Tuesday, July 19, 2016

உண்மையான பக்தி.

ஒருமுறை நாரதர் தான்தான் ஸ்ரீமந்நாராயணனிடம் உண்மையான பக்தி கொண்டவன் என்ற கர்வம் கொண்டிருந்தார்.அதனால் நாராயணனிடம் சென்று நான்தான் அதிக பக்தி கொண்டவன் என்று  கூறவே அவரும் சிரித்தவாறே,"
"நாரதா, பூலோகத்தில் உள்ள சிறு கிராமம் இருக்கிறதே அங்கு பார்". என ஒரு விவசாயியின் குடிசையைக் காட்டினார். 
"ஒரு நாள் முழுவதும் அவனைப்பார். அதன்பிறகு வந்து சொல்"
                  நாரதரும் பூலோகம் வந்து அந்த விவசாயியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.இரவு வந்தது.விவசாயி தன்  கடமைகளை முடித்துவிட்டு  திண்ணையில் வந்து படுக்கும் பாயில் அமர்ந்தான்.ஒரு நிமிடம் கண்களை மூடி நாராயண ஸ்மரணை செய்தான்."பகவானே நாராயணா இன்று நல்லபடியாய் வைத்திருந்ததற்கு நன்றியப்பா. நாளை எழுவது உன்கையில்.
எழுந்தால்  இன்றுபோல் இருக்க அருள் செய்." 
அவன் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கிப்போனான்.நாரதரும் வைகுண்டம் நோக்கிப் போனார்."நாராயணா அவன் ஒரேயொரு முறைதான் ஒருநாளில் உன்னை ஜெபித்தான்.ஆனால் நானோ  நாள் முழுவதும் மட்டுமல்லாது எப்போதும் உன்னையே ஜெபிக்கிறேன்.என்னைவிட அந்த விவசாயி உயர்ந்தவனா சுவாமி?"
என்று கேட்ட நாரதரிடம் நாராயணன் ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணையைக் கொடுத்தார். "நாரதா, இந்த எண்ணை  ஒரு சொட்டுக் கூட கீழே விழாமல் இந்த பூலோகத்தைச் சுற்றிவா."என்று சொல்லிஎண்ணெய் நிரம்பிய  ஒரு கிண்ணத்தைக் கொடுத்தார்.
மிகவும் அலட்சியத்துடன் அதை வாங்கி கொண்ட நாரதர் இது என்ன பிரமாதம் என்று சொல்லி கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் பூலோகம் சுற்ற.
மிகவும் கவனத்துடன் அவர் சுற்றிவரும் வழியில் இந்திரன் வந்து நாரதா என அழைக்க அதைக் கவனிக்காமல் கையால் நகரு என்று சைகை காட்டி மேலே சென்றார். சற்று தூரம் கடந்தபின் பிரும்மதேவர் மகனே என்று அழைக்க சற்று நகரும் என்றபடியே மேலே சென்றார்.
இன்னும் சற்று நேரம் கடந்தபின் நாராயணர் எதிரில் வர அவரையும் கவனிக்காது எண்ணை க் கிண்ணத்தையே பார்த்தபடி சென்று பூலோகம் சுற்றி முடித்தார்.ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் எண்ணையைக் கொண்டுவந்துவிட்ட பெருமையில் நாராயணரைப் பார்த்துச் சிரித்தபடியே, 
"நாராயணா, இதோ எண்ணெய் சிந்தாமல் கொண்டுவந்து விட்டேன்.இப்போது சொல்லுங்கள்."
என்றார்.
அப்போது நாராயணர் சிரித்தபடியே, "நாரதா, பூலோகம் சுற்றும்போது என்னை எத்தனை முறை நினைத்தாய்? உன் எதிரே யார் யார் வந்தார்கள் என்பதாவது தெரிந்ததா உனக்கு?"என்றவரைத் திகைப்புடன் பார்த்தார் நாரதர்.
"உன் முன்னே இந்திரனும் பிரும்மதேவரும் வந்தனர்.ஏன் , நானே ஒருமுறை உன்னை அழைத்து எதிரே வந்தேன்.ஒரு சிறு காரியத்தைச் செய்யும் உன்னால் என்னை நினைக்கக்கூட முடியவில்லை.ஆனால் பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்கும் அந்த விவசாயியின் துன்பம் எத்தகையது தெரியுமா?அத்தனை சுமையையும் தாங்கும் அவன் என்னை மனதார ஒருமுறை நினைக்கிறான் என்றால்..."என்றவர்முன் தலைகுனிந்து அமைதியாக நின்றார் நாரதர்.
 அப்போது அவரைப் புன்னகையுடன் பார்த்த நாராயணர் "பூலோகவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் அத்தனையும் சகித்து என்னையும் மறக்காமல் ஒருமுறை மனதார நினைக்கும் அந்த விவசாயியின் பக்தியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் நாரதா?"என்றார்.
"ஒப்புக்கொள்கிறேன்.என்னைவிட உன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்கள் பூவுலகில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் .என் கர்வம் அழிந்தது. நாராயணா, என்னை மன்னித்தருளுங்கள்." என்று வேண்டிக்கொண்டவரை ஆசிவழங்கி அருள்புரிந்தார் நாராயணர்.



