Thursday, September 22, 2011

10- குழந்தைத் தனம்.

என் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு அவன் அப்பா ஒரு சின்ன சைக்கிள் வாங்கித் தந்தார்.அந்த சைக்கிளில் அவன் ஏறிக்கொண்டு என் நான்கு வயது மகளைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட்டுக் காட்டுவான். ஆனால் அவளைத் தன் சைக்கிளைத் தொட விடமாட்டான்.
ஒவ்வொரு முறையும் விளையாடச் சென்று விட்டு அழுது கொண்டே வீட்டுக்குள் வருவாள என்மகள்.அன்றிலிருந்து தனக்கும் அதேபோல் சைக்கிள் வேண்டும் என்று கேட்கத் தொடங்கினாள். நாங்கள் இருவரும் அலுவல் முடிந்து வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா, சைக்கிள் எங்கே? என்று அழ ஆரம்பிப்பாள்.எங்களின் நிதி வசதி அப்போது உடனே சைக்கிள் வாங்கித் தரும் நிலையில் இல்லாததால் அவளைச் சமாதானம் செய்தும் வேறு விளையாட்டுக் காட்டியும் ஏமாற்றி வந்தோம்.
ஒருநாள் என் மாணவர்கள் பரீட்சைக்காகக் கட்டவேண்டிய பணத்தையெல்லாம் சரிபார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா மாணவர்களும் கொடுத்தார்களா, அத்தனை பேரின் பணமும் வந்துவிட்டதா,என சரி பார்த்துக் கொண்டிருந்தேன் மறுநாள் அப்பணத்தைக் கட்டவேண்டும்.என் மகளும் என் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது மளிகைக் கடைக்காரர் அவசரமாகப் பணம் வேண்டும் எனக் கேட்டு வந்து நின்றார்.
அவரிடம் இன்னும் நான்கு நாட்கள் கழித்துத்தான் சம்பளம் வரும் அன்று மாலையே கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மகள் குறுக்கிட்டு" இல்லே அங்கிள், அம்மா பொய்சொல்றாங்க. நிறைய ரூபா வச்சிருக்காங்க. எனக்குக் கூட சைக்கிள் வாங்கித் தரமாட்டேங்கிறாங்க,"என்று விம்மும் குரலில் கூறினாள். 
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கடைக்காரர் என்ன நினைத்துக் கொள்வார் என்னைப் பற்றி என நினைத்துப் பதைத்துப் போனேன்.
அவரிடம் பரீட்சைக்கான மாணவர்களின் பணம் என்ற உண்மையைச் சொல்ல  அவரும் அதைப் புரிந்து கொண்டு,
"அதாம்மா,குழந்தைகளை வச்சிக்கிட்டு எந்தமாதிரியான காரியங்களைஎல்லாம் செய்யக் கூடாதுன்னு இப்பப் புரியுதுங்களா" என்று  எனக்கு அறிவுரை கூறிச் சென்றார்.அதன் பின்னரே நான் அப்பாடா என மூச்சு விட்டேன்.
குழந்தைகளுக்கு எந்த சமயம் எதைச் சொல்லக் கூடாது என்பதோ உண்மையைப் புரிந்து கொள்ளும் நிலையோ இல்லை.அதனால் அவர்கள் குழந்தைத் தனமாக எதையாவது பேசி நம்மை சிக்கலில் மாட்டி விடுவார்கள்.
அந்தக் குழந்தைத் தனத்தை எதிர்பார்த்து நாமும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன்.


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

Thursday, September 15, 2011

9-அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பு.
அப்பா என்றாலே பிள்ளைகளுக்குச் சற்று பயம்தான்.அப்பா எவ்வளவு அன்பு காட்டினாலும் சில சமயங்களில் அவர் காட்டும் கடுமையும் கோபமும் நமது மனதில் பயத்தை உண்டாக்கி விடுகிறது.அதனால் அப்பா என்றாலே சற்று பயம்தான் எல்லோருக்கும்.
என் அப்பாவும் அப்படித்தான்.அவர் எப்போது கோபத்தைக் காட்டுவார் எப்போது சிரிப்பார் என்றே தெரியாது.அதனால் அவர் ரொம்ப கோபக்காரர் என்றே நாங்கள் முடிவு செய்து சற்று ஒதுங்கியே இருப்போம்.
தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியது. பள்ளி ஆசிரியராக இருந்த எங்கள் சித்தப்பா வந்திருந்தார் அவர் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவார். அதனால் சிறுவர்களான நாங்கள் அவரது பேச்சை ரசிப்போம். அவர் இருக்கும் இடத்திலேயே நாங்களும் இருப்போம். அப்படித்தான் ஒருநாள் இரவு.சாப்பாடு முடிந்து சித்தப்பா அப்பாவுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.சித்தப்பா ஒரு நாற்காலியிலும் அப்பா சாய்வு நாற்காலியிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.நாங்களும் சித்தப்பாவின் பேச்சை ரசிப்பதற்காக போய் அமர்ந்தோம்.
அந்த இடம் சற்று சிறியதாக இருந்ததால் அவரவருக்குக் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நானுமப்பாவின் தலைப் பக்கம் திண்ணையில் இருந்த சிறிய இடத்தில் ஒண்டியபடி அமர்ந்து கொண்டேன்.
அப்பது அம்மா என்னிடம் பால் குவளையைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.நானும் அதைக் கையில் வாங்கிக் கொண்டேன்.அந்த சமயம் பார்த்து சித்தப்பா ஏதோ ஜோக்கடித்தார்.அனைவரும் குபீரென்று சிரிக்க நான் வாய் நிறைய ஊற்றிக்கொண்ட பாலை புர்ரென நீர்வீழ்ச்சிபோல வெளியேற்றினேன்.அந்த நீர்வீழ்ச்சி சரியாக என் முன்னால் தலைவைத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த என் அப்பாவின் வழுக்கைத் தலயில் விழுந்து உடலெங்கும் வழிந்தது.நான் உமிழ்ந்து முடிக்கும் வரை அப்படியே அமர்ந்திருந்த அப்பா மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தார்.
எங்கள் அனைவருக்கும் அதுவும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அப்பா புன்னகையுடன் பார்த்து, "முடிந்ததாம்மா? இன்னுமிருக்கா?"என்று கேட்டுச் சிரித்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்திலும்  மிக்க ஆனந்தமேற்பட்டது.
அப்பாவின் அன்பு எத்தகையது, அவர் கண்டிப்பெல்லாம் அன்பின் அடிப்படையில்தான் என்பதை அறிந்தபோது அவரது அன்பை எண்ணிக் கண்களில் நீர் நிறைந்தது.இப்போதும் தான்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com