Wednesday, February 15, 2017

அவசர காரியம் ஆகாது.


                      பெங்களூரிலிருக்கும்  என் மகன் சொந்த வீட்டுக்கு குடிபோகும்போது வீட்டுப் பொருட்களையெல்லாம் கட்டி வண்டியில் வைத்து அனுப்பிவிட்டுக் கடைசியில் கையில் கொண்டு போவதற்காக விலையுயர்ந்த வெள்ளிப் பொருட்களையெல்லாம் பெரிய பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருந்தான்.
              பெங்களூரில் வீட்டைக் காலி செய்வதாயிருந்தால் வீட்டை சுத்தம் செய்து வெள்ளையடித்துக் கொடுத்துவிட்டுத்தான் காலி செய்யவேண்டும் என்பது  அங்கு எழுதப் படாத சட்டம்.
               என் மருமகளும் வீட்டிலிருக்கும் குப்பைகளையெல்லாம் ஒரு பையில் போட்டு அதன் பக்கத்திலேயே வைத்திருந்தாள்  கிட்டத்தட்ட நான்கைந்து பைகள் சேர்ந்து விடவே அத்தனையையும் 
கொண்டு போய் வாசலில் வைத்துவிட்டு வந்து விட்டான் என் மகன்.
அவற்றோடு வெள்ளிப் பாத்திரங்கள் கிட்டத்தட்ட இரண்டு கிலோ பையோடு வாசலில் காத்துக் கிடந்தது குப்பையோடு குப்பையாய்.
                  காலை 9 மணிக்கு வைத்த குப்பையை எடுக்க தினமும் பத்து அல்லது பதினோரு மணிக்கெல்லாம் வண்டியில் வீட்டு வாசலில் இருக்கும் குப்பையையெல்லாம் அள்ளிக் கொண்டு போவார்கள் நகர சுத்திகரிப்பாளர்கள்.அவர்கள்  வருமுன்பாகவே குப்பையைக் காலி செய்யவேண்டுமென்னும் அவசரத்தில் எல்லாக் குப்பைப் பைகளையும் வாசலில் வைத்தாயிற்று.
                    ஒரு  மணிக்குமேல் சுண்ணாம்படிப்பவருக்கு வீட்டு  சாவியைக் கொடுத்துவிட்டு புறப்படும்போதுதான் வெள்ளிப் பாத்திரங்கள் வைத்த பையை இருவரும் தேடினார்கள்.அவசரத்தில் எந்தப் பையில் வைத்தோம் என்பதே இருவருக்கும் மறந்து விட்டது.
                    
                               இரண்டுமணிநேரம்தேடியும்கடைக்கவில்லை.இருவருக்கும் அழாத குறைதான்.சரி வீட்டையே காலி செய்தபின் எங்கிருந்து கிடைக்கும் பலரும் வந்து  போன இடம்.யார்கையில் கிடைத்ததோ என்று சமாதானம் செய்து கொண்டு ஒருவழியாக ஐந்து மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டனர்.

                       வெளியே வந்து வண்டியை இயக்கும்போதுதான் 
குப்பைப் பைகள் அங்கேயே யிருப்பதை மருமகள் பார்த்தாள் 
என்ன இன்றைக்கு என்று குப்பை வண்டி வரவில்லையே.வீட்டு வாசலில் இத்தனை குப்பை கிடக்கிறது. வீட்டுக் கார அம்மாள் பார்த்தால் கத்துவாள். சீக்கிரம் புறப்பட்டுப் போய்விடலாம் என்றபடியே அமர்ந்தாள்.ஆனால் என்ன தோன்றியதோ உடனே இருங்கள் என்று சொன்னபடியே வண்டியிலிருந்து குதித்து அந்தக் குப்பைப் பைகளைத் திறந்து திறந்து பார்த்தவள் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள்.                     

