Saturday, December 22, 2012

35-முடிவில்லாத கதை




பாட்டி சொல்லும் கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்திய சுட்டி விகடனுக்கு பாட்டியின் நன்றி.



சில புதிய கதைகளை சுட்டிகளுக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தை சுட்டிவிகடன் எனக்கு அளித்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி.
சுட்டி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைதளத்தைப் படிப்பவர்கள் அதையும் கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அன்புப்பாட்டி,
ருக்மணி சேஷசாயி.


   35- முடிவில்லாத கதை.

ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்.அவன் எப்போதும் ஏதேனும் புதிய புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சபையில் கூறுவான். அந்த கருத்துகளால் மக்களும் மந்திரிகளும் சற்றுக் குழப்பமடைவார்கள்.அதனைத் தீர்த்து வைக்கப் பெரும் பாடு படுவார்கள். கடைசியில் அதைத் தீர்க்காமல் மன்னனிடம் தோற்று நிற்பார்கள். மன்னன் இவர்களின் தோல்வியைக் கண்டு மனதுக்குள் மகிழ்வான்.இப்படி ஒரு மன்னனைப் பெற்றதால் நாட்டின் முன்னேற்றமே நடக்கமுடியாமல் இருக்கிறதே என்று மந்திரிகளும் மக்களும் வருந்தினர்.
ஒருமுறை அந்த நாட்டிற்கு ஒரு புலவர் வந்தார்.அவர் மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.அந்த நாட்டு மன்னனைத் திருத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என எண்ணினார்.அதனால் மன்னர் முன் வந்து நின்ற புலவர் "வணக்கம் மன்னர் மன்னா, தாங்கள் பல கேள்விகளைக் கேட்டு மந்திரிகளையும் மக்களையும் திணற அடித்துள்ளீர்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விடை சொல்லிவிட்டால் என் தமிழப்புலமையைத் தங்களுக்கு அடிமையாக்குகிறேன். நீங்கள் தோற்றால் இந்த நாட்டு மக்களின் நலன் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை என வாக்குத் தரவேண்டும்" என்றான்.
மன்னருக்கு மகிழ்ச்சி. எங்கிருந்தோ வந்து என்னிடம் மாட்டிக் கொள்கிறானே என்று நகைத்தான்.அதனால் ,"எங்கே கேள் பார்ப்போம்"என்றான் கர்வத்தோடு.
"மன்னா, முடிவே இல்லாத கதையைச் சொல்லுங்கள்."
"என்ன, முடிவே இல்லாத கதையா?"
"ஆம் மன்னா, போதும் என்று சொல்லும் வரை கதை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அப்படி ஒரு கதை சொல்ல முடியுமா தங்களால்?"
அரசன் யோசித்தான். தன கற்பனை மேல் அவனுக்கு அபார நம்பிக்கை."சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.
ஆனால் அரசனால் மூன்று நாட்களுக்கு மேல் கற்பனை செய்ய இயலவில்லை.மிகவும் களைத்துவிட்டான். சோர்ந்துபோய் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.ஆனால் நீ அப்படி ஒரு கதையைக் கூறவேண்டும் அப்போதுதான் நீ வென்றதாகக் கொள்ள முடியும் என்றான்.
புலவன் கதை சொல்லத் தொடங்கினான்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் பல காணி நிலம் இருந்தது. நல்ல செழிப்பான பூமி. மூன்று போகம் விளையக் கூடியது.அப்படி ஒரு முறை மூன்று போகம் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து  சேமிப்புக் கிடங்கில் கொட்டியிருந்தார்.அந்த மலைபோலக் கொட்டிக் கிடந்த நெல்லை ஒரு குருவி பார்த்தது இந்த நெல்லை நம் கூட்டுக்குக் கொண்டு பொய் விடவேண்டும் என்று அந்தக் குருவி நினைத்தது. உடனே பறந்து வந்து ஒரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்துவிட்டுத் திரும்பியது மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைத் தன மூக்கில் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.மூன்று நாட்கள் ஆகியும் அவன் நிறுத்தவில்லை இதே செய்தியை கூறிக் கொண்டே இருந்தான்.
"புலவரே நிறைய நெல்மணிகளைத் தான் கொண்டுபோய் விட்டதே  பிறகு என்ன அதைச் சொல்லுங்கள் என்றான் பொறுமை யிழந்து.
"இல்லை மன்னா, அந்த அம்பாரம் நெல்  முழுவதையும் அந்தக் குருவி கொத்திப் போகும் வரை சொல்லவேண்டும் அல்லவா?"
மன்னன் மிகவும் களைத்துவிட்டான். மந்திரி மார்களும் கூடியிருந்த மக்களும் தூங்கிவிட்டனர்.மன்னன் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.
அம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக்  கேட்பது யார்?
தான் சொன்னபடியே தன நாட்டைக் கவனிப்பதாகவும் இனி அனாவசியமாக மந்திரிமாரையும் மக்களையும் சங்கடப் படுத்துவதில்லை என்றும் உறு திகூறினான் அந்த மன்னன்.
அத்துடன் நிறைந்த பரிசுகளையும்  அந்தப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான் .மக்களும் நிம்மதி பெற்றனர்.