  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, July 9, 2016

இறைவனை உணர்ந்தவன்.

ஒரு கிராமம். அங்கு இருக்கும் கோவிலுக்கு கீதையின் பொருளை உணர்த்த ஒரு உபன்யாசகர் வந்தார்.இரவு ஆறுமணி முதல் எட்டு மணிவரை ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பொருள் சொல்லி வந்தார்.நான்கு நாட்கள் கதை சொல்வதாக முடிவு செய்திருந்தார்.
முதல்நாள்.கிராமத்து மக்கள் கூடி அமர்ந்தனர். அங்கு தலையில் முண்டாசும் கையில் தடியுமாக ஒரு வயதான விவசாயியும் வந்து கதை கேட்க அமர்ந்தான்.
இரண்டாம் நாள் பாதிப் பேர்தான் வந்திருந்தனர்.அந்த விவசாயியும் வழக்கம்போல வந்து அவனது இடத்தில் அமர்ந்தான்.கடைசி வரை இருந்து விட்டுச் சென்றான்.
கடைசி நாளன்று வெகு சிலரே வந்திருந்தனர். அனைவரும் சென்றபின் கண்ணில் நீர் தளும்ப அமர்ந்திருந்த விவசாயியிடம் உபன்யாசகர் கேட்டார்.
"ஏனப்பா, நான் சொல்லும் உபன்யாசத்தைப் பலர் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் நீ மட்டும் கண்ணால் நீர் விட்டு ரசித்தாயே என்ன புரிந்து கொண்டாய்?"
கண்களைத் துடைத்துக் கொண்ட அந்த விவசாயி சொன்னான்.
"அய்யா, நீங்க சொன்னது எனக்கு ஒண்ணும்  புரியல.ஆனா தினமும் நீங்க கதை சொல்லி முடிக்கும் வரை அந்த க்ருஷ்ண பரமாத்மா கையில் கடிவாளத்தைப் புடிச்சுக்கிட்டு தலையைத் திருப்பிக்கிட்டே பேசிக்கிட்டு  இருக்கிறாரே.பாவம் கழுத்தை அவருக்கு எவ்வளவு வலிக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.அழுகையா வருது சாமி"
உபன்யாசகர் திடுக்கிட்டார்.நாமெல்லாம் சந்தேகத்தோடு இறைவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க இந்த ஒன்றும் அறியாத விவசாயி எத்தனை ஆத்மார்த்தமாக இறைவனோடு ஒன்றியிருக்கிறான் கீதோபதேசப் படத்தில் இருக்கும் கிருஷ்ணனை உண்மையான க்ருஷ்ணனாகவே எண்ணி அவனுக்காக வருந்தும் இவனன்றோ உண்மையான பக்தன். 
கீதையின் உண்மைப் பொருளை இவனன்றோ அறிந்தவன்" என்று எண்ணியவர் தனக்கு அத்தகைய மனம் இல்லையே. இனி உண்மையான பக்தியுடன் இறைவனைப் பற்றிச் சொல்லவேண்டும் என முடிவு செய்து கொண்டார்.
 








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, April 5, 2016

puriyaadha pudhir

    புரியாத புதிர்.

