Saturday, July 9, 2016

இறைவனை உணர்ந்தவன்.

ஒரு கிராமம். அங்கு இருக்கும் கோவிலுக்கு கீதையின் பொருளை உணர்த்த ஒரு உபன்யாசகர் வந்தார்.இரவு ஆறுமணி முதல் எட்டு மணிவரை ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பொருள் சொல்லி வந்தார்.நான்கு நாட்கள் கதை சொல்வதாக முடிவு செய்திருந்தார்.
முதல்நாள்.கிராமத்து மக்கள் கூடி அமர்ந்தனர். அங்கு தலையில் முண்டாசும் கையில் தடியுமாக ஒரு வயதான விவசாயியும் வந்து கதை கேட்க அமர்ந்தான்.
இரண்டாம் நாள் பாதிப் பேர்தான் வந்திருந்தனர்.அந்த விவசாயியும் வழக்கம்போல வந்து அவனது இடத்தில் அமர்ந்தான்.கடைசி வரை இருந்து விட்டுச் சென்றான்.
கடைசி நாளன்று வெகு சிலரே வந்திருந்தனர். அனைவரும் சென்றபின் கண்ணில் நீர் தளும்ப அமர்ந்திருந்த விவசாயியிடம் உபன்யாசகர் கேட்டார்.
"ஏனப்பா, நான் சொல்லும் உபன்யாசத்தைப் பலர் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் நீ மட்டும் கண்ணால் நீர் விட்டு ரசித்தாயே என்ன புரிந்து கொண்டாய்?"
கண்களைத் துடைத்துக் கொண்ட அந்த விவசாயி சொன்னான்.
"அய்யா, நீங்க சொன்னது எனக்கு ஒண்ணும்  புரியல.ஆனா தினமும் நீங்க கதை சொல்லி முடிக்கும் வரை அந்த க்ருஷ்ண பரமாத்மா கையில் கடிவாளத்தைப் புடிச்சுக்கிட்டு தலையைத் திருப்பிக்கிட்டே பேசிக்கிட்டு  இருக்கிறாரே.பாவம் கழுத்தை அவருக்கு எவ்வளவு வலிக்கும்னு நினைச்சுக்கிட்டேன்.அழுகையா வருது சாமி"
உபன்யாசகர் திடுக்கிட்டார்.நாமெல்லாம் சந்தேகத்தோடு இறைவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க இந்த ஒன்றும் அறியாத விவசாயி எத்தனை ஆத்மார்த்தமாக இறைவனோடு ஒன்றியிருக்கிறான் கீதோபதேசப் படத்தில் இருக்கும் கிருஷ்ணனை உண்மையான க்ருஷ்ணனாகவே எண்ணி அவனுக்காக வருந்தும் இவனன்றோ உண்மையான பக்தன். 
கீதையின் உண்மைப் பொருளை இவனன்றோ அறிந்தவன்" என்று எண்ணியவர் தனக்கு அத்தகைய மனம் இல்லையே. இனி உண்மையான பக்தியுடன் இறைவனைப் பற்றிச் சொல்லவேண்டும் என முடிவு செய்து கொண்டார்.
 








ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

1 comment:

  1. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

    ReplyDelete