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 12, 2012

தீபாவளி வாழ்த்து.


மணி மணியாய் செய்திகள் என்ற தளத்திற்கு விஜயம் செய்து கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் 

எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் அன்புப் பாட்டி
ருக்மணி சேஷசாயி.





ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, November 5, 2012

34.கவனம் தேவை.

                கவனம் தேவை.
     
      வாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து "அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.
      அவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.
அந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள்  எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது. 
       ஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே  என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Tuesday, October 16, 2012

33 amma sonna kadhai.

                        அம்மா சொன்ன கதை.
 மாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும்  நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.
அதற்கு அம்மா,"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா?" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.
உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்."ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்."யாரம்மா அந்த எட்டுப்பேர்?"
அவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார்  இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா "
நான் ஆவலோடு "என்னம்மா சொன்னார்?"என்றேன்.
"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம்  துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு  அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.
இதிலேருந்து என்ன தெரியுது?மனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ  இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே"
என்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே?











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, October 7, 2012

32. உடனே செய்யுங்கள்

.
சுமார் அறுபது ஆண்டுகளுமுன் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நேரம் என் அத்தை மகளை எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வ்ந்தார் என் தந்தையார். அவள் பெற்றோரை இழந்துவிட்டதால் என்னுடன் என் வீட்டில் வளர்ந்து வந்தாள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் பிறந்த சகோதரி யாருமில்லாததால் அவளை நான் என் சகோதரியாகவும் உற்ற தோழியாகவும் ஏற்றுக் கொண்டேன்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம்.ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.
இரவு ஒரே பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டு ஊர்க்கதைகள் பேசி இரவைக் கழித்தோம்.தாயார் அதட்டும் வரை பேச்சு நீளும். இரவு நேரம் கதை பேசுவது எங்களுக்குப் பிடித்தமானது.குளிர் நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்து குளிர் காய்ந்தபடி கதை பேசுவது அதைவிடப் பிடித்தமானது.
இப்படி ஒன்றாகப் படித்து படுத்து ஆடிப்பாடி வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வேறு வேறு திசைகளுக்கு பயணப் பட்டது.
சில ஆண்டுகள் கழித்து என் தோழியின் கணவருக்கு எங்கள் ஊருக்கே மாற்றல் கிடைத்தது. ஆனால் என்தோழி பார்க்க பரிதாபமாக இருந்தாள். உடல்நிலை சரியில்லையென அறிந்தேன்.
ரத்தமில்லாமல் வெளுத்துப் போயிருந்தாலும் அவளது வேடிக்கைப் பேச்சும் ஜோக்கடிக்கும் திறமையும் சற்றும் குறையவில்லை.நான் என் தந்தையாரைப் பார்க்க பணியிடத்திலிருந்து நேரே போகும்போதெல்லாம் அவளும் அங்கு வந்துவிடுவாள் வெகு நேரம் பழங்கதைகள் பேசுவோம். அப்போது என் தாயார் காலமாகியிருந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அவளுக்கு என் தாயார் மேல் மிகுந்த பிரியம். சில மணித் துளிகளாவது அவர்களைப் பற்றிப் பேசாமல் போகமாட்டாள்.
ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறினாள்."ருக்கு, அம்மா நம்ம சின்ன வயசிலே கேழ்வரகு தோசை செய்து போடுவார்களே, எவ்வளவு ருசியா இருக்கும்!தேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியா?"
நான் மனம் நெகிழ்ந்து போனேன்."ரெசிப்பி சொல்றேன் அதே மாதிரி செய்யேன்." ஆனால் " எனக்கு வரலை.நீதான் செஞ்சு தரணும்."என்று கூறியபோது மறுநாளே செய்து கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன்.
ஆனால் மறுநாள் நான் வேலை விஷயமாகக் கடலூர் செல்ல வேண்டி இருந்தது.ஒரு வார வேலை என்று எண்ணியவள் இரண்டு வாரங்கள் தங்க வேண்டி வந்து விட்டது.ஊர் வந்து சேரும் முன்பாகவே அவள் திடீரென்று காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.
