Thursday, September 15, 2011

9-அப்பாவின் அன்பு

அப்பாவின் அன்பு.
அப்பா என்றாலே பிள்ளைகளுக்குச் சற்று பயம்தான்.அப்பா எவ்வளவு அன்பு காட்டினாலும் சில சமயங்களில் அவர் காட்டும் கடுமையும் கோபமும் நமது மனதில் பயத்தை உண்டாக்கி விடுகிறது.அதனால் அப்பா என்றாலே சற்று பயம்தான் எல்லோருக்கும்.
என் அப்பாவும் அப்படித்தான்.அவர் எப்போது கோபத்தைக் காட்டுவார் எப்போது சிரிப்பார் என்றே தெரியாது.அதனால் அவர் ரொம்ப கோபக்காரர் என்றே நாங்கள் முடிவு செய்து சற்று ஒதுங்கியே இருப்போம்.
தேர்வு முடிந்து விடுமுறையும் தொடங்கியது. பள்ளி ஆசிரியராக இருந்த எங்கள் சித்தப்பா வந்திருந்தார் அவர் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவார். அதனால் சிறுவர்களான நாங்கள் அவரது பேச்சை ரசிப்போம். அவர் இருக்கும் இடத்திலேயே நாங்களும் இருப்போம். அப்படித்தான் ஒருநாள் இரவு.சாப்பாடு முடிந்து சித்தப்பா அப்பாவுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தார்.சித்தப்பா ஒரு நாற்காலியிலும் அப்பா சாய்வு நாற்காலியிலும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.நாங்களும் சித்தப்பாவின் பேச்சை ரசிப்பதற்காக போய் அமர்ந்தோம்.
அந்த இடம் சற்று சிறியதாக இருந்ததால் அவரவருக்குக் கிடைத்த இடத்தில் அமர்ந்தோம். நானுமப்பாவின் தலைப் பக்கம் திண்ணையில் இருந்த சிறிய இடத்தில் ஒண்டியபடி அமர்ந்து கொண்டேன்.
அப்பது அம்மா என்னிடம் பால் குவளையைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.நானும் அதைக் கையில் வாங்கிக் கொண்டேன்.அந்த சமயம் பார்த்து சித்தப்பா ஏதோ ஜோக்கடித்தார்.அனைவரும் குபீரென்று சிரிக்க நான் வாய் நிறைய ஊற்றிக்கொண்ட பாலை புர்ரென நீர்வீழ்ச்சிபோல வெளியேற்றினேன்.அந்த நீர்வீழ்ச்சி சரியாக என் முன்னால் தலைவைத்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த என் அப்பாவின் வழுக்கைத் தலயில் விழுந்து உடலெங்கும் வழிந்தது.நான் உமிழ்ந்து முடிக்கும் வரை அப்படியே அமர்ந்திருந்த அப்பா மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தார்.
எங்கள் அனைவருக்கும் அதுவும் எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக அப்பா புன்னகையுடன் பார்த்து, "முடிந்ததாம்மா? இன்னுமிருக்கா?"என்று கேட்டுச் சிரித்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சரியத்திலும்  மிக்க ஆனந்தமேற்பட்டது.
அப்பாவின் அன்பு எத்தகையது, அவர் கண்டிப்பெல்லாம் அன்பின் அடிப்படையில்தான் என்பதை அறிந்தபோது அவரது அன்பை எண்ணிக் கண்களில் நீர் நிறைந்தது.இப்போதும் தான்.

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

1 comment: