Saturday, September 22, 2012

31 நண்பன் சொன்ன கதை.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு."என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் "என்றான்.
அதற்கு சேகர், "அதென்னடா புதுக்கதை விடுகிறாய்?" என்றான்  
புதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன்  ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி  சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி  வந்தான். "ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று  சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி,"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்."என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.
இப்போது என்ன நடந்திருக்கும்?யோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.
சேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.






ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com


1 comment:

  1. மிகவும் அருமை...

    இந்தக்கதையை வேறு மாதிரி எழுதி (வரும் பதிவில்-draft-ல்) வைத்துள்ளேன்... பல விசயங்களில் இந்தக்கதையை பயன்படுத்தலாம்...

    மிக்க நன்றி அம்மா...

    ReplyDelete