உடனே எனக்கு கேழ்வரகு தோசைதான் நினைவுக்கு வந்தது. என்முன் நின்று எங்கே தோசை என்று கேட்பது போல் தோன்றும். இன்று அவளை நினைத்தாலோ  அல்லது கேழ்வரகு என்ற சொல்லைக் கேட்டாலோ அவளின் முகம் என் முன்னே வந்து என்னை வேதனைப் படுத்தும். பணி முடிந்து திரும்பியபின் செய்து கொடுக்கலாம் என நினைத்த என் கணக்குத் தவறி விட்டது.மனித வாழ்க்கையில் எப்போது அது முடியும் என்பதை கணக்குப் போட நம்மால் இயலுமா? உடனே அவள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு நான் ஊருக்குப் போயிருந்தால் இந்த மனக் குறு குறுப்பிலிருந்து  தப்பியிருக்கலாம். அவளைப் பிரிந்த வேதனையை விட இந்த வேதனையே என்னை இன்றளவும் வாட்டுகிறது.
அதன்பின் யாருக்கேனும்  ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றி விட்டால்  இயன்றவரை உடனே அதைச்செய்து விடுவதைப் பழக்கமாகக் கொண்டேன். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாக நான் நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 22, 2012

31 நண்பன் சொன்ன கதை.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு."என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் "என்றான்.
அதற்கு சேகர், "அதென்னடா புதுக்கதை விடுகிறாய்?" என்றான்  
புதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன்  ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி  சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி  வந்தான். "ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று  சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி,"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்."என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.
இப்போது என்ன நடந்திருக்கும்?யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.
சேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com


Sunday, September 16, 2012

30-ஆசிரியர் சொன்ன கதை.

 ஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்..
ஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார்.படுக்கையில் இருந்த அவரைப் பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
புலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.
ஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பனைப் பார்க்க வ்ந்தார்.சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.படுத்திருக்கும்புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியவர்  தன் மகளை அழைத்தார்.
"அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா" என்று கூறினார்,
அவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே.அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.
அந்தக் காலத்தில் பாலை ஆடைநீக்குவதற்காக துணி வைத்திருப்பார்கள்.அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள்.ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.
அதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்."ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா?" என்றாள் அந்தப்பெண்.
உடனே புலவர் புன்னகை மாறாமல்"இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும்  கசக்கவில்லை."என்றார்.
தான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம் 
 திருந்தினாள் புலவரின் மகள்.
பெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Monday, September 10, 2012

29.எங்கோ படித்த கதை

.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே  நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் "அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,
"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்."பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே."என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.
சட்டென்று அந்தப் பையன் "அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா?"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்."என்று விளக்கினார்.
இவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட  காட்டாமே இருக்கியே."என்று கூறியவர்,"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய."என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்."ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு  எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல்  உண்மை.
என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Saturday, September 1, 2012

மனம் கவர்ந்த கதை.