                        மகிழ்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. பெருமூச்சு வாங்க இதோ நம்ம பொருள் பத்திரமா இருக்குங்க என்றபடியே பையைக் காட்டினாள்.உள்ளே வெள்ளிப் பாத்திரங்கள் அவர்களைப்  பார்த்துச் சிரித்தபடி ஜம்மென்று பைக்குள் அமர்ந்திருந்தன.என்மகனும் பாடுபட்ட பொருள் நம்மை விட்டுப் போக பகவான் விட்டுவிடுவாரா.நாலைந்து மணி நேரம் நாம் கஷ்டப் படணும்னு விதி இருக்கு.இனிமேலாவது அவசரமும் அலட்சியமும் இல்லாமே ஒரு காரியம் செய்யணும்னு தெரிஞ்சுப்போம்.என்றபடியே வீட்டுக்குப் புறப்பட்டனர்.
                எந்தக் காரியத்திலும் அவசரம் அலட்சியம் கூடாது என்பது ஒரு பெரிய படிப்பினைதானே எல்லாருக்கும்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, February 3, 2017

இப்படியும் ஒரு தொழில்.

ஒரு கல்யாணத்திற்காக சென்னையிலிருந்து பெங்களூரு செல்லவேண்டி வந்தது.
 டபுள் டக்கர் வண்டியில் டிக்கட்டைப் பதிவு செய்திருந்தோம்அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வெளியிலிருந்து
2ஏ பிளாட்பாரத்திற்கு வெகு தொலைவு நடக்க வேண்டியிருந்தது நானும் என் மகளும் வேகமாக நடந்து வந்தோம். உள்ளே நுழையும் போதே வழியில் புத்தகங்கள் வார மாதப் பத்திரிகை விற்பவர் கண்ணில் படவே அவரிடம் கல்கியும் குமுதமும் அவசரமாக வாங்கி கொண்டோம்.முப்பத்தைந்து ரூபாய் வாங்கி கொண்டவர் நூறு ரூபாய்க்கு முதலில் சில்லறை இல்லை என்று சொன்னவர் சற்று நேரத்தில் இருக்கிறது எனக் கூறி மீதியையும் கொடுத்தார்.நாங்கள் எங்கள் வண்டி பிளாட்பாரத்தில் நிற்பதைப் பார்த்துவிட்டு வேகமாக ஏறி எங்கள்  இருக்கையில் அமர்ந்தோம்.  சற்று நேரத்தில் வண்டியும் புறப்பட்டது நாங்களும் இருக்கையினுள் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு புத்தகத்தைப் பிடித்துப் பிரித்தோம். குமுதத்தின் அட்டையில் இலவச புத்தகத்தைக் கேட்டு வாங்குங்கள் என்று இருநதது . அதைப் பார்த்தாய் அந்தக் கடைக்காரன் இலவச  ஏமாற்றிவிட்டான் பார்.  என்றேன்.நாமதானம்மா பார்த்துக் கேட்டிருக்கவேண்டும்.என்றாள்

-                         நானும் அமைதியாக புத்தகத்தைப் பிரித்தேன்.உள்ளே...!
.அடாடா...மூன்று வாரங்களுக்கு முன் நடந்த செய்திகளும் படங்களும் அத்துடன் வரவிருக்கும் பொங்கலை வரவேற்கும் செய்திகளும் என்னைத் தூக்கிவாரிப் போட வைத்தது. உடனே அட்டையைப் பார்த்தேன் ஜனவரி 11ந்தேதி என்று போட்டிருந்தது.என் மகளுக்கும் அதே அதிர்ச்சி போலும் அவளது கல்கி புத்தகத்தில் 5-1-2017 என்று  இருந்தது.இருவரும் நன்கு ஏமாந்து விட்டோம். எங்கள் அவசரத்திற்கு நாங்கள் கொடுத்த விலை. இனி எந்தசந்தர்ப்பத்திலும் புத்தகம் வாங்கும் போது தேதி பார்க்காமல்  வாங்கக் கூடாது.என்ற படிப்பினையை நாங்கள் பெற்றோம். யாருக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவு.


-
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Wednesday, December 28, 2016

மனம் நிறைந்தது.