குழந்தைகளின் அழுகை என்று நினைக்கும் போதே தெனாலிராமனின் கதைதான் நினைவுக்கு வரும்.தானே குழந்தையாக மாறி ராயரை அந்தக் குழந்தையை சமாதானம் செய்யச் சொன்ன கதை அனைவரும் அறிந்ததே.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என் மகன் பத்துமாதக் குழந்தையாக இருந்தான்.ஒருநாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும் நங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.திடீரென படுத்திருந்த குழந்தை அழ ஆரம்பித்தான்.நான் வேகமாக எழுந்து பால் கொடுத்தேன். ஆனாலும் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைக்க முயன்றேன்.
ஆனாலும் அழுகை அதிகரித்து குழந்தையின் உடம்பு வியர்வையில் நனைந்து விட்டது.மணி பதினொன்றைத் தாண்டிவிடவே மூன்று மணி நேரமாக அழுவதால் ஏதோ பெரிய பாதிப்பு எனத் தோன்றவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் வீட்டுக்குச் சென்றோம் பாதி இரவு டாக்டரின்
வீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் அழும் குழந்தையைக் காட்டினோம். எனக்கு பயத்திலும் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைசமாதானப் படுத்தியதால் வந்த களைப்பினாலும் அழுகையே வந்து விட்டது.
  1. அந்தமருத்துவர் குழந்தையை கீழே படுக்கவைத்து பரிசோதித்தார்.பின் ''குழந்தைக்குப் பசியாக இருக்குமோ என்னவோ பால் கொடுத்தீர்களா?''என்றபோது நான் அநேகமாக அழவே தொடங்கிவிட்டேன்.இன்னும் நன்றாக குழந்தையை ஆராய்ந்த பின் குழந்''தைக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதாகத் தெரியவில்லையே.தொட்டிலில் கிடத்தி ஆட்டிப் பாருங்கள்''என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். நாங்கள் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம் நான் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தேன்.அழும் குழந்தையை என் மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே அமர்ந்தேன்.அவன் பிட்டப் பகுதியில் சிறு சிறு வேர்க்குரு போல் தோன்றியதைப் பார்த்து திடுக்கிட்டேன். அந்த பாதிராத்திரியில் யாரிடம் சென்று மருந்து கேட்பது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வீட்டில் இருந்த வெள்ளைப் பூண்டு ஒன்றை எடுத்து நசுக்கி அந்த பகுதியில் வைத்துத் தேய்த்தேன்.அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம்போல் அமைதியாக இருந்ததோடு ஒரே நிமிஷத்தில் தூங்கியும் போனான். அப்போதுதான் தெரிந்தது ஏதோ பூச்சி அவன் பின் பகுதியில் கடித்துள்ளது என்ற செய்தி  
  •          வாய் பேசத் தெரியாத குழந்தைக்கு இப்படி ஏதேனும் கஷ்டம் வந்தால் அது அவர்களை விட நமக்குத்தான் துன்பம் அதிகம் மனஉளைச்சல் என்பது எத்துனை பெரிய கஷ்டம்?
    1. இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான் இதை இங்கு தெரிவித்துள்ளேன்.






      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Monday, February 22, 2016

      மழலையின் மொழி.


      பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
      அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

      இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தூங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

      வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுததனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம்.
      அடக் கடவுளே காற்றுப் புகாத சில்க்கினால் ஆன சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

      எனவே குழந்தை அழுதால்  எறும்பு கடித்துள்ளதா,ஏதேனும் உபாதையா,பசியா அல்லது தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோரின் கடமை.

      குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.








      --
      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      மழலையின் மொழி.


