Wednesday, April 4, 2012

16.உண்மை அன்பு.

             சுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள்  குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும்ப எண்ணினால் எந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை. எல்லாப்  பேருந்திலும் கூட்ட நெரிசல். சீர்காழியில் கோயிலில் ஏதோ விசேஷம் எனத் தெரிந்தது. மறுநாளைக்கு பயணச் சீட்டை நிர்ணயம் செய்து கொண்டு ஹோட்டலுக்கு வந்து அமர்ந்து கொண்டு யாரேனும் உறவினர் தெரிந்தவர் அந்த ஊரில் இருக்கிறார்களா ஒரு இரவு மட்டும் தங்க என்று யோசித்தோம்.
            நல்லவேளையாக அந்த ஊரில் என் நண்பருக்கு உறவினர் இருப்பது நினைவுக்கு வந்தது.எப்போதோ அவரைச் சந்தித்திருந்ததால் அவரது இல்லத்தில் அன்றிரவைக் கழிக்கலாம் என முடிவு செய்து அவர் வீட்டுக் கதவை இரவு எட்டு மணிக்குத் தட்டினேன்.ஒரு பத்து வயது சிறுமி கதவைத் திறந்தாள்.அவளது பின்னாலேயே என் நண்பரின் உறவினரும் வ்ந்தார்.எங்களைப் பார்த்து சற்றே யோசித்தவர் நான் நண்பரின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வந்தவராய் முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.நடுக்கூடத்தில்மூன்று வயது சிறுவன் சாப்பிடத் தெரியாமல் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.வீட்டின் தலைவர் எங்களை கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள் சாப்பிடலாம் என்று உபசரித்தார்.
           அவர் பேசிக்கொண்டே குழந்தையைத் தூக்கி சுத்தம் செய்து அந்த இடத்தையும் சித்தம் செய்தார். அதே சமயம் சமையல் கட்டிலிருந்து தாளிக்கும் சத்தம் கேட்டது.பத்து வயதுப் பெண் உள்ளே எங்களுக்காக உப்புமா தயாரித்துக் கொண்டிருப்பது புரிந்தது.அந்தச் சிறுமியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து போனேன் நான்."நான் செய்வேனே ஏன் குழந்தை சிரமப்பட வேண்டும்" என்றேன்.அப்போது அங்கு வந்த அந்தப் பெண் ஒரு புன்னகையாலே தன் மறுப்பைத் தெரிவித்து உள்ளே சென்றாள்.
            திடீரென உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.அந்தப் பெண் தன் அப்பாவிடம் ஏதோ பேசினாள்.அவரும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று விட்டு வ்ந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல். இருப்பினும் நாங்கள் அமைதியாகசாப்பிட அமர்ந்தோம்.எல்லோரையும் அமரச் சொல்லி அந்தசிறுமி பரிமாறத் தொடங்கினாள்.அப்போது பின் பக்கமிருந்த ஓர் அறையிலிருந்த பெரும் குரல் கேட்டது.
            அந்தப் பெண் தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.அவரும் "பரவாயில்லை அம்மா.அவளை இங்கேயே அழைத்து வந்து உட்காரவை.
அவளை விட்டு விட்டு எனக்கென்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது."என்றவுடன் தயங்கியவாறே அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள்.அங்கேயே உட்கார வைத்து அந்த அம்மாவுக்கும் ஊட்டி விட்டாள்.சாப்பிட அடம் செய்த அந்தப் பெண்மணியை கெஞ்சியும் கொஞ்சியும் ஊட்டிவிட்டாள் அந்தச் சிறுமி.
           இரவு அனைவரும் தூங்கச் சென்றபின் வீட்டின் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறினார்."எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகின்றன.ஐந்து வருடம்  கழித்து மூத்த மகள் பிறந்தாள்.பலவருடங்கள் கழித்து மகன் பிறந்தான். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணியபோது என் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டது.நினைத்ததைப் பேசுவாள். சில சமயம் பொருள்களை விசிறி அடிப்பாள். என்மகள் தான் இப்போது அவளுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள்.மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் வந்திருக்கும்போது ஏதேனும் ரகளை செய்தால் என்ன செய்வது என்று அவளை அறையில் போட்டுப் பூட்டி விட்டாள் என் மகள். அதுவே என்னால் தாங்க முடியவில்லை."
அவரின் அன்புள்ளத்தை எண்ணி நான் வியந்தேன்.அப்போது "அப்பா, தூங்கப் போங்கள். அம்மா தூங்கியாச்சு"என்றபடியே அங்கு  வந்த அந்தச் சிறுமியை மானசீகமாக  வணங்கினேன்.
துன்பத்திலும் புன்னகை முகம் காட்டும் பண்பு, தாயிடம் கொஞ்சவேண்டிய குழந்தை அந்தத் தாய்க்கே தாயாக இருந்து ஊட்டி வளர்க்கும் கனிவு, 
வீட்டிற்கு வந்த விருந்தினரை தந்தை சொல்லாமலேயே உபசரித்த சிறப்பு, தந்தையிடம் தாய் தூங்கிவிட்டாள் எனச் சொன்ன பொறுப்புணர்ச்சி,தந்தையைத் தூங்கச் சொன்ன கடமையுணர்ச்சி இத்தனை பண்புகளையும் ஒருங்கே பெற்ற அந்த சிறுமியை நான் வணங்கியது சரிதானே.



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 comments:

  1. சிறு வயதிலேயே எத்தனை பொறுமை... பொருப்புணர்வு.... நல்ல பெண்... அவளுக்கு ஆண்டவன் அருள் புரியட்டும்....

    பகிர்வுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  2. உறவினர்கள் உதவி இலையோ. மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்தக் குழந்தை சீரும் சிறப்புடன் இருக்க ஆசிகள்.

    ReplyDelete