கடந்தவாரம்  பாரதியாரின் நினைவு இல்லம் சென்றிருந்தோம்.அங்கு தாங்கும் இடத்திலும் இளைஞர்கள் பெரும் உதவியாக இருந்தனர்.இரண்டு நாட்கள் அருகே இருக்கின்ற பாஞ்சாலங்குறிச்சி,கயத்தாறு, அத்துடன் குற்றாலக் குளியல் என்று சுற்றி பார்த்தோம்.எட்டயபுரத்தில் கவியரங்கம் பேச்சரங்கம் என்று நல்ல முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு ரயிலில் ஏறுவதற்கு காத்திருக்கும் பொது என் பிராயா ணப்பையை ஒரு இளைஞர் சுமந்து வந்து என் இருக்கையில் வைத்துச் சென்றார்.அதேபோல் இறங்கும் இடம் மாம்பலம் வந்தவுடன் முன்பின் தெரியாத ஒருவர் வந்து  பையைத் தூக்கிக்கொண்டு வந்து  நான் கீழே இறங்க உதவிசெய்தார். 
      இறங்கும்போது தூறல் போட்டுக் கொண்டிருந்தது. என்னுடன் இறங்கிய ஒரு தம்பதிகளில் அந்த இளைஞன் என் சுமையையும் தான் எடுத்துக் கொண்டு வந்ததுமல்லாமல் நான் நனையாமல் எனக்கு குடைபிடித்தான்.பதிவரை வந்தவன் நான் வரவழைத்திருந்த டாக்சி திரிவர் அடையாளம் கேட்டுக் கொண்டு அருகே வந்து என் பையை வாங்கி கொண்டு படியேறினார்.என்னை மெதுவாக வரும்படி கூறிவிட்டு சூட்கேஸை காரில் வைத்துவிட்டு டிக்கியிலிருந்து குடையை எடுத்துக் கொண்டு வந்து நான் நனையாமல் கார்வரை அழைத்துச் சென்று உள்ளே அமரவைத்தான். அப்புறம்தான் மெதுவாக எப்படிப் போகவேண்டும் அம்மா என்று கேட்டான் அந்த டாக்சி டிரைவர்.
         அன்று எனக்கு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும் கருணைமனமும் கடமை உணர்வும் இருப்பவர்களாகத் தோன்றினார்கள்.இதேபோல் எல்லாஇடங்களிலும் எல்லாரிடமும் எல்லா இளைஞர்களும் இருக்கவேண்டும் இறைவா என வேண்டிக் கொண்டே வீட்டில் வந்து இறங்கினேன்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.

Monday, December 19, 2016

படித்த கதை: அச்சம் தவிர்

ஒரு நாள் அரசர் அக்பர் சபையில்  அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு மனிதன் அங்குவந்தான் . குண்டோதரனைப் போல் இருந்த அவனைப் பார்த்து சபையோர் அனைவரும் .சிரித்து விட்டனர்.அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த அந்த குண்டன் சபையோரைப் பார்த்துவிட்டு 
மன்னனிடம் கூறினான். " மஹாராஜா என் உடம்பை இளைக்கச் செய்ய உங்களால் முடியுமா? அப்படி முடிந்தால் என் காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாக  இருப்பேன். இல்லையேல் உங்கள் நாட்டில் அரசனுக்குரிய பதவியை எனக்கு நீங்கள் தரவேண்டும்" என்றான்.