      பச்சிளம் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது மிகவும் கடினம்.பேசத் தெரியாத குழந்தைகள் தங்கள் உணர்வுகளை அழுகை மூலம் மட்டுமே நமக்கு அறிவிப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை என் அழுகிறது என்பது புரியாமல் பிடிவாதம் என்று சொல்லி (அதுவும் பெருமையோடு வேறு சொல்லிக்கொள்வார்கள்)
      அந்தக் குழந்தையைக் கடிந்து கொள்வதும் அடிப்பதும் பார்க்கவே பரிதாபமாகவும் மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

      இது போன்ற நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லவே இந்த முன்னுரை. என் பேத்தி பிறந்து நான்கு மாதங்களே ஆகியிருந்தன. மாலை சுமார் ஏழுமணிக்கு சற்றே சிணுங்க ஆரம்பித்தவள் நேரம் செல்லச் செல்ல பெரிதாக அழ ஆரம்பித்தாள் பால் குடுத்தாலும் விளையாட்டுக் காட்டியும் அழுகை நிற்கவில்லை. செய்வதறியாமல் இரவு சுமார் ஒன்பது மணிக்கு மருத்துவர் இல்லம் சென்று காட்டினேன். அவரும் பார்த்துவிட்டு ஒரு பிரச்சினையும் இல்லையே தூக்கமோ என்னமோ. தொங்கப் பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

      வீட்டுக்கு வந்த நான் குழந்தையை கீழே கிடத்தி அழுதோதனால் வியர்வையில் நனைந்திருந்த அவளது கவுனைக் கழற்றி மின்விசிறியைப் போட்டவுடன் களுக்கென்று நகைத்தாள் அனைவரும் கொல்லென்று சிரித்தோம். அடக் கடவுளே காற்றுப்புகாத  சில்க்கினாலான சட்டைதான் அவள் அழுகைக்குக் காரணம் எனப் புரிந்து கொண்டோம். எனவே குழந்தை அழுதால் எறும்புகடித்துள்ளதா, உடலில் ஏதேனும் உபாதையா பசியா தூக்கமா எனப் புரிந்து கொண்டு அதைத் தீர்ப்பதே பெற்றோர்களின் கடமை. குழந்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.












      --
      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Sunday, October 4, 2015

      திறமைசாலி

                       
      ஒரு சிறு கிராமம்.அந்த கிராமத்தில் பெரிய ஆறு இருந்தது.செழிப்பான அந்த ஊரில் நல்ல விளைச்சல் விளைந்தது.அந்த ஊரிலிருந்து அரிசி கடத்துவதாக செய்தி வந்தது. திருடர்கள் திருடிச் செல்வதாய் செய்தி காதுகளில் விழ அந்த ஊரின் தலைவர் ஊர் எல்லையில் ஆட்களை நிறுத்திவைத்தார்.யார் அரிசியை  எடுத்துச் சென்றாலும்அவர்களை உடனே காவலரிடம் ஒப்படைத்து வந்தார்.
                   ஒருநாள் மிதிவண்டியில் ஒருவன் வேகமாக ஊர் எல்லையைக் கடந்தான்.அவனது வண்டியின் பின்புறம் ஒரு சாக்குப் பை இருந்தது.
      அவன் எல்லையில் வந்ததும் காவலர்கள் அவனைப் பிடித்து நிறுத்தி விசாரித்தனர்.
                  அவனோ தைரியமாக தனது பையைத் திறந்து காட்டினான். அதில் நிறைய மணல்தான் இருந்தது.தன வீடு இடிந்து விட்டதாகவும் அதைசீர் படுத்த மணல் எடுத்துச் செல்வதாகவும் கூறவே    அவனைப் போக விட்டனர். இப்படியே சுமார் பத்துநாட்கள் கடந்தன.திடீரென்று அவன் வருவது நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அந்த ஊரில் இதுவரை பத்து மிதிவண்டிகள் காணவில்லை என்பது.அந்தத் திருடனின் திறமையைப் பாராட்டுவதா வேண்டாமா?
        இப்படிப்பட்டவர்கள் திருந்துவது எப்படி?" திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டைத் திருத்த முடியாது"
       என்று பட்டுக் கோட்டை சொன்னது சரிதானே!








      ருக்மணி சேஷசாயி 
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

      Wednesday, July 22, 2015

      பொருளின் அருமை.