மனம் கவர்ந்த கதை.
-ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள்.
கிணறு வெகு தொலைவில் இருந்ததால் ஒரு நீண்ட கொம்பின் இரு முனைகளிலும் குடத்தைக் கட்டி அதைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவாள்.சிறிது நாள் கழித்து அந்த இரண்டு குடங்களில் ஒன்று ஒட்டையாகிப் போனது.அதனால் அந்தப் பானையில் பாதி நீர்  
வரும் வழியெங்கும் சிந்திக் கொண்டே வரும். வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்தக் குடத்தில் பாதி நீர்தான் இருக்கும். 
ஒரு நாள் நீர் நிறைந்த பானையின் அருகில் பாதி நீர் இருந்த பானை அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அந்தப் பானை "அய்யோ பாவம் உன்னால் நிறைய நீர் கொண்டு வர முடியவில்லை. என்னைப் பார். நான் அந்த எஜமானிக்கு எவ்வளவு நீர் கொண்டு வருகிறேன்"என்று கர்வமாகப் பேசி ஏளனம் செய்தது.
ஓட்டைப் பானை பதில் சொல்லாமல் குனிந்து கொண்டது.அது சில நாட்கள் வரை பொறுமையாக இருந்தது. ஓட்டையாகி விட்ட போதும்  எஜமானி ஏன் இதையே தூக்கி வருகிறாள் என்று அது திகைத்தபடி இருந்தது. ஒருநாள் மனம் பொறுக்காமல் அந்த ஓட்டைப்பானை கூறியது."அம்மா, என்னால் பானை நிறையத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை.அதனால் என்னை உடைத்துவிட்டு வேறு நல்ல பானையை வாங்கிக் கொள்."
அந்தப் பெண் சிரித்தாள்."உன்னால் எனக்கு பயன் குறைவு என்றுதானே நினைக்கிறாய். இதோபார். கிணற்றிலிருந்து வீடு வரும் வரை பூக்களாக இருக்கிறதே அதைப் பார்த்தாயா.உன்னிடமிருந்து சிந்தும் தண்ணீர் விழும் இடத்தில் நான் பூக்களின் விதைகளைப் போட்டேன்.அதுதான் வழியெங்கும் பூக்களாகச் சிரித்து நம்மை மகிழ்விக்கின்றன. அதனால் உன்னால் ஏதும் பயனில்லையென்று வருந்தாதே.என்றாள் அதைக்கேட்டு அந்த ஓட்டைப் பானை நம்மாலும் ஏதோ பயன் இருக்கிறது என்று புரிந்து கொண்டு சிரித்தது நல்லபானையும் அதைப் பார்த்து நட்புடன் சிரித்தது. 
இந்தக் கதையைப் படித்தபோது பயனற்றது என்பது இறைவனின் படைப்பில் ஏதுமில்லை.அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்தும் பொறுப்புதான் நமக்கு வேண்டும்.என்று ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.




Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, August 30, 2012

நினைத்துப் பார்க்கிறேன்.

