Thursday, April 4, 2013

இப்படியும் சிலர்.


                            எங்கள் இல்லத்திற்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். நல்ல சிவந்த நிறத்துடன் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்.தன மகனும் மருமகளும் மிகவும்பாராமுகமாக இருப்பதாகவும் உறவுக்காரர்கள் யாருக்கேனும் உதவி செய்து கொண்டு இருந்து விடுவதாகவும் சொல்லவே என் மகளும் சம்பந்தியும் அவளைத் தங்கள் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டனர். சுமார் ஒரு வாரம் வரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்  அந்த அம்மாள்.

                        அடுத்தவாரம் ஒரு நாள் என்மகள் உடல் நலமில்லைஎன்று டாக்டரைப் பார்க்கப் போய்விட்டாள்  நானும் ஊரில் இல்லை. வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு அலமாரியிலிருந்த நகைப் பையிலிருந்து சிறு சிறு தோடு மூக்குத்தி தங்கக் காசுகள் என சட்டெனத் தெரியாதசிறுசிறு  பொருளாக சுமார் நான்கு சவரனுக்கு மேல் எடுத்து தன மடியில் முடிந்து கொண்டு விட்டாள்  என்மகள் வீடு வந்தவுடன் தன மகனிடமிருந்து விபத்து ஏற்பட்டு விட்டதாகப் போன்  வந்துள்ளது ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்  விட்டாள் 

                       இரண்டு மூன்று நாட்கள் கழித்து என் மகள் தங்கள் ஒரு சவரன் காசைக் கடையில் கொடுத்து நகையாகச் செய்யவேண்டும் எனத் தேடும்போது தான் பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிந்தது.எங்கேயோ வைத்து விட்டேன் என்று பல இடங்களிலும் தேடினாள் அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது.அந்த அம்மாள் வேலைக்கு வருவதாகச் சொன்னாளே இன்னும் வரவில்லையே என்றவுடன் சந்தேகம் அவள்மேல்  தோன்றியது.

                     ஊரிலிருந்து திரும்பி வந்த நான் என் மகளின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்ற என் நகைகளைப் பார்த்தபோது என் திருமணத்தில் போட்ட மூக்குத்தி வரலக்ஷ்மி அம்மனுக்குப் போடும் நகைகள் காசுகள் என ஒன்றரைப் பவுனுக்குக் காணாமல் போயிருந்தன.
                     அவளைத் தேடிப்பிடித்து பயமுறுத்திக் கேட்டபோது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழுதாள். அந்த நகைகளை மார்வாடி கடையில் விற்றதையும் கூறி அழைத்துச் சென்றாள் எனக்கோ நான் அம்மனுக்கு ஐம்பது வருடங்களாகப் போட்டு வந்த அந்த மூக்குத்திகள் கிடைக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு.ஆனால் மார்வாடியோ அம்மா நாங்கள் பழைய பொருட்களை ஒரு நாள் வைத்திருப்போம் மறுநாள் உருக்கிவிடுவோம். என்று உதிர்த்த கற்களைக் காட்டினார். எனக்கோ கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிந்தது.அந்தப் பெண் பத்தாயிரம் ரூபாயை எனக்கும் , என்மகளுக்கு ஒரு சவரன் சங்கிலியும் கொடுத்து சரி செய்துவிட்டாள் . ஆனால் இன்று ஒரு மூக்குத்தியின் விலை பத்தாயிரத்தைத் தொடுகிறது. பொக்கிஷமாக நான் ஐம்பது ஆண்டுகளாக பத்திரமாகப் பாது காத்துவந்த அம்மனின் மூக்குத்திகள் என்னை விட்டுப் போகக் காரணமான அந்தப் பெண்மணியின் செயலை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறேன்.









ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


4 comments:

  1. என்ன பெண்மணி அவள்! இத்தனை புராதனமான மதிப்புள்ள பொருள் திருட்டுப் போவதில் மிகவும் கஷ்டம் தான்.....

    ReplyDelete
  2. வருத்தம் தான் அம்மா... அதுவும் 50 வருடம் எனும் போது மறப்பதும் சிரமம் தான்... கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கு திரும்ப வரக்கூடும்...

    ReplyDelete
  3. அன்பு ருக்மணி மேடம்,
    நம்பி அடைக்கலம் கொடுத்ததற்கு இவ்வாறு செய்துவிட்டாரே,.

    தங்கள் இழப்பை அம்மனே ஈடு செய்யட்டும்.

    ReplyDelete
  4. படிக்கும் எங்களுக்கே, மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கும் பதிவாகத்தான் உள்ளது.உங்களுக்கு எப்படியிருக்கும் என உணர முடிகிறது.

    இன்று வீட்டு வேலைக்கு வரும் யாரையுமே நம்பத்தான் முடியவில்லை.

    50 வ்ருடங்க்ளாக வரலக்ஷ்மி அம்மன்க்கு பூஜை செய்த அம்மன் நகை காணாமல் போய் உள்ளது மனதுக்க்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். மனதை ஆறுதல் செய்துகொள்ளுங்கள். வேறு புதிதாக ஒன்று வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். என்ன செய்வது?

    அனைவரையும் உஷார் படுத்தியுள்ள பதிவுக்கு நன்றிகள்..

    ReplyDelete