Thursday, March 13, 2014

52.navaneedha naattiyam.

           52  நவநீத நாட்டியம்.
                             கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னதுதான் நவநீத நாட்டியம் எனப்பட்டது.
           யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன்
அப்போது அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு வெண்ணை திரள்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது யசோதை "கண்ணா, பானைக்குள் பூதம் இருக்கு. அது வெளியே வந்து உன்னை விழுங்கி விடும்." என்று பயமுறுத்தி தூரப் போகச் சொன்னாள்.
                    அவள் சொன்னதுபோலவே கண்ணனும் பயப்படுபவனைப்போல கண்களை உருட்டி வாயைப்பொத்தி "ஆமாம்மா, அந்த பூதம் உன்னை விழுங்கிவிட்டால் நான் யாரை அம்மா என்று அழைப்பேன். நீயும் தூர வந்து விடு என்று அபிநயித்தான்.அதைப்பார்த்த யசோதை சிரித்தபடியே
"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.
                "அப்படியா, சரி."என்றவனிடம்யசோதை "நான் மத்திலிருக்கும் கயிற்றை வலது பக்கம்  இழுக்கும் பொது வலது கால் தூக்கியும்  இடது பக்கம் இழுக்கும் பொது இடது கால் தூக்கியும் நாட்டியம் ஆடவேண்டும் "என்றாள்.
             அவள் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு  வெண்ணைக்காக
கால்மாற்றி மாற்றி ஆடினான் கண்ணன். யசோதையும் மத்தை வேகவேகமாக இழுத்து கண்ணனை வேகமாக நாட்டியம் ஆடவைத்தாள்.
 
            யசோதையின் வேலையும் முடிந்தது. கண்ணனின் நாட்டியமும் முடிந்தது. ஆடிக்களைத்தவனாக வெண்ணை தின்னும் ஆசையுடன் தாயின் முன்னே வந்து நின்றான் கண்ணன்.யசோதையும் தன கையில் யானைத்தளையளவு திரண்ட வெண்ணையை எடுத்துப் பானைக்குள் போட்டு  மூடிவிட்டாள். சிறிய கடுக்காயளவு வெண்ணையை எடுத்து அதையும் இரு பங்காக்கி ஒரு பங்கை கண்ணனின் கையில் வைத்தாள்
             அந்தவெண்ணையைக் கையில் வாங்கிய கண்ணன் தாயைப் பார்த்துச் சிரித்தான்.அந்தவெண்ணையை வாயில் போட்டுக் கொண்டு அடுத்த கையை நீட்டினான். அவனது சிரிப்பின் அழகில் மயங்கிய யசோதை இன்னொரு உருண்டை வெண்ணையைக் கையில் வைத்தாள்  உடனே அடுத்த கையை நீட்டிச் சிரித்தான் திருடன். யசோதை மீண்டும் ஒரு உருண்டை வெண்ணையை அவன் கையில் வைத்தாள்
               அவள் முதலில் தருவதாகச் சொன்ன யானைத் தலையளவு வெண்ணையை வாங்கியபின் புன்னகைத்தவாறே ஓடிவிட்டான் அந்தக் கள்ளன்.தன்னை மறந்து கண்ணனின் புன்னகையில் மயங்கி அமர்ந்திருந்தாள்
யசோதை.
        வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். நவநீதம் என்றால் வெண்ணை என்று பொருள். கண்ணனின் லீலை எண்ணி எண்ணி மகிழத் தக்கது.




4 comments:

  1. //"கண்ணா, நான் தயிர் கடையும் வரை நீ நாட்டியம் ஆடினால் உனக்கு யானைத் தலையளவு வெண்ணை தருவேன்."என்றாள்.//

    அழகான விளக்கங்கள். அருமையான பதிவு.

    நவநீத நாட்டியம் பற்றி அறிந்தது ...... நவநீதம் போன்றே ருசியாக ... மணமாக ... மனதுக்கு இதமாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. யானைத் தலை அளவு வெண்ணை..... :)

    சிறப்பான நாட்டியம் பற்றிய பதிவு ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  3. நினைத்தது நிறைவேறியது... கள்ளனை ரசித்தேன்...

    ReplyDelete
  4. வெண்ணைக்காகக் கண்ணன் ஆடிய நாட்டியமே நவநீத நாட்டியம் எனப் படும். //

    கண்முன்னே கண்டு ரசித்தேன். நவநீதகண்ணன் நடனத்தை.

    ReplyDelete