நினைத்துப் பார்க்கிறேன்.
என் இளமைப் பருவம்.பதினெட்டு வயதில் திருமணமாகி கணவரின் இல்லத்தில் வாசம். வீட்டில்  வேலை அத்துடன் அரசுத் துறையில்  
ஆசிரியர் பணி. வேலைப் பளு அதிகம். வீட்டிலும் மூன்று குழந்தைகள். வயதானவர், குழந்தைகள், விருந்தினர், என்று கவனித்துச் செய்யவேண்டிய நிலை. பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டிய நிலை.எந்தக்  குழந்தையையும் சீராட்டி பாராட்ட இயலாத நிலைமையில் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விட்டு பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டிய கட்டாயம். மாலையில் களைத்து வந்தால் மீண்டும் இரவுக்கான வேலை. இப்படிப் போயிற்று வாழ்க்கை.
ஆனால் இன்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.அவர்களின் மூன்று வயது மகள் எழுந்தவுடன் அழுது கொண்டேயிருந்தாள். அவளை எடுத்து அணைத்து கொஞ்சி விளையாட்டுக் காட்டி குடிக்கப் பால் கொடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் சமாதானமானாள்.அதுவரை அந்தக்குழந்தையின் பெற்றோர் அவளைத் தவிர உலகமில்லை என்பதுபோல அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சியைப் பார்த்தபோது நான் எவ்வளவு பெரிய சுகத்தை சுவர்க்கத்தை இழந்திருக்கிறேன் என்று புரிந்தது.இதேபோல என் இரண்டு வயது மகன் தூக்கு என்று கைகளைத் தூக்கியபோது அவன் அழ அழ அதைக் கவனிக்காது சென்றிருக்கிறேன். காரணம் வேலைப் பளுவுடன் கடமைக்காக ஓடவேண்டிய நிலை. ஆனால் இன்று தனிமையில் அந்த நாளின் நினைவு எழும்போது மனம் ஏங்குகிறது. மனம் கனக்கிறது.இந்த நிலை என்போன்ற பெண்களுக்கு வரக்கூடாது என்பதால் சிறு குழந்தைகளை அவர்களை முடிந்தவரை கொஞ்சிப் பேசுங்கள்.அணைத்து அரவணைத்து மகிழுங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த இன்பம் கிட்டாது.தான் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சி மகிழாமல் போனோமே என்று வயதானபின் வருந்துவதில் பயனில்லை.
'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்' என்று வள்ளுவரின் வாய்மொழி எவ்வளவு உண்மையானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். 






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, August 9, 2012

26 கண்ணனின் மனம்

Lord Sri Krishna




இன்று கண்ணனின் பிறந்த நாள்..கோகுலாஷ்டமி என்று இந்த நாளைக் கொண்டாடுகின்ற சிறப்பான  நாள்.இதுபோன்ற நாட்களில் கொண்டாடுவது மட்டுமல்லாது இந்த நாள் மூலமாக இறைவன் நமக்குக் காட்டும் பல நல்ல பண்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கண்ணன் அரசகுமாரனாகப் பிறந்து ஆயர்பாடியில் வளர்ந்து ஆடு மாடு மேய்த்து எளிமையாக வாழ்ந்தான் என்ற கதை நமக்குத் தெரியும்.எளிய சிறுவர்களான ஆயச் சிறுவர்கள்தான்  அவனது உயிர்த் தோழர்களாக இருந்தனர்.அவர்களுடன் அவன் ஆடிப் பாடி மண்ணில் புரண்டு விளையாடி  உயிர் நண்பனாகத் திகழ்ந்தான். அந்த ஆயச் சிறுவர்களும் கண்ணனைத் தங்களின் உயிராக எண்ணி இருந்தனர்.கண்ணனையே தங்களின் தலைவனாக எண்ணி ஒவ்வொரு சொல்லும் செயலும் கண்ணனுக்காகவே என்று வாழ்ந்து வந்தனர்.
            ஒருநாள் கண்ணன் அமர்ந்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்த அச் சிறுவர்கள் அவனுக்கு மணி மகுடம் சூட்ட எண்ணினா வெகு நேரம் சிந்தித்தனர். அவன் அழகுக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு ஒரு சிறந்த மகுடத்திச் சூட்ட எண்ணினர்.அப்போது அங்கே வந்த ஒரு மயிலைப் பார்த்தனர்.உடனே மயிலின் பின்னே ஓடி இறகுக்காகக் கையேந்தினர்.அவர்கள் கண்ணனின் நண்பர்களன்றோ.அவர்கள் கேட்டதும் கொடுப்பது எத்தனை புண்ணியம் என்று அந்த மயில் எண்ணியதோ என்னவோ.தன் மேனியிலிருந்த மயில் பீலிகளை உதிர்த்தது.அதனைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்த அந்த கோபச் சிறுவர்கள் அதனை கண்ணனின் தலையில் செருகினார்.  
கண்ணன் மகிழ்ச்சியோடு சிரித்தான்.தினமும் மயில் பீலி அவன் தலையை அலங்கரித்தது.
கம்சவதம் முடிந்தபின்பு மன்னனாகக் கண்ணன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது மறக்காமல் மயில் பீலியைத் தன் நண்பர்களின்  அடையாளமாகக் கண்ணன் சூடிக் கொண்டதுதான் அவனது உள்ள உயர்வை எடுத்துக் காட்டுகிறது. எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் நம் அன்புக்குரியவர்களையும் நம் மீது அன்பு செலுத்தியவர்களையும் நாம் மறக்கலாகாது என்ற சிந்தனையை இந்தப் பண்டிகை நாளில் நாம் தெரிந்து கொள்வோம்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Thursday, July 19, 2012

