Tuesday, April 17, 2012

17-சேற்றில் செந்தாமரை

. ஒரு முறை நாங்கள் பழனிக்கு முருகனை தரிசிக்கச் சென்றோம்.நாங்கள் சென்ற ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.மலைப் பகுதி வந்தவுடன் விரைவில் பழனி வந்துவிடும் என்று வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.பழனியை நெருங்கியபோது ரயில் மெதுவாகச் சென்றது.
அந்த மலைகளின் இடையே இரண்டு பெண்கள் பதினாறு பதினேழு வயதிருக்கும் குட்டைப் பாவாடை அணிந்து தோளிலே ஒரு பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.அவர்களின் உடை அலங்காரத்திளிருந்தே அவர்கள் இருவரும் நரிக்குறவர் என்னும் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டேன்.
சற்று அருகே நின்றிருந்தவர்கள் ரயிலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருத்தியின் கண்களைப் பார்த்தபோது என்னால் அந்தக் கண்களை விட்டு வேறு எதையும் பார்க்க இயலவில்லை. மதுரை மீனாட்சியை கயல்கண்ணி என்பார்கள் அந்தக் கண்களைத்தான் அந்த அம்பாள் இவளுக்குக்  கொடுத்திருக்கிறாள் என்னும் படி அந்தக் கண்கள் பிரகாசித்தன.
ஊருக்குள் சென்று முருகனைத் தரிசித்தபின்பும் அதை என்னால் மறக்க முடியவில்லை.
       ஊர்திரும்புவதற்காக ரயிலடியில் அமர்ந்திருந்த போது அந்தப் பெண்களை அருகில் பார்க்க நேர்ந்தது.
அந்த அழகிய கண்களால் அவள் முகமே அந்த அம்பாளின் முகமாக எனக்குத் தெரிந்தது.
"உன் பெயர் என்னம்மா?"
"எம்பேரு மதுராந்தகி.இவ என் சிநேகிதி இவ பேரு செங்கல்பட்லா"
மதுராந்தகி என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்."பொருத்தமான பேரு.அது என்ன செங்கல்பட்லா?அவளுக்கும் உன்னைப் போல நல்ல பேரு இல்லையா?" என்றேன் புன்னகையோடு.
"அதுவா அம்மா, நானு மதுராந்தகத்திலே இருக்கும்போது பொறந்தேனாம்.அதனாலே மதுராந்தகி. இவ செங்கல்பட்டிலே இருக்கும்போது பொறந்தா. அதனாலே செங்கல்பட்லா.நாங்க எந்த ஊருலே பொறந்தோமோ அந்த ஊரு பேரைத்தான் வச்சுக் கூப்புடுவாங்கோ." என்று விட்டுச் சிரித்தாள் அந்தப் பெண்.இன்னும் சற்று நேரம் அவளின் அந்த அழகு முகத்தையும் அம்பாளின் அந்தக் கண்களையும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசையால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.ஆனால் ரயில் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிடவே அந்தப் பெண்களுக்கு ஒரு ஐந்து ரூபாய்த தாளைக் கொடுத்துவிட்டு எழுந்தேன்.
"நீங்க நல்லாயிருக்கோணும்" அந்த வாழ்த்து அம்பாள் எனக்கு அளித்த ஆசியாக எண்ணிக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.
அழகு என்ற சொல்லைக் கேகும்போதோ படிக்கும் போதோ மதுராந்தகியின் நினைவு வராமல் இருப்பதில்லை.ஆண்டவன் எங்கெல்லாம் அழகை மறைத்து வைத்துள்ளான் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.
சேற்றிலே செந்தாமரை என்பதைமட்டுமல்ல குறப் பெண்ணிடமும்  கொஞ்சும் அழகை வைத்த அந்த ஆண்டவனின் விளையாட்டை  எண்ணி வியக்கிறேன். என்னால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களிலும் உள்ள சிறப்பைத் தேடிப் பார் என்று இறைவன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

No comments:

Post a Comment