Monday, September 10, 2012

29.எங்கோ படித்த கதை

.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே  நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.
வண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.
வண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.
தன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் "அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது" என்றும்,
"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா."என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.
அவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,
இவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்."பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே."என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.
சட்டென்று அந்தப் பையன் "அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா?"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்."என்று விளக்கினார்.
இவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட  காட்டாமே இருக்கியே."என்று கூறியவர்,"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய."என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
அந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்."ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எடுத்துக்காதீங்க."என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு  எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல்  உண்மை.
என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா!
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

4 comments:

  1. உண்மை தான் அம்மா... பல தடவை தீர விசாரிப்பதே மெய்...

    (இங்கு 13 மணி நேரம் மின்சாரம் இருப்பதில்லை அம்மா... அதனால் தான் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை... விரைவில் கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்... நன்றி அம்மா...)

    ReplyDelete
  2. ஒரே விஷயத்தௌக்கு இரண்டு பக்கங்கள். அருமையான கருத்து கொண்ட கதை ருக்மணி. மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. விஷயத்துக்கு என்று படிக்கவும்.

    ReplyDelete
  4. அப்பா... முடிவு படித்தவுடன் அதிர்ச்சி....

    தீர விசாரிக்காது எதையும் பேசலாகாது.... என்பதை அழுந்தச் சொல்லும் கதை. பகிர்வுக்கு நன்றிம்மா.

    ReplyDelete