25-பிஞ்சு நெஞ்சம்.

நான் ஆசிரியையாகப் பணியேற்ற புதிது. முதலில் ஐந்தாம் வகுப்பிற்குதான் ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.அந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய போதிய அறிவும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.அதனால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கதை மூலமாகக் குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம்.கதை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது/ அதுவும் குழந்தைகளுக்குப் பிடிக்கக்கேட்பானேன்.அப்படி ஒருநாள் அம்மாவைப் பற்றிய என் கற்பனைக் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
அம்மாவின் அன்பு நம்மீது அவள் கொண்டுள்ள  ஆசை அக்கறை நமக்காக அவள் செய்யும் தியாகம் வேலைகள் என்றெல்லாம் சொல்லிவந்தேன்.சில குழந்தைகள் தன் அம்மாவும் அப்படித்தான் என பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கேவல் சத்தம் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி அழுவது தெரிந்தது.கண்கள் குளமாக கேவலுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் வருத்தமாகிவிட்டது எனக்கு. அவளை அருகே அழைத்தேன்.தயங்கியவாறு வந்த பெண் தன் அழுகையை நிறுத்தமுடியாமல் தவித்தாள்.அருகே இருந்தவள்" டீச்சர், அவளோட அம்மா இறந்துட்டாங்க அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமாம்." என்ற போது என் மனத்துக்குள் யாரோ சாட்டையால் அடிப்பதைப்போல் வலியை உணர்ந்தேன்.
.
ஏதோ அறிவுரை கூறுவதாக என்ணிக் கொண்டு சற்று மிகைப் படுத்திக் கூறி இந்தப் பெண்ணின் மனப் புண்ணைக் கீறி வேதனைப் படுத்தி விட்டதற்காக மிகவும் வருந்தினேன்.

பின்னர் பேச்சை மாற்றி வகுப்பை சமநிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண்ணின் வேதனை படிந்த கண்களையும் ஏக்கத்தில் துவண்ட மனவாட்டத்தையும் என்னால் மறக்க இயலவில்லை.
 