அக்பர் திகைத்தார்.இவனை ஒரு மாதத்திற்குள் எப்படி இளைக்கச் செய்வது ? மெதுவாகத் திரும்பி அருகே அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்தார்.அவரும் மெதுவாகத் தலையசைத்து சம்மதிக்கச் சொல்லி சைகை காண்பித்தார்.அக்பரும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில்   குண்டனிடம் 
"சரி உன்விருப்பப்படியே ஆகட்டும்"என்றார்.
"ஒரு விண்ணப்பம். எனக்கு வயிறார சாப்பாடும் போடவேண்டும் பட்டினி போட்டுக்  கொல்லக் கூடாது."
.ஒரு மாதம்  சென்றது. அன்று குண்டோதரனை சபைக்கு அழைத்து வரப்  போகிறார் பீர்பால் என்பதை அறிந்து மக்கள் ஆர்வத்துடன் கூடிஇருந்தனர் 
குண்டனை, தவறு அவன் இப்போது இளைத்து பாதி உடம்பாகியிருந்தான்.
அக்பர் ஆச்சரியத்துடன் குண்டனைப் பார்த்தார்.
"உனக்கு உணவு தரவில்லையா?அல்லது மருந்து ஏதேனும் பீர்பால் கொடுத்தாரா ?"
பதில் சொல்லாது தலை குனிந்து தோல்வியடைந்த முகத்தோடு நின்றான் குண்டன்.
"பீர்பால் இது எப்படி நடந்தது?"
"ஒன்றுமில்லை மஹாராஜா.தினமும் இரவு இவர் உணவு உண்டபின் இவர் படுக்கையை சிங்கத்தின் கூண்டுக்கு அருகே போட்டிருந்தேன்.இவரிடம், "சிங்கக் கூண்டின்  தாழ்ப்பாள் சரியில்லை கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி வைத்தேன்.அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது.
உணவை விட நிம்மதியான தூக்கம் வேண்டும் அத்துடன் மனதில் பயஉணர்வு இவரது உணவை உடம்பில் ஒட்டாமல் செய்து விட்டது.அதுதான் இளைத்துவிட்டார்."
இதைக் கேட்ட மக்கள் பீர்பாலிடமிருந்து நல்ல பாடத்தை நாமும் கற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.நாமும் அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும் அதையே பாரதியாரும் அச்சம் தவிர என்று சொல்லியிருக்கிறாரன்றோ?


Rukmani Seshasayee

Sunday, December 4, 2016

கேட்ட கதை ; ஆசையும் பேராசையும்.

ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு?என்று கேட்டார்.ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன?என்று கேட்டார்.
அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். 
ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார்.அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார்.ஆனாலும் அந்த நாய் கதவில்  தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.
அப்படிப் பேசும் பொது ஒரு நாள் தெருநாய் சொல்லிற்று,"தினமும் இவர்கள் போடும் ரொட்டித்துண்டையே தின்கிறாயே சலிக்கவில்லையா.என்னைப் பார் தினமும் எத்தனை குப்பைத் தொட்டிகளில் விதவிதமான உணவைச் சாப்பிடுகிறேன்.உனக்கு அப்படி விதவிதமாகச் சாப்பிடும் ஆசை இல்லையா?"என்றது.
அதற்கு அந்தப் பணக்கார நாய்"எனக்கும் உன்னைப் போலவே   விதவிதமான உணவு சாப்பிட ஆசைதான்.அதில் ஒரு சிக்கல் இருக்கிறது."என்றது.
"அப்படி என்ன பெரிய சிக்கல் உனக்கு?"
இந்த வீட்டு எஜமான் தன  பெண்ணுக்கு கல்யாணம் செய்யப் பையன்களின் புகைப்படத்தைக் காட்டினார்.அவர் பெண்ணோ யாரையும் பிடிக்கவில்லையென்று சொல்லி  அடுத்த தெரு நாராயணனைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடிக்கிறாள்.

"அதனால் உனக்கென்ன?"

"அவள் அப்பாவோ மாட்டேன் என்கிறார்.இவளோ பிடிவாதமாக இருக்கிறாள் இன்று எஜமான் மகளிடம்  கோபமாக "இந்த நாய்க்கு உன்னைக் கட்டிவைத்தாலும் வைப்பேன் ஆனால் அந்த 
 நாராயணனுக்கு கட்டித் தரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.  
அதுதான் காத்திருக்கிறேன்பெணமிகவும்அழகாயிருப்பாள்."என்றது 

இப்போது புரிந்ததா?அந்தப் பெண் நாராயணனைக் கல்யாணம் செய்ய நினைத்தது ஆசை ஆனால் நாய் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்யநினைத்தது பேராசை."என்று முடித்தார்.

ஆசைப்படலாம் ஆனால் பேராசைப் படுவது தவறு என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தியுள்ளார்  அந்த ஞானி. 





