Monday, August 29, 2011

8. இவர்கள் மனிதர்கள்

இவர்கள் மனிதர்கள்.
ஒரு  ஞாயிற்றுக்கிழமையன்று அம்பத்தூரிலிருக்கும் என் உறவினரைப் பார்த்து வரலாம் எனப் புறப்பட்டோம்.நாங்கள் செல்லும் வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அத்துடன் இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.அதனால் கொஞ்சம் பழங்களும் பிஸ்கட் பாக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டு போனோம்.
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.நாங்களும் கொண்டுவந்த பழங்களைப் பெரியவரிடமும் பிஸ்கட்டுகளைக் குழந்தைகளிடமும் கொடுத்தோம்.
அந்தப் பெரியவரின் நலம் விசாரித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தோம்.அந்த வீட்டு இல்லத்தரசி எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தவே சம்மதித்துவிட்டு மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது வாயிலில் "சாமீ..".என்ற குரல் கேட்டது. சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியவர் "யாரது வள்ளியா? வா..வா..நல்லாருக்கியா?" என்று வரவேற்றார்.
சுமார் எழுபத்தைந்து வயதுகொண்ட முதிய பெண் உள்ளே வந்து மூலையில் அமர்ந்தாள்.உழைத்து ஓடான ஒல்லியான உடல்.கண்கள் ஒளியிழந்து காணப்பட்டன.
அவளிடம் அவள் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகள் கவனிப்பதைப் பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார்.
அந்தப் பெண்ணும் தன் உடன் பிறந்தவரிடம் கூறுவது போல்  தன்னைப் பற்றிய விவரங்களைஎல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.அவளுக்குக் காப்பி கொடுக்குமாறு கூறியவர் நாங்கள் கொண்டுபோய்க் கொடுத்த பழங்களிலிருந்து சில பழங்களை அவளுக்குக் கொடுத்தார். மிக்க சங்கோஜப் பட்டவளாய் "இதெல்லாம் எனக்கெதுக்கு சாமீ.நீங்க சாப்புடுங்க."
என்று மறுத்தபோதும் வற்புறுத்தி அவளை சாப்பிடச் சொன்னார்.
சற்று நேரத்தில் அவரது மருமகள் அவரிடம் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தாள்.அதை எண்ணிப் பார்த்த அவர்,"ஏம்மா, ஒரு அம்பது ரூபாய் கூடக் கொண்டு வா."
என்று கூறியவர் அந்தப் பணத்தை அந்த முதியவளிடம் கொடுத்தார்."வள்ளி, இந்த மாசத்திலிருந்து அம்பது ரூபாய் கூடக் கொடுத்திருக்கேன்.இனிமேல் இருநூறு ரூபாய் உனக்கு பென்ஷன்." என்றவர் சிரித்தபடியே அவளுக்கு விடை கொடுத்தார்.காலில் விழாத குறையாக அவரை வணங்கி விடை பெற்றாள் அந்த முதியவள்.
இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர் "இந்தக் கிழவி சிறுவயதிலிருந்து எங்கள் வீட்டில் வீட்டுவேலை செய்து வந்தவள். இப்போது முடியவில்லை. அதனால் அவளை நிறுத்திவிட்டேன்.ஆனால் நாமெல்லாம் பென்ஷன் வாங்கும் போது இருபது வருடமாக வேலை பார்த்த வேலைக் காரிக்கும் நாம் பென்ஷன் கொடுப்பதுதானே முறை."
என்று சொல்லிச் சிரித்தார்.
நான் திகைத்தேன். மனிதநேயம் என்பது இதுதானோ. தன்னைப்போல் பிறரை நினைப்பதை விட சிறந்த மனித நேயம் வேறு உண்டோ. 
என் மனதுக்குள்ளும் ஒரு புரட்சி தோன்றியது. வள்ளலாரும் வள்ளுவனாரும் மற்ற மகான்களும் இதைத்தானே கூறினார்கள்!
மறுநாள் என் வீட்டு வேலைக்காரியை ஒரு சகோதரியைப் போலப் பார்த்தேன்.



ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

No comments:

Post a Comment