அன்று மாலையே அவள் இல்லம் சென்று அவளையும் அவள் தந்தையையும் பார்த்துப் பேசினேன். மீண்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மலர்ச்சியையும்  பார்த்தபிறகே என் மனம் ஓரளவு அமைதியடைந்தது.
யார் மனமும் புண்படாமல் பேசவேண்டும் என்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.என் மனதை விட்டு அகலாத நினைவு என்றே சொல்லலாம்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Sunday, July 8, 2012

24.அமெரிக்க தீபாவளி

அமெரிக்க தீபாவளி.
நாட்டுக்கு நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
அந்தந்த  நாட்டுக் கலாச்சாரத்தின்படி சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவிலும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் நாளை
சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றனர். அரசாங்க விடுமுறை நாளான இன்று மாலையில் நமது நாட்டு தீபாவளி நாள் போல இங்கும் மத்தாப்பு கொளுத்தி ஊரையே ஒளி வெள்ளமாக மாற்றுகின்றனர்.
ஒவ்வொரு நகரிலும் ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரும் கூடுகின்றனர்.இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வண்ண மயமான  மத்தாப்பு கொளுத்தும் காட்சி சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெறுகின்றது.
இந்த வண்ணக் காட்சியைக் காண அமெரிக்க மக்கள் கூடியிருக்கும் காட்சியை படத்தில் பாருங்கள்.







தீப ஒளியையும் மக்கள் கூட்டத்தையும் காணும் போது பெரிய பண்டிகையைக் கொண்டாடிய
திருப்தி நம் மனதுக்கு ஏற்படுகின்றது.
எந்த நாடாக இருந்தாலும் குழந்தைகள் உலகமே ஒன்றுதான் என்பதை அந்நாட்டுக் குழந்தைகள் ஆரவாரத்துடன் பூவாணத்தை ரசித்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காட்சி முடிந்தபின் எங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்தை நாங்கள் அடைய அரைமணி நேரம் ஆயிற்று எங்கள் கார் இருந்த இடத்திலிருந்து நகர் அரைமணி நேரம் ஆயிற்று.அத்தனை நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்று கொண்டே இருந்தன.ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்ட நாங்கள் வீட்டை அடைய சுமார் பதினொன்றரை மணி ஆயிற்று. இத்தனை கூட்டம் இருந்தாலும் எந்த சத்தமும் இன்றி அமைதியாக நகர்ந்துகொண்டு  இருந்ததுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்..


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Friday, July 6, 2012

23--அமெரிக்காவில் இந்தியா.

அமெரிக்காவில் இந்தியாவா  என்று ஆச்சரியப்படலாம். எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.ஆனால் நியூஜெர்சியில் எடிசன் என்ற இடத்தில் பெரிய தெருவில் நுழைந்தால் வரிசையாக புடவை அழகழகான உடைகள் நகைக் கடைகள், சிறுவர்க்கான உடைகள் நமது சிற்றுண்டி வகைகள், முக்கியமாக தோசை வடை போன்றவை விற்கும் கடைகள் வரிசையாக இருப்பதைப் பார்த்து அசந்து போனேன்.

--
     இதோ மேலே உள்ள படத்தில் நம் ஊர் பொம்மைக் கடைபோல வரிசையாக பொம்மைகளை அடுக்கி வைத்துள்ளனர்.அத்துடன் இங்கு பெரிய மண் பொம்மைகள் கிடைக்கும் இடமும் இருப்பதாகச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.
அருகே உள்ள இன்னொரு படத்தில் நான் பார்த்து மகிழ்ந்த புடவைகளை  நீங்களும் கண்டு மகிழுங்கள்.  மிகப் பிரம்மாண்டமான இடத்தில்  புடவைகளை வைத்துள்ளனர். நான் சுட்டிக் காட்டுவது ஒரு துளிதான்.                         
    

இதுதான் இந்தியன் ரெஸ்டாரென்ட்.நாங்கள் தேநீர் குடிக்கும் அழகை நீங்களும் பாருங்கள்.எங்களுடன் வந்திருந்த குழந்தைகள் விரும்பிய உணவை இங்கு சுவைத்து மகிழ்ந்தனர்.
அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியாவைப் பார்த்த திருப்தி என் மனதுக்கு ஏற்பட்டது. சென்னை திரும்பும் ஆவலை இந்த நிகழ்ச்சி எனக்குள் தூண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com