  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 16, 2016

உயர்ந்த உள்ளம்

    .ஒரு சிற்றூர் அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் விவசாயம் செய்து பிழைப்பவர்கள். வானம் பார்த்த பூமியாதலால் எப்போது  மழை வரும் என்று வானம் பார்த்துக்  காத்திருந்து பின் உழுவதற்குச்   செல்வார்கள்.ஒருமுறை அந்த ஊருக்கு ஒரு .முனிவர் வந்தார். அனைவரும் வானம்  பார்த்து அமர்ந்து இருந்ததால் யாரும்  அவரைக் கவனிக்க வில்லை.அதனால் கோபம் கொண்ட முனிவர் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  இவ்வூரில் மழை பெய்யாது என்று சாபம் கொடுத்துச் சென்று விட்டார்.
இதை  அறிந்த பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர்  முனிவர் கொடுத்த சாபத்திற்கு தான் அடிபணியவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மழை பொழியாதிருக்க எண்ணினார்.ஸ்ரீ கிருஷ்ணர் கையிலிருக்கும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கு முழங்கினால்தான் உலகில் மழை பொழியும். ஆனால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு  மழை பொழியாது என்னும்போது இதை ஏன் கையில் வைத்திருக்க வேண்டும் என எண்ணிய கிருஷ்ணர் சங்கினைக் கீழே  வைத்து விட்டு   ஓய்வெடுக்கத் தொடங்கினார்.                       

அனைத்து மக்களும் உழவுக்குச் செல்லாமல் வாளாது இருக்கும்போது ஒரே ஒரு இளைஞன் மட்டும்  வழக்கம்போலத் தன்  தோளில் கலப்பையைச் சுமந்து கொண்டு  வயலை நோக்கிச் சென்றான் .அவனைப் பார்த்து ஊர்மக்கள்
 "ஏனப்பா, அதுதான் மழையே .இல்லையே.நீ எதை நம்பி உழுவதற்குச் செல்கிறாய்?வேறு தொழில் பார்த்துப் பிழைப்பைப் பார்."என்றனர்.
அதற்கு அந்தஇளைஞன் "பெரியவர்களே, ஐம்பது வருடம் உழாமல் இருந்துவிட்டால் எனக்கு உழவே மறந்து விடும்.என் மகனுக்கும் உழவென்பதே தெரியாது.அதனால் தினமும் உழுது என் தொழிலை மறக்காமல் இருக்கிறேன் "என்றான் 
வைகுண்டத்தில்  ஓய்வாகப் படுத்திருந்த ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து அமர்ந்தார். ஒருவேளை ஐம்பது ஆண்டுகள் என்   சங்கம் முழங்காமல்                             இருந்தால் நானும் இதைப் பயன்படுத்த மறந்து விடுவேனோ என எண்ணியவர், தன சங்கைக் கையில் எடுத்து ஊதிப்பார்த்தார். பாஞ்சசன்னிய முழக்கம் கேட்டவுடன் மேகங்கள் திரண்டு சோவென மழை பொழியவே மக்கள் அனைவரும் கலப்பையைக் கையில் ஏந்தி வயலை நோக்கி நடந்தனர் உழுவதற்காக.
நம் தொழிலை மறக்காமல் இருந்தால் , கடமையில் தவறாது இருந்தால் இறைவனே நினைத்தாலும் நம்மைத் தோற்கடிக்க முடியாது.எனவே கடமையைச்  செய்வோம் களிப்புடன்  வாழ்வோம்.













































































  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, July 19, 2016

உண்மையான பக்தி.