                      சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் வீடுகளி ல் இவ்வளவு பொருட்கள் நிறைந்திருந்ததில்லை. மிகக் குறைவான பொருட்களிலேயே திருப்தியாக வாழ்ந்து வந்தனர். பணத்தின் அருமை தெரிந்தவர்களாக இருந்தனர் நம் பெற்றோர்.
                    ஒரு பொருள்  தொலைந்து விட்டது என்றால் அதை எப்பாடு பட்டேனும் தேடி எடுக்கின்ற உள்ள உறுதியும் உடல் உழைப்பும் கொண்டவர்களாக இருந்தனர் என்றால் அது சற்றும் மிகையில்லை.ஏனெனில் என் .சிறுவயதில் எனக்கேற்பட்ட அனுபவத்தைச் 
      சொல்கிறேன்.

                     ஒருமுறை என் பிறந்தநாள் வந்தது.அன்று எனக்கு ஒருஜதை  தோடும் அந்தக் காலத்தில் லோலாக்கு எனச் சொல்லும் தொங்கட்டானும்  வாங்கி எனக்கு அதைப் போட்டு அழகு பார்த்தார் என் தாயார்.அவர் மனதில் ஏகத்துக்கு மகிழ்ச்சி.அந்த மகிழ்ச்சி அவர் முகத்திலேயே தெரிந்தது.

                    அப்போது  எங்கள் வீட்டுக்கு அருகிலேயே புது வீடு கட்டிக் கொண்டிருந்தனர். வீடு கட்டுவதற்காக ஒரு வண்டி மணல் வந்து இறங்கியிருந்தது.அந்தத் தெருவில் இருந்த சிறுவர் சிறுமியர் நல்ல நிலவு வெளிச்சத்தில் அந்த மணல் குவியலில் குதித்து விளையாடினோம்.வெகுநேரம் கழித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.கைகால் அலம்பிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்த என்னை என் அம்மா பார்த்தார்.
      "ஏண்டி! காதிலே எங்கே காணோம்?" சட்டென அப்போதுதான் என் காதுகளைத் தொட்டுப் பார்த்தேன்.
      'ஐயோ' வலது காதில் தொங்கட்டானும் இல்லை தோடும் இல்லை. அழுகை பொங்கி வந்தது. என் அம்மா சமாதானம் செய்து சாப்பிட வைத்தார். சற்று நேரத்தில் களைப்புடன்  தூங்கிவிட்டேன்.  

                        ஆனால் என் தாயார் தூங்கவேயில்லை. என் தந்தையார் துணை நிற்க கையில் மணல் சலிக்கும் பெரிய சல்லடையை எடுத்துக்கொண்டு மணல் குவியலின் அருகே வசதியாக அமர்ந்து கொண்டார். தந்தையாருடன் பேசிக் கொண்டே மணலை சலிக்க ஆரம்பித்தார்.நான் ஒரு இடத்திலா குதித்திருப்பேன்? எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஏதோ நம்பிக்கையில் சலித்தார் சலித்தார் சலித்துக் கொண்டே இருந்தார்.
      வெகு நேரம் கழித்து திருகாணி மட்டும் கிடைத்தது. மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் சலித்தார். கிட்டத்தட்ட அரைவண்டி மணல் சலித்துவிட்டார். ஒரே சமயம் தோடும் லோலாக்கும் சல்லடையில் மாட்டிக் கொண்டது.வெற்றியுடன் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து படுக்கும் போது கிட்டத்தட்ட விடிந்து விட்டது.

                           இந்தக் கதையை மறுநாள் என் தந்தையார் சொல்லித் தெரிந்து கொண்டேன். அன்றே என் காதுகளில் தொங்கட்டானை மாட்டியவர் ""அடிக்கடி காதைத் தொட்டுப் பார்த்துக்கோ.பொருள் வாங்கறது பெருசில்லே வாங்கின பொருளைப் பாதுகாக்கிற துதான்பெருசு ." என்று சொன்னபோது எட்டு வயது சிறுமியாகிய நான் தலையை ஆட்டுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் அம்மா பட்ட கஷ்டத்தை நினைத்தபோது கண்களில் நீர் திரண்டது. அதைக் கண்டு அம்மா அணை த்துக் கொண்டார். 

                    அந்த நம்பிக்கை மனஉறுதி உழைப்பு நமக்கு இப்போது இருக்கிறதா என அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


      -



      -
      ருக்மணி சேஷசாயி  
      Rukmani Seshasayee
      ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com