே சென்று அமர்ந்தோம்.

      "நானே சொல்லணுமின்னு இருந்தேன்.பாப்பா கேட்டது நல்லதாப் போச்சு.கேளு.சுமாரா ஒரு அறுநூறு வருசத்துக்கு மின்னாலே இந்த எடமெல்லாம் காடாக கெடந்துச்சாம்.
      அப்போல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்தான் இந்தப் பகுதியிலே இருந்துச்சாம். அப்படி இருந்த கொஞ்ச கிராமங்கள  கேம்பெகவுடான்ற ராசா ஆட்சி பண்ணாராம்.அவரு ஒரு நா சிப்பாய்ங்களோட காட்டுக்கு வேட்டைக்கு  வந்தாராம்.
      ரொம்பநேரம் வேட்டையாடிட்டு களைச்சுப்போய் பார்த்தா கூட வந்த சிப்பாய்க யாரையும் காணோம்.ராசாவழிதவறி  காட்டுக்குள்ளார ரொம்ப தொலைவு வந்திட்டாரு. அவரூக்கொ நல்ல பசி ஏன்னா செய்யிறதுன்னே தெரியல.மெதுவா எதாச்சும் வழி தெரியிதான்னு பாத்துகிட்டே வரும்போது ஒரு சின்ன குடிசை தேம்புட்டுதாம். ராசாக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சாம். வெளியே நின்னாப்பல ஆறு வூட்டுக்குள்ள? அப்படின்னு கேட்டது உள்ளேருந்து வயசானஒரு  பாட்டிம்மா வந்தாங்க. அவங்ககிட்ட ராசா வழி தவறிடுச்சு. பசிக்கு ஏதானும் கொடுங்கன்னு கேட்டாராம்.அந்தப் பாட்டிம்மாவும் உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சு தன்கிட்டே இதுதான் இருக்குது. பசிக்கு சாப்புடுன்னு கொஞ்சம் வெந்த பயறுகுடுத்துச்சாம். அதைத் தின்னு தண்ணி குடிச்ச ராசாவுக்கு புது தெம்பு வந்துடிச்சாம் 
      அந்தப் பாட்டிகிட்டே வழிகேட்டுக்கிட்டு தன்னோட ஊருக்கு வந்து சேர்ந்தாராம்.
      மறுநாள் சிப்பாய்கள அனுப்பி அந்தக் கிழவியை தன்னோட ஊருக்கு வரவழைச்சார்.தன வீட்டுக்கு அவளை க்  கூட்டிவந்து அவள் இருந்த நிலப்பகுதியை அவளுக்கே கொடுத்து நிறையப் பொன்னும் கொடுத்ததோட வெந்த பயறு கொடுத்த காரணத்தாலே அந்தப் பகுதிக்கு பெந்த காளு  ஊரு அப்படின்னு பேர் வச்சான். அதுதான் பிற்பாடு பெங்களூருன்னு ஆயிடிச்சி.பெந்த அப்படீன்னா வெ ந்தன்னு அர்த்தம் கன்னட பாஷையில.காளுன்னா பயறு வெந்த பயறு தந்த ஊருன்னு பேர் வந்துச்சு. காலப்போக்கில அதுவே பெங்களூருன்னு ஆகிப்போச்சு. என்ன புருஞ்சுதா என்றதும் அனைவரும் நல்ல கதையோட புது விஷயமும் தெரிந்து கொண்டோம் தாத்தா.என்றபடியே அவரவர் படுக்கச் சென்றனர்.

















      --
      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com