ஒருமுறை நாரதர் தான்தான் ஸ்ரீமந்நாராயணனிடம் உண்மையான பக்தி கொண்டவன் என்ற கர்வம் கொண்டிருந்தார்.அதனால் நாராயணனிடம் சென்று நான்தான் அதிக பக்தி கொண்டவன் என்று  கூறவே அவரும் சிரித்தவாறே,"
"நாரதா, பூலோகத்தில் உள்ள சிறு கிராமம் இருக்கிறதே அங்கு பார்". என ஒரு விவசாயியின் குடிசையைக் காட்டினார். 
"ஒரு நாள் முழுவதும் அவனைப்பார். அதன்பிறகு வந்து சொல்"
                  நாரதரும் பூலோகம் வந்து அந்த விவசாயியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.இரவு வந்தது.விவசாயி தன்  கடமைகளை முடித்துவிட்டு  திண்ணையில் வந்து படுக்கும் பாயில் அமர்ந்தான்.ஒரு நிமிடம் கண்களை மூடி நாராயண ஸ்மரணை செய்தான்."பகவானே நாராயணா இன்று நல்லபடியாய் வைத்திருந்ததற்கு நன்றியப்பா. நாளை எழுவது உன்கையில்.
எழுந்தால்  இன்றுபோல் இருக்க அருள் செய்." 
அவன் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கிப்போனான்.நாரதரும் வைகுண்டம் நோக்கிப் போனார்."நாராயணா அவன் ஒரேயொரு முறைதான் ஒருநாளில் உன்னை ஜெபித்தான்.ஆனால் நானோ  நாள் முழுவதும் மட்டுமல்லாது எப்போதும் உன்னையே ஜெபிக்கிறேன்.என்னைவிட அந்த விவசாயி உயர்ந்தவனா சுவாமி?"
என்று கேட்ட நாரதரிடம் நாராயணன் ஒரு கிண்ணத்தில் வழிய வழிய எண்ணையைக் கொடுத்தார். "நாரதா, இந்த எண்ணை  ஒரு சொட்டுக் கூட கீழே விழாமல் இந்த பூலோகத்தைச் சுற்றிவா."என்று சொல்லிஎண்ணெய் நிரம்பிய  ஒரு கிண்ணத்தைக் கொடுத்தார்.
மிகவும் அலட்சியத்துடன் அதை வாங்கி கொண்ட நாரதர் இது என்ன பிரமாதம் என்று சொல்லி கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார் பூலோகம் சுற்ற.
மிகவும் கவனத்துடன் அவர் சுற்றிவரும் வழியில் இந்திரன் வந்து நாரதா என அழைக்க அதைக் கவனிக்காமல் கையால் நகரு என்று சைகை காட்டி மேலே சென்றார். சற்று தூரம் கடந்தபின் பிரும்மதேவர் மகனே என்று அழைக்க சற்று நகரும் என்றபடியே மேலே சென்றார்.
இன்னும் சற்று நேரம் கடந்தபின் நாராயணர் எதிரில் வர அவரையும் கவனிக்காது எண்ணை க் கிண்ணத்தையே பார்த்தபடி சென்று பூலோகம் சுற்றி முடித்தார்.ஒரு சொட்டுக் கூட சிந்தாமல் எண்ணையைக் கொண்டுவந்துவிட்ட பெருமையில் நாராயணரைப் பார்த்துச் சிரித்தபடியே, 
"நாராயணா, இதோ எண்ணெய் சிந்தாமல் கொண்டுவந்து விட்டேன்.இப்போது சொல்லுங்கள்."
என்றார்.
அப்போது நாராயணர் சிரித்தபடியே, "நாரதா, பூலோகம் சுற்றும்போது என்னை எத்தனை முறை நினைத்தாய்? உன் எதிரே யார் யார் வந்தார்கள் என்பதாவது தெரிந்ததா உனக்கு?"என்றவரைத் திகைப்புடன் பார்த்தார் நாரதர்.
"உன் முன்னே இந்திரனும் பிரும்மதேவரும் வந்தனர்.ஏன் , நானே ஒருமுறை உன்னை அழைத்து எதிரே வந்தேன்.ஒரு சிறு காரியத்தைச் செய்யும் உன்னால் என்னை நினைக்கக்கூட முடியவில்லை.ஆனால் பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்கும் அந்த விவசாயியின் துன்பம் எத்தகையது தெரியுமா?அத்தனை சுமையையும் தாங்கும் அவன் என்னை மனதார ஒருமுறை நினைக்கிறான் என்றால்..."என்றவர்முன் தலைகுனிந்து அமைதியாக நின்றார் நாரதர்.
 அப்போது அவரைப் புன்னகையுடன் பார்த்த நாராயணர் "பூலோகவாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் அத்தனையும் சகித்து என்னையும் மறக்காமல் ஒருமுறை மனதார நினைக்கும் அந்த விவசாயியின் பக்தியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் நாரதா?"என்றார்.
"ஒப்புக்கொள்கிறேன்.என்னைவிட உன்னிடம் பக்தி செலுத்தும் மனிதர்கள் பூவுலகில் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் .என் கர்வம் அழிந்தது. நாராயணா, என்னை மன்னித்தருளுங்கள்." என்று வேண்டிக்கொண்டவரை ஆசிவழங்கி அருள்புரிந்தார் நாராயணர்.



  
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com